Thursday, December 30, 2004

மன்னிப்பு ஏது?

நில மங்கையின்
கண நேர தடுமாற்றத்தில்
இத்தனை பெரிய
அழிவா!!!

கடவுளின்
கோபமென்றும்
பாவத்தின்
பலன் என்றும்
மரணமடைந்த
மாந்தரின்
மதம் பலவும்
ஆருடம் கூறினாலும்

இறந்ததில்
பெரும்பாலும்
"ஏழை" மதம் அன்றோ!

எளியவரிடம்
காட்டும்
கோபம்
ஏளனம் அன்றோ!

அன்னை
என எண்ணி
உன் மடியில்
உறங்கிய உயிர்களுக்கு
உணவளித்த ஒரே
காரணத்திற்காக
உயிரெடுக்க
என்ன உரிமை
உனக்கு?

பண்ணியது
பாவமென்று
காலம் காலமாய்
அலைகளாய்
எங்கள்
காலடியில் விழுந்து
மன்றாடினாலும்
கண்ணீரால்
எங்கள்
பாதங்களை
கழுவினாலும்
மன்னிப்பு ஏது
உனக்கு?

Thursday, December 23, 2004

Ocean's Twelve

மணிரத்தினமும் , இராமநாராயணனும் சேர்ந்து இயக்கிய படம் மாதிரியான ஒரு கலைக் கூத்து.ஆளாளுக்கு மாறி மாறி பேசுவதிலும்,தட தட வென மாறும் காட்சிகளிலும் , மிக கவனமாக கூர்ந்து கேட்டு / பார்த்து புரிந்து கொள்வதற்காக நுனி இருக்கையில் அமர்ந்து பார்க்க வைத்து விட்டது இந்த படம்.( திரையரங்கில் வேறு யாரும் சிரிக்கும் போது , நாம் மட்டும் சிரிக்காமல் இருத்து விடக் கூடாது பாருங்கள்!!!).கடைசியில் பிரபு தேவா மாதிரி உடம்பை வளைத்து நெளித்து திருடும்"இரவு நரி" வில்லனுடன் , எல்கேஜி தனமாக நீ பெரிய திருடனா , நான் பெரிய திருடனா என்று மோதி சப்பென்று முடிந்து விட்டது.எனினும் ஒரு வித்தியாசமான கமல்தனமான படம்.

ஜுலியா "ப்ரெட்டி ஓல்ட் உமன்" ஆகிவிட்டார்.

Monday, December 20, 2004

கருணை கொலை

கடவுள்
காட்ட தவறிய
கருணைக்கு
தவித்த ஜீவன்களுக்கு
உதவ நினைத்த
உள்ளத்தை
கொலை செய்யாமல்
காக்குமா
கருணை கொலை !!!

Saturday, December 04, 2004

முக்தி

காட்டாற்றிற்கு
கடலில் கலக்க
ஏனிந்த வேகம்!

கூவமும் கங்கையும்
ஒன்றாய் கலந்தாலும்
பாவமும் புண்ணியமும்
அங்கு
பிறப்பதோ அழிவதோ
இல்லை என்பதாலா?

வெய்யிலில் வற்றாமலும்
மழையில் வழிந்தோடாமலும்
பருவகாலத்தை நம்பியிருக்காமல்
என்றும் நிறைவென்றிருப்பதாலா?

ஒருசுவை முக்தியென்று
கலப்பதற்கு முன்
மற்றவர்கள் அறுசுவைக்கு வழிவகுக்க
சிறு ஓடை பலவாறாய்
நீ வேகம் தணிந்து செல்வதில்
கிடைப்பது தான்
உண்மையான முக்தி!!!

Saturday, November 27, 2004

(ஏ)மாற்றம்

கதிரொளியை மறைத்து
கருமேக கூட்டம் பரப்பிய
காரிருளைக் கண்டு
கவலை கொள்ளாமல்
கன மழை தருமென
களித்திருந்த மனம்...

காற்றில் கலைந்து போன
கார்மேகத்தை கண்டு
காத்திருந்ததில் ஏமாற்றம் தான்!

