Friday, August 27, 2004

ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் 100வது பதக்கம்

இந்தியா ஒலிம்பிக்ஸில் 100 பதக்கங்களை வென்றது. இதில் 25 தங்க பதக்கங்கள் அடங்கும். முதல் இடத்தில் இருக்கும் சீனாவிற்கு கடுமையான போட்டியாக , இந்தியா விளங்கி வருகிறது.அடுத்த ஒலிம்பிக்ஸில் , இந்தியா முதல் இடத்தை பிடிப்பது உறுதியாகி விட்டது. இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் , அரசாங்கம் , வர்த்தக நிறுவனங்கள் , விளையாட்டு கட்டமைப்புகள், பயிற்சி நிறுவனங்கள் இவை அனைத்தும் இணைந்து வெல்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு , திறமையாளர்களை இள வயதிலேயே கண்டறிந்து கடும் பயிற்சி அளிப்பதும் , வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கும் பரிசுகளும் , சலுகைகளும் வேறெந்த துறையில் அடைய முடியாத அளவிற்கு உயர்ந்த அளவில் இருப்பதுமே. வீணாய் போன கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டுகளை தடை செய்தது தான் இந்த அளவிற்கு வெற்றி கிடைத்ததற்கு உண்மையான காரணம்.

பி.கு.
1.நாஸ்ட்ராடமஸ் மாதிரி இதை எழுதி வைத்து விட்டேன். 3979 க்குள் ( நாஸ்ட்ராடமஸ் கணிப்புகள் தொடும் கடைசி வருடம்) கண்டிப்பாக இது நடக்கும்.
2. நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கு , இது தானா முக்கியம் என்று நினைக்கின்றீர்களா?. உணவு , உடை , உறக்கம் மட்டும் போதாது. அமைதி , கலை, விளையாட்டு , இலக்கியம், சம உரிமை , சுதந்திரம் என்று எல்லாம் இருந்தால் தான் வாழ்க்கை. கடந்த 10 நாட்களக , ஒவ்வொரு நாளும் 5 மணி நேரம் ஒலிம்பிக்ஸ் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்தா , வேற என்ன நினைக்க தோன்றும். நேற்று கனவில் கூட ஒரு வெண்கல பதக்கம் தான் வந்தது.

Monday, August 23, 2004

ஒலிம்பிக்ஸில் நட்புச் சாரல்

நூறு மீட்டர் அரையிறுதியில் ஜஸ்டின் கேட்லின் (Justin GATLIN ) மற்றும் ஷான் க்ராஃபோர்ட் (Shawn CRAWFORD) இருவரும் இலக்கிற்கு அருகாமையில் வந்தவுடன் ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுத்து , ஓடிக்கொண்டிருக்கும் போதே நீ முதலில் செல் என்று பேசிக் கொண்டதை பார்த்து வர்ணனையாளர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். ஓட்டம் முடிந்தவுடன் , நெஞ்சோடு மோதிக் கொள்வதம் , ஓடுவதற்கு முன் வாழ்த்திக் கொள்வதும் , இறுதியில் ஜஸ்டின் வென்றவுடன் , மகிழ்ச்சியோடு ஷான் வாழ்த்தியதை பார்த்த போது நட்புச் சாரல் அடித்தது தெரிந்தது.

கர்ட்னி குபெட்ஸ் (Courtney Kupets) கால் காயம் காரணமாக , பதக்க நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படாத நிலையில் , தங்க பதக்கம் வென்ற கார்லி பேட்டர்ச்ன் (Carly PATTERSON ) அவரின் உதவியாளராக , சமனில்லாத பார் ஜிம்னாஸ்டிக்ஸ் ( Uneven Bars) போட்டியில் , கர்ட்னிக்காக பாரில் சாக் தடவி சரிபார்த்த போது நட்புச் சாரல் அடித்தது தெரிந்தது.கர்ட்னி வெண்கலம் வென்றார்.

