Tuesday, June 28, 2005

தமிழனும் தண்டவாளமும்


தமிழனும் தண்டவாளமும் Posted by Hello

Tuesday, June 21, 2005

பசித்திரு! விழித்திரு!!

ஸ்டாண்போர்டு பல்கலையின் பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆப்பிள் நிறுவன இயக்குநர் ஸ்டீவ் ஜாப்ஸ் "Stay Hungry. Stay Foolish" என்று மாணவர்களிடம் கூறியுள்ளார்.நண்பர் ஒருவர் , அதை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.அவருக்கு அநேக கோடி நன்றிகள்.

மிக அருமையான கருத்துக்கள் அடங்கிய பேச்சு அது. மூன்று குட்டிக் கதைகளில் , உணர்வுபூர்வமாக , அருமையான கருத்துக்களை மாணவர்களுக்கு பொருத்தமாக சொல்லியிருக்கிறார்.


என்னை கவர்ந்த சில பகுதிகள்

வாழ்நாள் குறைந்தது , அதை மற்றவர்களின் கருத்திற்காக வாழாதே!

உன் வாழ்நாளில் பெரும் பகுதி உன் வேலையில் சென்று விடும் , அதனால் உனக்கு உண்மையில் பிடித்ததை வேலையாக செய்

தினம் இன்று தான் வாழ்க்கையின் கடைசிநாள் என்று வாழப் பழகு ( ஒரு நாள் உண்மையாகும்). உன் கடைசி நாளில் செய்யத் தகுந்த செயல் தானா நீ இன்று செய்வது என்று எண்ணி செயல் படு.


எழுத்து வடிவம்
http://news-service.stanford.edu/news/2005/june15/jobs-061505

ஒலி வடிவம்
http://news-service.stanford.edu/news/2005/june15/videos/53.html

ஒளி/ஒலி ( சிறு பகுதி மட்டும்)
http://news-service.stanford.edu/news/2005/june15/videos/51.html

Tuesday, June 14, 2005

பு(து)த்தகம்

என்னிடம் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை
156க்கும் மிகக் குறைவு ( ஒற்றை எண்ணிக்கை 156க்கு குறைவுதானே?). அது என்ன 156 கணக்கு?
கல்லூரி காலகட்டத்தில், வேலை கிடைத்தவுடன் , மாதம் ஒரு புத்தகம் மற்றும் ஒலிநாடா வாங்க வேண்டும் என்று கண்ட கனவு , பெங்களூர் பூங்காக்களில் சில மாதங்களிலேயே கரைந்து விட்டது.
13x12=156.


சமீபத்தில் படித்தவை
First Break All the Rules - Marcus Bukingham , Curt Coffman
இணையற்ற இளையற்றங்குடி - Dr.ஜவஹர் பழனியப்பன்
The Feiner Points of Leadership - Michael Feiner
அர்த்தமுள்ள இந்து மதம் - கண்ணதாசன்
I Can See You Naked - Ron Hoff (நீங்க நினைக்கிற மாதிரி இல்லை.சத்தியமா நல்ல புத்தகங்கோ...)
Business Speak - Suzette Haden Elgin

என்னை கவர்ந்த புத்தகங்கள் ( அந்தந்த கால கட்டங்களில்)

ரமணிச்சந்திரன் - லாவண்யா (10-13 வயதில்... அதனால் மன்னித்து விடுங்கள். )
கி.ராஜநாராயணன் - பல கரிசல் காட்டு சிறு கதைகள். கடைசியாக படித்தது "கோபல்லபுரத்து மக்கள்" என்று நினைக்கிறேன்.ஞாபக மறதி ஜாஸ்தி. காரைக்குடி கவிஞர் கிட்ட வாங்கி மெமரி+ மாத்திரை சாப்பிட வேண்டும்..
பாலகுமாரன் - தாயுமானவன் / மெர்குரிப் பூக்கள் ( வார்த்தைகளில் மனவியல் படம் பிடிக்க தெரிந்தவர்.Lathe பற்றியும் எழுத தெரியும்.)
சுஜாதா - கணையாழியின் கடைசி பக்கம் ( My Hero!!!)
வைரமுத்து - இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல / வைகறை மேகங்கள்