எனினும்
வெறும் வானமாய் இல்லாமல்
வெண்மேகமாய் விண் வீதியில் உலா வராமல்
கலைந்து போனாலும்
கார்மேகமாய் வந்ததில்
கொஞ்சம் மகிழ்ச்சிதான்!!!

இல்லாத வாய்ப்பைவிட
இழந்த வாய்ப்பில்
ஏமாற்றம் தான்
எனினும்
விதைத்து விட்டு சென்ற
நம்பிக்கையில்
நாளைய கார்மேகம்
நன்றே வருமென
கொஞ்சம் மகிழ்ச்சிதான்!!!

Tuesday, November 16, 2004

'ஹாட்மெயில்' சபீர் பாட்டியா

நீண்ட நாட்களுக்கு பிறகு 'ஹாட்மெயில்' சபீர் பாட்டியாவின் (Sabeer Bhatia ) பெயர் செய்திகளில் அடிபட்டது. அர்சூ (Arzoo.com ) அடிபட்டபின், அடுத்த என்ன செய்யப் போகிறார் என்று தெரியாமல் இருந்தது. இப்பொழுது ஆஸ்திரேலியாவில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்ட போது TeliXO.Com மற்றும் மின்னஞ்சல் குப்பைகளை தடுக்க உதவும் உபகரணம் என்று தன் புது முயற்சிகளைப் பற்றி தெரிவித்திருக்கிறார். முதல் வெற்றியை விட , தொடர்ந்த வெற்றி மிக கடினமான விஷயம் தான். பல தமிழ் திரை இயக்குனர்கள் கூட முதல் படத்தை வெற்றிகரமாக கொடுத்து விட்டு , பின் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள திண்டாடுவது போல் தான் இதுவும்.
ஆனால் முயன்றால் முடியாதது இல்லை தானே!!!

Wednesday, October 13, 2004

சிரஞ்சீவி தோசை

சிவாஜி கணேசன் மாதிரி பல அவதாரங்கள் எடுக்கக் கூடிய ஒரே உணவு வகை தோசை தான்.வீட்டில் பெரும்பாலும் சாதா தோசை தான். அவ்வப் பொழுது குழந்தைகளை குஷிப் படுத்த , சின்ன தோசை , வெவ்வேறு வடிவங்களில் செய்து அசத்துவதுண்டு. முறுகல் தோசை மேல் எனக்கு
தனி காதலே உண்டு.

உணவகங்களில் பெரும்பாலும் மாசாலா தோசை மற்றும் ரவா தோசை பொதுவாக காணப்படும். விஜிபி தங்க கடற்கரை மூலம் "குடும்ப தோசை" ரொம்ப பிரபல்யம்.உணவு மேசை கொள்ளாத "குடும்ப தோசை" செய்வதை பார்க்க வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசை. நகைச்சுவை துணுக்குகளில் அடிக்கடி பேப்பர் ரோஸ்ட் வந்து செல்லும்.கொஞ்சம் கனமானவர்களுக்கு நெய் தோசை , அசைவ பிரியர்களுக்கு முட்டை தோசை என்று சகலமானவர்களின் ருசிக்கேற்ப பலவகைகளில் கிடைக்கும் தோசை "ஆசை தோசை" என்ற சொற்தொடரில் இடம்பெற்றதில் ஆச்சர்யமில்லை. :)

வழக்கமான உணவு வகைகளில் அலுப்படைந்தவர்கள் வெங்காய தோசை , தக்காளி தோசை என்று எதை வைத்து வேண்டுமானலும் தோசை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். பெங்களூரில் இருந்த போது மைசூர் மசாலா தோசை என்று கார சட்னி உள்ளே வைத்து கூம்பு வடிவத்தில் தோசை செய்து , உச்சியில் வெண்ணெய் ( கொக்கு பிடிப்பது போல) வைத்து கிடைக்கும். அதே போல ஆந்திரா தோசை உப்புமாவை உள்ளே வைத்து 2-இன் - 1 ஆக கிடைக்கும்.