டைவிங் அரையிறுதியில் முதல் பனிரெண்டு நபர்கள் தான் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்ற நிலையில் , பதிமூன்றாவது இடத்திலிருந்த சாரா ஹில்டெப்ரண்ட்(Sara HILDEBRAND) கடைசி டைவ் அடிப்பதற்கு முன்பு டென்ஷனின் உச்ச கட்டத்தில் இருந்த போது அவரிடம் ஆறுதலாக பேசி தைரியம் கொடுத்த லாரா வில்கின்சன் (Laura WILKINSON ) , தான் தகுதி பெற்றதை விட சாரா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றவுடன் அவர் அடைந்த மகிழ்ச்சியும் , சாராவுடன் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியின் போதும் நட்புச் சாரல் அடித்தது தெரிந்தது.

100 மீட்டர் வண்ணத்து பூச்சி (100m Butterfly) போட்டியில் முதலிடம் வந்த மைக்கேல் பெல்ப்ஸ்(Michael PHELPS),4X100 தொடர் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை , இரண்டாமிடத்தில் வந்த இயன் குரோக்கர்க்கு விட்டுக் கொடுத்த போது (Ian CROCKER) நட்பு சாரல் அடித்தது தெரிந்தது.
பெண்கள் டென்னிஸ் போல பிரபல்யமடைந்து வரும் கடற்கரை கைப்பந்து ( Beach Volleyball) போட்டியில் வெற்றி மேல் வெற்றி குவித்து வரும் கெர்ரி வால்ஸ்(Kerri WALSH) மற்றும் மிஸ்டி மே (Misty MAY) இருவரின் ஆட்டம் முழுவதுமே நட்புச் சாரல் தெரிகிறது ( கூடவே ஜொள் மழையும்).

மகேஷ் பூபதி மற்றும் லியாண்டர் பயஸ் இருவரும் முன்னொரு காலத்தில் வெற்றிகளை குவித்ததற்கு காரணமும் இந்த நட்புச் சாரல் தான்.

Friday, August 20, 2004

இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு ஜே!!!

மீண்டும் ஒரு முறை வெண்கலப் பதக்கம் நூலிழையில் தவறிவிட்டது இந்தியாவிற்கு. ஆனால் , கடைசிவரை போராடி தோற்றதில் பெருமிதம் தான். http://www.nbcolympics.com -ல் உடனுக்குடன் ஆட்டத்தின் புள்ளி விவரங்கள் வந்து கொண்டிருந்தது , நேரில் பார்ப்பது போன்ற நிலையை ஏற்படுத்தி விட்டது. அலுவலகத்தில் , இந்தியர்களின் குழு மின்னஞ்ல்களிலும் ஆர்வலர்கள் சிலர் , ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஆட்டத்தின் நிலையை தெரியப் படுத்தி வந்தார்கள். பொதுவாக , இது போன்ற மடல்கள் அலுவலை பாதிக்கும், அலுவலக அஞ்சலை பயன்படுத்தும் நெறிக்கு எதிரானது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் பெருசுகள் கூட கொஞ்சம் பொறுமை காத்தார்கள். கடைசி செட்டில், எதிரணியை முறியடிக்கும் வாய்ப்பு நமக்கு அதிகம் கிடைத்தும் , வெற்றி கிட்டாதது , பெருத்த ஏமாற்றமே. முதல் செட்டில் ஆரம்பத்தில் கிடைத்த முன்னணி நிலையை உடனே கோட்டை விட்டதும் , இது கடினமான போட்டியாக இருக்கும் என்பது தெரிந்து விட்டது. எனினும் உலக அரங்கில் , இந்தியாவை தலை நிமிர வைத்த இந்தியன் எக்ஸ்பிரஸ் கூட்டணிக்கு என்றென்றும் ஜே!