மற்றும் முதன் முதலில் படித்த விக்ரமாதித்தன் கதைகள் , கல்கியின் பொன்னியின் செல்வன் ( முடிவு தவிர), குமுதத்தில் எழுதிய ப்ரியா கல்யாணராமன், கிருஷ்ணா டாவின்ஸி எல்லாம் பிடிக்கும்.

இணைய பதிவுகளில் வரும் புத்தகங்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது , கதை படிக்கும் பழக்கத்தை கைவிட்டு விட்ட எனக்கு வெட்கமாக இருக்கிறது.
இன்றளவும் , தினமும் ஒரு நூலாவது விடிய விடிய ( பரிட்சைக்கு படிப்பது போல) படித்து முடிக்கும் என் அப்பாவை பார்க்கும் போது இன்னும் எனக்கு வெட்கமாக இருக்கிறது.

என்னைப் போல கூனி குறுகும் உள்ளங்களுக்கு...
மனதை தேற்ற உதவுவது எல்லாருக்கும் தெரிந்த ஒரு குட்டிக் கதை.

படகில் ஒரு சாமியார் சென்றார். அப்பொழுது படகோட்டியை பார்த்து ,"நீ இராமாயணம் படித்திருக்கின்றாயா?" என்று கேட்டார்."இல்லை சாமி" என்றார் படகோட்டி.
"அடப் பாவி வாழ்க்கையில் பாதி நாளை தொலைத்து விட்டாயே" என்றார் சாமியார். மீதி கதை உங்களுக்கே தெரியும்....


கடைசியாக , கல்லூரியில் ஆங்கில ( மற்றும் இதர) அறிவை வளர்த்துக் கொள்ள , ஆங்கில நாவல்கள் படிக்க ஆரம்பித்ததில் அமெரிக்க சாண்டில்யன் "இர்விங் வாலஸ்" நூல்கள் தான் அதிகம்.
அதில் பிடித்தது "தெய்வீக ...."

Thursday, June 02, 2005

பெயர் தேடும் படலம்

பஸ் ஸ்டாப்பில்
பார்த்த முகம்
பழகியதாய் தோன்ற
நினைவிடுக்கில்
சிக்கித் தவித்த பெயரை
வெளிப்படுத்த
தொடங்கிய துலவல்
தொடர்ந்தது நாளெல்லாம் !

முதலெழுத்தில் ஆரம்பித்து
முத்தெடுப்பது போல்
மூழ்கி பார்த்தும்
முடியாமல் தொடர்ந்தது
முயற்சி!

இயந்திர கதியாய்
இயங்கிய பொழுதும்
இடையிடையே இடித்துப் பார்த்த
இளம் பருவத்து ஞாபகங்கள்
இடர்படுத்தியது
இழந்து விட்ட பல பெயர்களை!

வாய் குவித்து
சொல்லிப் பார்த்தும்
வர மறுத்து
அடம் பிடித்தது
தொலைத்து விட்ட
வாழ்க்கையின் தொடர்ச்சிகள்!!!

விடி வெள்ளி கீற்றாய்
வீச்சொளியாய்
விரைந்து வந்த சம்பவங்கள் பல
விடை காணுமுன்
விலகியே சென்றது !

மறந்தது எது
மறக்கச் செய்தது எது
என மருகி
மணி அடித்ததும்
வீடு திரும்பும்
எனை
கடந்து சென்ற வாகனத்தில்
சென்ற முகம்
திரும்பி பார்த்து
கண் சுருக்கி
சிந்திக்க தொடங்கியது
எதேச்சை தானா?