அலுவலக நிமித்தம் பயணம் செய்யும் போது , பணத்தைப் பற்றி கவலைப்படாமல் , பயணப்படியின் மேல் பாரத்தை போட்டு விட்டு , நல்ல உணவகம் சென்று ஒரு வெட்டு வெட்டுவதில் அலாதியான சுகம் உண்டு. கடந்த மாதம் ஹைதராபாத் சென்றிருந்த போது , ஒரு மாலை நேரம் , "சட்னி" உணவகம் சென்றிருந்தேன்.புதிதாக என்ன சாப்பிடலாம் என்று உணவு பட்டியலை பக்கம் பக்கமாக தேடிக் கொண்டிருந்த போது , ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு பிடித்தமான தோசை என்று குறிப்பிடப் பட்டிருந்த தோசை கண்ணில் பட்டது. உடனே நானும் சூப்பர் ஸ்டாராக ஆசைப்பட்டு , அதை வாங்கி சாப்பிட்டேன். எண்ணெய் இல்லாமல் , இட்லி போல ஆவியில் சமைக்கப்பட்டு , ஊத்தப்பம் போல உப்பலாக , ஆப்பம் போல மெத்து மெத்தென்று , இடியாப்பம் போல சுவையாக இருந்தது சிரஞ்சீவி தோசை. வாய்ப்பு கிடைக்கும் போது தவற விட்டு விடாமல் ருசி பாருங்கள் நண்பர்களே !!!

இதன் புகழ் பற்றி இன்னும் தெரிய வேண்டுமானல் கூகிளில் "chiranjeevi dosa" என்று தேடிப் பாருங்கள் அல்லது http://timesofindia.indiatimes.com/articleshow/22857624.cms படித்துப் பாருங்கள்.

Friday, October 01, 2004

எரிமலை எப்படி பொறுக்கும்

எங்க ஊர் எரிமலை ஹெலன்( அந்த கால ஆட்ட நாயகி பேர் மாதிரி இருக்கா?)ஸ் கொஞ்சம் குமுற ஆரம்பித்திருக்கிறது.சிவப்பு மல்லி படத்தில் , சந்திர சேகர் தொண்டை நரம்புகள் தெரிக்க உணர்ச்சி பூர்வமாக "எரிமலை எப்படி பொறுக்கும்" என்று எரிமலைகள் எல்லாம் கம்யூனிஸ்ட் சொந்தகாரர்கள் மாதிரி வாயசைத்து செல்வார்.நேரில் பார்த்த போதுதான் , இயற்கையின் உக்கிரம் தெரிந்தது. இப்பொழுதெல்லாம் சீஸ்மோகிராப் வைத்து கிட்டத்தட்ட எப்பொழுது எரிமலை வெடிக்கும் என்று அபாய அறிவிப்பு முன்னெச்சரிக்கை கொடுத்து விடுகிறார்கள்.
இப்பொழுதெல்லாம் பல மனிதர்கள் எரிமலை மாதிரி அவ்வப்பொழுது வெடித்து விடுகிறார்கள். அதெற்கெல்லாம் முன்னெச்சரிக்கை கிடைத்தால் நன்றாக இருக்கும்.
http://www.fs.fed.us/gpnf/mshnvm

Monday, September 13, 2004

கோல்கொண்டா

ஹைதராபாத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு தொலைபேசியில் மனைவியிடம் நாளை கோல்கொண்டா போகப் போகிறேன் என்று சொன்னேன். அப்படியா , அங்கேயும் கோல்கொண்டா நல்ல புகழ்பெற்ற ஹோட்டலா என்று கேட்டாள். எனக்கும் சென்ற வாரயிறுதி வரை , கோல்கொண்டா ஒரு ஹோட்டலாக தான் அறிமுகம். சரித்திரத்தில் எப்பொழுதோ படித்த ஞாபகம் , பெயர் பரிட்சயத்தை தந்ததை தவிர , வேறொன்றும் தெரியாது.