விஜய் அமிர்தராஜ் , ரமேஷ் கிருஷ்ணன் போன்றவர்கள் விம்பிள்டன் காலிறுதிக்கு சென்றதை விடவும் ,இந்தியாவை டேவிஸ் கோப்பை இறுதி ஆட்டத்திற்கு எடுத்துச் சென்றதை விடவும் கிரிக்கெட் மோகத்தில் திளைத்திருந்த இந்தியர்களை டென்னிஸ் பக்கம் திருப்பியதில் பெரும் பங்கு லியாண்டர் பயஸ் / மகேஷ் பூபதி ஜோடிக்கு உண்டு. அதற்கு சிறப்பு காரணம் , அவர்கள் தனியாக உலக தர வரிசைக்கு ஆடுவதை விட , நாட்டிற்காக ஆடும் போது காட்டும் அதீத உற்சாகம் தான்.

Thursday, August 19, 2004

காற்றே நீதானா!

தென்றலாய் தழுவிய நீதானா
சூரைக் காற்றாய் இன்று!

காதல் தீபத்தை வளர்த்த நீதானா
காட்டுத் தீயாய் கருக்கியது இன்று!

காற்றாலையாய் இயக்கி வந்த நீதானா
அறுந்த மின்கம்பமாக்கியது இன்று!

பாய்மர கப்பலாய் செலுத்தி வந்த நீதானா
காகித ஓடமாய் சுழற்றியடித்தது இன்று!

பருவக் காற்றாய் வந்த நீதானா
கண்ணீர் மழைக்கு காரணகர்த்தாவாய் இன்று!

பூங்காற்றாய் வந்த நீதானா
பாலை அனல் காற்றாய் இன்று!

புல்லாங்குழலாய் இசைத்த நீதானா
பேரிரைச்சலாய் இன்று!

சுவசமாய் இருந்த நீதானா
சிதை எரிக்கும் நெருப்பிற்கு துணையாய் இன்று!

Tuesday, August 17, 2004

Rathore strikes silver

Proud moments for all Indians and truely the armed forces once again keeping the flag flying high.

http://us.rediff.com/news/2004/aug/17medal.htm

Union Defence Minister Pranab Mukherjee on Tuesday congratulated double trap shooter Major Rajyavardhan Singh Rathore on becoming the first Indian to win a silver medal in an individual event at the Olympics.
"You have done the armed forces proud and brought honour to India by your performance par excellence," Mukherjee said in a release in Delhi today.
Rathore, who served the army in the Kargil War, won the silver in double trap shooting with a score of 179 to bring India's first medal at the ongoing Athens Olympics Games.

.

Monday, August 16, 2004

மணிப்பூர்

மணிப்பூரில் என்ன நடக்கிறது? இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை திரும்ப பெற சொல்லி , தற்கொலை மற்றும் ஆர்ப்பாட்ட கலகங்கள் ஒரு புறம்.கடத்தல் , பணம் பறிப்பு, சட்ட ஒழுங்கு சீர்கேடு , இவற்றை கட்டுப்படுத்த தான் இந்த சிறப்பு அதிகாரங்கள் என்று நியாயப் படுத்தி மற்றொரு புறம்.உச்ச கட்டமாக இந்திய பொருட்களை (?) ஒதுக்கச் சொல்லி போராட்டம் வேறு.

இந்தியா வறுமை கோட்டிற்கு கீழே இருந்தாலும் , வளர்ந்த நாடுகள் பட்டியலில் இடம் பெறாவிட்டாலும் , ஒற்றுமையாக பிரச்சனையில்லாமல் இருந்தாலே பெரிய விஷயம் என்றாகிவிட்டது.வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் எங்கே?. அஸ்ஸாம், நாகாலாந்த் என்று வடகிழக்கு மாநிலங்களிலெல்லாம் எப்படி இந்த பிரச்சனை முற்றி விட்டது. ஆரம்பத்திலேயே கவனித்து , சரி செய்யாமல் விட்டது யார் குற்றம் என்று தெரிந்தவர்கள் யாரேனும் பதிந்தால் நல்லது.

லாட்டரி டிக்கெட்டுகளிலும் , வரைபடத்தில் வட கிழக்கில் எங்கோ ஒரு மூலையில் இந்த மாநிலங்கள் உள்ளன என்பதும் , பொறியியல் கல்லூரியில் வேற்று மாநில கோட்டாவில் படித்த ஒன்றிரண்டு மாணவர்களையும் தவிர , வடகிழக்கு மாநிலங்களைப் பற்றி வேறொன்றறியேன் பராபரமே!