இந்தியாவில் சுற்றுலா செல்லும் இந்தியர்களை விட , வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்று நாளிதழில் படித்தேன். நம்ம ஊரில் , சுற்றுலா பள்ளி/கல்லூரி காலங்களில் செல்லும் சடங்காகவும் , அலுவலகத்தில் தரப்படும் பயணப்படியை பெற உதவும் ஒரு விஷயமாகவும் மட்டுமே உள்ளது. அதனால் வாரயிறுதியில் சென்னைக்கு சென்று உற்றார் உறவினர்களை பார்ப்பதை விட , ஹைதராபாத் அருகிலுள்ள கோல்கொண்டாவிற்கு சென்று வரலாம் என்று முடிவு செய்தேன்.

கோல்கொண்டா ஒரு அற்புதமான அனுபவம். கதைகளில் படித்த கோட்டைகளின் பிரமாண்டம் நேரில் இன்னும் பிரமிப்பூட்டியது. இப்பொழுதெல்லாம் , நம்ம வீடுகளில் ஹாலில் இருந்து கூப்பிடுவது , அடுப்பறையில் உள்ளவர்களுக்கு கேட்பதில்லை. ( கேட்பதில்லையா இல்லை கேட்காதது போல் இருந்து விடுகிறார்களா என்று தெரிவதில்லை). ஆனால் 500 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டுள்ள இந்த கோட்டையின் வாயிலில் இருந்து கை தட்டினால் 400 அடி உயரத்தில் கிட்டத்தட்ட 3 கி.மீ தூரத்தில் உள்ள தர்பாரில் கேட்கிறது. தொலைபேசி இல்லாத அந்த காலத்தில் , ஒரு சுவரின் கடைசியில் பேசுவது , மற்றொரு கடைசியில் கேட்கிறது , இங்கே கைதட்டினால் , அங்கே கேட்கிறது என்று ஓரே acoustics மாயா ஜாலம். தண்ணீர் கொண்டு செல்லும் அதி நவீன அமைப்புகள் மற்றொரு ஆச்சர்யம். காகடியா மன்னர்கள் கட்டிய காளி கோவிலை , பின்னர் வந்த முஸ்லிம் மன்னர்கள் இந்த கோட்டையில் விட்டு வைத்தது , மத நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறது.

இரவில் ஒலி ஒளி காட்சியாக , இந்த கோட்டையின் கதையை சுற்றுலா துறை 1 மணி நேரம் விளக்குகிறது. நேரத்தை குறைத்து , இன்னும் சுவை பட நன்றாக இந்த நிகழ்ச்சியை செய்யலாம்.கல்லூரியிலிருந்து சுற்றுலாவில் வந்திருந்த நூற்றுக்கணக்கான இளசுகள் , கத்தி ஆர்ப்பட்டம் பண்ணி ஒன்றுமே கேட்காமல் செய்து விட்டார்கள். இவர்களின் சந்தோஷங்களையும் , யாரையும் கண்டுகொள்ளாத அவர்களின் தனி உலகமும், கத்தலும் , கேலியும் , கிண்டலும் மற்றொரு உலக அனுபவம். கல்லூரி நாட்களில் , பிரிவு உபசார விழாவில் கூட்டமா திரையரங்கிற்கு சென்று கத்தி ஆட்டம் போட்டு , மற்றவர்களை படம் பார்க்க விடாமல் செய்தது ஞாபகம் வந்தது.

கோஹினூர் வைரம் இருந்த இடம் ,மார்க்கபோலோ புகழ்ந்து எழுதிய இடம் என்று , இதன் சரித்திர புகழ் நீண்டு கொண்டே போகிறது.

http://7wondersofhyderabad.com/golkonda-fort/golconda-fort.html

Friday, September 10, 2004

வானம் எனக்கொரு போதி மரம்

விமானத்தில் பறக்கும் போதும் , ஓய்வறையிலும் ( அமெரிக்க ஆங்கிலப்படி) மட்டும் தான் அதிகம் சிந்திப்பதாக நண்பர் ஒருவர் சொன்னாது , விமானத்தில் செல்லும் போதெல்லாம் எனக்கு ஞாபகம் வந்து விடும். பல வருடங்கள் கழித்து , அலுவல் நிமித்தமாக பயணம். பக்கத்து இருக்கையில் ஹாலந்து நாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர். குசலம் விசரித்து முடித்த பின் , இந்திய ஹாக்கி அணியை பாரட்டியபடி , அவர் கேட்ட முதல் கேள்வியே பதக்கப் பட்டியலில் குட்டி நாடான ஹாலந்து முன்னனியில் இருக்கும் போது , இந்தியா எங்கோ கீழே இருப்பதன் காரணம் என்ன என்பது தான். அரசியல் , விளையாட்டு கட்டமைப்புகளின் நிலைமை , இந்தியர்களின் மன நிலை , கிரிக்கெட்டின் ஆதிக்கம் என்று அலசல் விரிந்தது.நான சில வாரங்களாக குமுறிக் கொண்டிருந்ததை கொட்டித் தீர்த்தேன். என்னுடைய அர்ஜூன்தனமான பதில்களை பார்த்தபின் , உன்னை மாதிரி இளைஞர்கள் ( சத்தியமா , அப்படித்தான் சொன்னார் தம்பிகளா!) ஏன் தாய்நாட்டிற்கு திரும்பி தாய்நாட்டின் வளர்ச்சியில் ஈடுபட்டால் என்ன என்று பொட்டில் அறைந்தால் போல் கேட்டார். நான் வழக்கம் போல எனது நீண்ட கால திட்டத்தை சொல்லி , இன்னும் ஒரு 5 வருடங்களுக்கு வாய்தா வாங்கினேன்.

அடுத்து பள்ளியில் படித்த ஹாலந்து நாட்டு கதை பற்றி பேச்சு சென்றது. கடல் மட்டத்தை விட தாழ்வாக இருக்கும் அந்நாட்டில் , கடல் நீரை தடுத்து நிறுத்தும் சுவரில் ஏற்பட்ட ஓட்டையை பார்த்த சிறுவன் தன் கை விரலால் அடைத்து இரவு முழுவதும் நின்று நாட்டை பேரழிவில் இருந்து காப்பற்றிய கதையைப் பற்றி சொல்லி , என் ஹாலந்து அறிவை அவருக்கு காண்பித்தேன். இரண்டாயிரம் வருடங்களாக , இப்படி கடல் நீர் உள்ளே வந்து விடாமலும் , உள்ளே உள்ள நீரை கடலுக்கு கொண்டு செல்ல அவர்கள் செய்திருக்கும் ஏற்பாடுகளையும் சொல்லி, இத்தகைய இயற்கை சூழலிலும் , இங்கிலாந்து, பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகிய மூன்று பெரிய நாடுகளுக்கு நடுவில் குட்டி நாடாய் இருந்து கொண்டு , பல மொழிகளைக் கற்றுக் கொண்டு வியாபாரம் மூலம் செழிப்பாக இருப்பதாகவும் ஹாலந்து நாட்டுக் கதையை அவர் அளந்தார்.

அடுத்த முறை இந்தியா ஹாக்கியில் ஹாலந்து நாட்டை வெல்லும் போது , கண்டிப்பாக என்னை பற்றி அவர் நினைப்பார் என்று நான் எண்ணுகிறேன்.

Friday, August 27, 2004

ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் 100வது பதக்கம்

இந்தியா ஒலிம்பிக்ஸில் 100 பதக்கங்களை வென்றது. இதில் 25 தங்க பதக்கங்கள் அடங்கும். முதல் இடத்தில் இருக்கும் சீனாவிற்கு கடுமையான போட்டியாக , இந்தியா விளங்கி வருகிறது.அடுத்த ஒலிம்பிக்ஸில் , இந்தியா முதல் இடத்தை பிடிப்பது உறுதியாகி விட்டது. இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் , அரசாங்கம் , வர்த்தக நிறுவனங்கள் , விளையாட்டு கட்டமைப்புகள், பயிற்சி நிறுவனங்கள் இவை அனைத்தும் இணைந்து வெல்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு , திறமையாளர்களை இள வயதிலேயே கண்டறிந்து கடும் பயிற்சி அளிப்பதும் , வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கும் பரிசுகளும் , சலுகைகளும் வேறெந்த துறையில் அடைய முடியாத அளவிற்கு உயர்ந்த அளவில் இருப்பதுமே. வீணாய் போன கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டுகளை தடை செய்தது தான் இந்த அளவிற்கு வெற்றி கிடைத்ததற்கு உண்மையான காரணம்.