இளம் உயிர்கள் , தற்கொலை செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் அளவிற்கா இந்திய ஜனநாயகம் இருக்கிறது?

Wednesday, August 11, 2004

என்னை திட்டியவர்கள்

ஒரு வாரமாய் ஊரில் இல்லை.காலை 4 மணிக்கு வீடு வந்து சேர்ந்தவுடன், வந்திருந்த 362 அலுவலக மின்னஞ்சல்களை மேலோட்டமாக மேய்ந்து விட்டு , பின்னால் அசை போட்டுக் கொள்ளலாம் என்று ஆவலுடன் வலைப்பதிவுகளை பார்க்க ஆரம்பித்தேன். சி(ப)ல பதிவுகளுக்கு 30 , 60 என்று பின்னூட்ட எண்ணிக்கைகளை பார்த்தவுடன், கோடை மழை மாதிரி , எல்லா
வலைபதிஞர்களும் பின்னூட்டம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்களா என்று படிக்க ஆரம்பித்ததில் , கார சாரமாக ஆரம்பித்த விவாதம் நார சாரமாக சென்று கொண்டிருப்பது தெரிந்தது.

இதிலிருப்பது போலில்லாமல் திட்டு வாங்குவதும் சில நல்ல அனுபவங்களாக அமைவது உண்டு. என்னை திட்டியவர்களை எண்ணிப் பார்க்க , இதை விட சிறந்த சந்தர்பம் வேறு ஏது?

திட்டு வாங்குவது என்றவுடன் , பலருக்கு அப்பாதான் ஞாபகம் வரும்.அப்பாவிடம் விவாதம் செய்து , அவரை கோபத்தின் உச்சிக்கு கொண்டு செல்வது எனக்கு கை வந்த கலை. எல்லாரும் அவரைப் பார்த்து நடுங்கும் போது , கொண்ட கொள்கையை (?) விடாமல் , நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அவரிடம் விவாதம் செய்து கொண்டிருப்பேன். அவர் அப்பொழுதெல்லாம் , "பெரிய லார்ட் வேவல் இவரு. இவர் சொல்றதுதான் சரி..." என்று என்னை திட்டுவார். திட்டுவதில் கூட என்னை லார்ட்-ஆக பார்த்தவர்.

மானாமதுரையில் சிறுவர்களெல்லாம் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த கால கட்டம். ஒரு முறை பெரியம்மா மகனின் உடைந்த மட்டையயும், கிரிக்கெட் பந்தும் எனக்கு பரிசாக கிடைத்தது. ( விடாத கெஞ்சலுக்கு பின்).கிரிக்கெட் மட்டை வைத்திருந்ததால் , நான் வைத்தது தான் சட்டம். தேவிலால் போல நான் கேப்டன் பதவி வேண்டாம் என்று, துணை கேப்டன் பதவி வைத்து கொண்டேன். முதலில் மட்டையடிக்க நான் செல்வது வழக்கம். பந்து எப்படி வந்தாலும் , ஸ்டம்பில் பட்டு விடாமல் , மட்டையை சரியாக பந்து வரும் வழியில் வைத்து , அங்கேயே செத்து விழுந்து விடும் படி கட்டை வைப்பது என் வழக்கம். அடித்து விளையாட தெரியாது. அதனால் ஆட்டம் இழக்காமல் , கடைசி வரை விளையாடி ரன் அதிகம் எடுக்காமல் இருப்பது என் வழக்கம்.நண்பர்களெல்லாம் பொறுமை இழந்து , என்னை அடித்து விளையாட சொல்வார்கள். என்னை நேரிடையாக திட்ட முடியாமல் , "டெஸ்மண்ட் ஹெயின்ஸ்" என்று என்னை அழைப்பார்கள். (பின்னாளில் ஒரு நாள் ஆட்டங்களில் ஹெயின்ஸ் அபாரமாக அடித்து ஆடி , என் பெயரை காப்பாற்றியது வேறு விஷயம்.)