பி.கு.
1.நாஸ்ட்ராடமஸ் மாதிரி இதை எழுதி வைத்து விட்டேன். 3979 க்குள் ( நாஸ்ட்ராடமஸ் கணிப்புகள் தொடும் கடைசி வருடம்) கண்டிப்பாக இது நடக்கும்.
2. நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கு , இது தானா முக்கியம் என்று நினைக்கின்றீர்களா?. உணவு , உடை , உறக்கம் மட்டும் போதாது. அமைதி , கலை, விளையாட்டு , இலக்கியம், சம உரிமை , சுதந்திரம் என்று எல்லாம் இருந்தால் தான் வாழ்க்கை. கடந்த 10 நாட்களக , ஒவ்வொரு நாளும் 5 மணி நேரம் ஒலிம்பிக்ஸ் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்தா , வேற என்ன நினைக்க தோன்றும். நேற்று கனவில் கூட ஒரு வெண்கல பதக்கம் தான் வந்தது.

Monday, August 23, 2004

ஒலிம்பிக்ஸில் நட்புச் சாரல்

நூறு மீட்டர் அரையிறுதியில் ஜஸ்டின் கேட்லின் (Justin GATLIN ) மற்றும் ஷான் க்ராஃபோர்ட் (Shawn CRAWFORD) இருவரும் இலக்கிற்கு அருகாமையில் வந்தவுடன் ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுத்து , ஓடிக்கொண்டிருக்கும் போதே நீ முதலில் செல் என்று பேசிக் கொண்டதை பார்த்து வர்ணனையாளர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். ஓட்டம் முடிந்தவுடன் , நெஞ்சோடு மோதிக் கொள்வதம் , ஓடுவதற்கு முன் வாழ்த்திக் கொள்வதும் , இறுதியில் ஜஸ்டின் வென்றவுடன் , மகிழ்ச்சியோடு ஷான் வாழ்த்தியதை பார்த்த போது நட்புச் சாரல் அடித்தது தெரிந்தது.

கர்ட்னி குபெட்ஸ் (Courtney Kupets) கால் காயம் காரணமாக , பதக்க நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படாத நிலையில் , தங்க பதக்கம் வென்ற கார்லி பேட்டர்ச்ன் (Carly PATTERSON ) அவரின் உதவியாளராக , சமனில்லாத பார் ஜிம்னாஸ்டிக்ஸ் ( Uneven Bars) போட்டியில் , கர்ட்னிக்காக பாரில் சாக் தடவி சரிபார்த்த போது நட்புச் சாரல் அடித்தது தெரிந்தது.கர்ட்னி வெண்கலம் வென்றார்.

டைவிங் அரையிறுதியில் முதல் பனிரெண்டு நபர்கள் தான் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்ற நிலையில் , பதிமூன்றாவது இடத்திலிருந்த சாரா ஹில்டெப்ரண்ட்(Sara HILDEBRAND) கடைசி டைவ் அடிப்பதற்கு முன்பு டென்ஷனின் உச்ச கட்டத்தில் இருந்த போது அவரிடம் ஆறுதலாக பேசி தைரியம் கொடுத்த லாரா வில்கின்சன் (Laura WILKINSON ) , தான் தகுதி பெற்றதை விட சாரா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றவுடன் அவர் அடைந்த மகிழ்ச்சியும் , சாராவுடன் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியின் போதும் நட்புச் சாரல் அடித்தது தெரிந்தது.

100 மீட்டர் வண்ணத்து பூச்சி (100m Butterfly) போட்டியில் முதலிடம் வந்த மைக்கேல் பெல்ப்ஸ்(Michael PHELPS),4X100 தொடர் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை , இரண்டாமிடத்தில் வந்த இயன் குரோக்கர்க்கு விட்டுக் கொடுத்த போது (Ian CROCKER) நட்பு சாரல் அடித்தது தெரிந்தது.
பெண்கள் டென்னிஸ் போல பிரபல்யமடைந்து வரும் கடற்கரை கைப்பந்து ( Beach Volleyball) போட்டியில் வெற்றி மேல் வெற்றி குவித்து வரும் கெர்ரி வால்ஸ்(Kerri WALSH) மற்றும் மிஸ்டி மே (Misty MAY) இருவரின் ஆட்டம் முழுவதுமே நட்புச் சாரல் தெரிகிறது ( கூடவே ஜொள் மழையும்).

மகேஷ் பூபதி மற்றும் லியாண்டர் பயஸ் இருவரும் முன்னொரு காலத்தில் வெற்றிகளை குவித்ததற்கு காரணமும் இந்த நட்புச் சாரல் தான்.

Friday, August 20, 2004

இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு ஜே!!!

மீண்டும் ஒரு முறை வெண்கலப் பதக்கம் நூலிழையில் தவறிவிட்டது இந்தியாவிற்கு. ஆனால் , கடைசிவரை போராடி தோற்றதில் பெருமிதம் தான். http://www.nbcolympics.com -ல் உடனுக்குடன் ஆட்டத்தின் புள்ளி விவரங்கள் வந்து கொண்டிருந்தது , நேரில் பார்ப்பது போன்ற நிலையை ஏற்படுத்தி விட்டது. அலுவலகத்தில் , இந்தியர்களின் குழு மின்னஞ்ல்களிலும் ஆர்வலர்கள் சிலர் , ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஆட்டத்தின் நிலையை தெரியப் படுத்தி வந்தார்கள். பொதுவாக , இது போன்ற மடல்கள் அலுவலை பாதிக்கும், அலுவலக அஞ்சலை பயன்படுத்தும் நெறிக்கு எதிரானது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் பெருசுகள் கூட கொஞ்சம் பொறுமை காத்தார்கள். கடைசி செட்டில், எதிரணியை முறியடிக்கும் வாய்ப்பு நமக்கு அதிகம் கிடைத்தும் , வெற்றி கிட்டாதது , பெருத்த ஏமாற்றமே. முதல் செட்டில் ஆரம்பத்தில் கிடைத்த முன்னணி நிலையை உடனே கோட்டை விட்டதும் , இது கடினமான போட்டியாக இருக்கும் என்பது தெரிந்து விட்டது. எனினும் உலக அரங்கில் , இந்தியாவை தலை நிமிர வைத்த இந்தியன் எக்ஸ்பிரஸ் கூட்டணிக்கு என்றென்றும் ஜே!

விஜய் அமிர்தராஜ் , ரமேஷ் கிருஷ்ணன் போன்றவர்கள் விம்பிள்டன் காலிறுதிக்கு சென்றதை விடவும் ,இந்தியாவை டேவிஸ் கோப்பை இறுதி ஆட்டத்திற்கு எடுத்துச் சென்றதை விடவும் கிரிக்கெட் மோகத்தில் திளைத்திருந்த இந்தியர்களை டென்னிஸ் பக்கம் திருப்பியதில் பெரும் பங்கு லியாண்டர் பயஸ் / மகேஷ் பூபதி ஜோடிக்கு உண்டு. அதற்கு சிறப்பு காரணம் , அவர்கள் தனியாக உலக தர வரிசைக்கு ஆடுவதை விட , நாட்டிற்காக ஆடும் போது காட்டும் அதீத உற்சாகம் தான்.

Thursday, August 19, 2004

காற்றே நீதானா!

தென்றலாய் தழுவிய நீதானா
சூரைக் காற்றாய் இன்று!

காதல் தீபத்தை வளர்த்த நீதானா
காட்டுத் தீயாய் கருக்கியது இன்று!

காற்றாலையாய் இயக்கி வந்த நீதானா
அறுந்த மின்கம்பமாக்கியது இன்று!

பாய்மர கப்பலாய் செலுத்தி வந்த நீதானா
காகித ஓடமாய் சுழற்றியடித்தது இன்று!