பனிரெண்டாம் வகுப்பு படித்த போது , இயற்பியல் ஆசிரியருக்கு என் மேல் கொஞ்சம் கோபம். வகுப்பு முடிய சற்று நேரம் இருக்கும் முன்னரே , அவர் பாடம் நடத்துவதை கவனிக்காமல் , எல்லா புத்தகங்களையும் பையில் எடுத்து வைத்து , தோள் பட்டையில் பையை மாட்டிக் கொண்டு , மணியடித்தவுடன் வகுப்பிலிருந்து ஓடிவிட ஆயத்தமாக உட்கார்ந்திருப்பேன். ஒவ்வொரு நாளும் , நான் செய்யும் ஆயத்தங்களை பார்த்து , அவர் என்னை "கிளர்வுற்ற எலக்ட்ரான்" மாதிரி , ஏண்டா இப்படி வெளியே ஓட ரெடியா இருக்கே என்று திட்டுவார்.

மற்ற திட்டல்கள் மற்றொரு நாளில்....

Wednesday, August 04, 2004

நரகம்+நம்பிக்கை=முன்னேற்றம்

நரகத்தை நம்பும் நாடுகளில் வளர்ச்சி அதிகமாக இருப்பதாகவும் , ஊழல் குறைவாக இருப்பதாகவும் Federal Reserve Bank of St. Louis ஆய்வு அறிக்கை கூறுகிறது.அமெரிக்காவில் 71 விழுக்காட்டினர் நரகம் இருப்பதை நம்புவதாகவும் , அதனால் ஊழல்/தவறு செய்வதை தவிர்ப்பதாகவும் சொல்கிறது இந்த அறிக்கை. இந்த அறிக்கை மதநம்பிக்கைகளை வளர்க்க சில மதவாத நிறுவனங்களால் செய்யப்பட்ட முயற்சி என்று சிலர் குற்றம் சாட்டவும், இந்த பகுதி அறிக்கையில் மாற்றப் பட்டு விட்டது.

நான் குழந்தையாக இருந்த போது , நரகத்தில் கொதிக்கும் எண்ணெய்யில் வறுக்கும் படங்களையும் , மற்ற கொடுமைப் படுத்தப் படும் படங்களையும் பார்த்து சில நாட்கள் பொய் பேசாமல் இருந்ததுண்டு. அதெல்லாம் சில நாட்களே.... .

சொர்க்கத்திற்கு போனா தனியா போரடிக்கும் . நரகம் என்றால் தெரிந்தவர்கள் நிறைய பேர் இருப்பார்கள் . என்ன ? நான் சொல்றது சரிதானே..


அமெரிக்காவில 71 % நரகத்திற்கு பயப்படுகிறார்களா ???!!!!

Monday, August 02, 2004

கரும் துளைகளை காணவில்லை

தற்காலத்து ஐன்ஸ்டீன் என்றழைக்கப் படும் ஸ்டீபன் ஹாகிங் (Stephen Hawking) ( இவரது உடல் நலக் குறைவு மற்றும் கரும் துளைகள் - blackhole பற்றிய கண்டுபிடிப்புகளால் உலக பிரசித்தம் பெற்றவர்) சில நாட்களுக்கு முன் தனது கரும்துளைகள் பற்றிய கருத்து சிறிது பிழைபட்டது என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். நான்கு வருடங்களுக்கு முன்பே நம்ம ஊர் அபாஸ் மித்ரா (Abhas Mitra) இதைப் பற்றி கரும் துளைகள் என்பது இல்லவேயில்லை என்று கட்டுரை எழுதியதாகவும் , அப்பொழுது யாரும் அவரது கருத்தை ஒத்துக் கொள்ளவில்லை என்றும் , அவரை அத்துறையிலிருந்தே மாற்றி விட்டதாகவும் Rediff-ல் படித்தேன். சாக்ரடீஸ் காலத்திலிருந்து , இன்று வரை இதே நிலை தான்.