பருவக் காற்றாய் வந்த நீதானா
கண்ணீர் மழைக்கு காரணகர்த்தாவாய் இன்று!

பூங்காற்றாய் வந்த நீதானா
பாலை அனல் காற்றாய் இன்று!

புல்லாங்குழலாய் இசைத்த நீதானா
பேரிரைச்சலாய் இன்று!

சுவசமாய் இருந்த நீதானா
சிதை எரிக்கும் நெருப்பிற்கு துணையாய் இன்று!

Tuesday, August 17, 2004

Rathore strikes silver

Proud moments for all Indians and truely the armed forces once again keeping the flag flying high.

http://us.rediff.com/news/2004/aug/17medal.htm

Union Defence Minister Pranab Mukherjee on Tuesday congratulated double trap shooter Major Rajyavardhan Singh Rathore on becoming the first Indian to win a silver medal in an individual event at the Olympics.
"You have done the armed forces proud and brought honour to India by your performance par excellence," Mukherjee said in a release in Delhi today.
Rathore, who served the army in the Kargil War, won the silver in double trap shooting with a score of 179 to bring India's first medal at the ongoing Athens Olympics Games.

.

Monday, August 16, 2004

மணிப்பூர்

மணிப்பூரில் என்ன நடக்கிறது? இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை திரும்ப பெற சொல்லி , தற்கொலை மற்றும் ஆர்ப்பாட்ட கலகங்கள் ஒரு புறம்.கடத்தல் , பணம் பறிப்பு, சட்ட ஒழுங்கு சீர்கேடு , இவற்றை கட்டுப்படுத்த தான் இந்த சிறப்பு அதிகாரங்கள் என்று நியாயப் படுத்தி மற்றொரு புறம்.உச்ச கட்டமாக இந்திய பொருட்களை (?) ஒதுக்கச் சொல்லி போராட்டம் வேறு.

இந்தியா வறுமை கோட்டிற்கு கீழே இருந்தாலும் , வளர்ந்த நாடுகள் பட்டியலில் இடம் பெறாவிட்டாலும் , ஒற்றுமையாக பிரச்சனையில்லாமல் இருந்தாலே பெரிய விஷயம் என்றாகிவிட்டது.வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் எங்கே?. அஸ்ஸாம், நாகாலாந்த் என்று வடகிழக்கு மாநிலங்களிலெல்லாம் எப்படி இந்த பிரச்சனை முற்றி விட்டது. ஆரம்பத்திலேயே கவனித்து , சரி செய்யாமல் விட்டது யார் குற்றம் என்று தெரிந்தவர்கள் யாரேனும் பதிந்தால் நல்லது.

லாட்டரி டிக்கெட்டுகளிலும் , வரைபடத்தில் வட கிழக்கில் எங்கோ ஒரு மூலையில் இந்த மாநிலங்கள் உள்ளன என்பதும் , பொறியியல் கல்லூரியில் வேற்று மாநில கோட்டாவில் படித்த ஒன்றிரண்டு மாணவர்களையும் தவிர , வடகிழக்கு மாநிலங்களைப் பற்றி வேறொன்றறியேன் பராபரமே!

இளம் உயிர்கள் , தற்கொலை செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் அளவிற்கா இந்திய ஜனநாயகம் இருக்கிறது?

Wednesday, August 11, 2004

என்னை திட்டியவர்கள்

ஒரு வாரமாய் ஊரில் இல்லை.காலை 4 மணிக்கு வீடு வந்து சேர்ந்தவுடன், வந்திருந்த 362 அலுவலக மின்னஞ்சல்களை மேலோட்டமாக மேய்ந்து விட்டு , பின்னால் அசை போட்டுக் கொள்ளலாம் என்று ஆவலுடன் வலைப்பதிவுகளை பார்க்க ஆரம்பித்தேன். சி(ப)ல பதிவுகளுக்கு 30 , 60 என்று பின்னூட்ட எண்ணிக்கைகளை பார்த்தவுடன், கோடை மழை மாதிரி , எல்லா
வலைபதிஞர்களும் பின்னூட்டம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்களா என்று படிக்க ஆரம்பித்ததில் , கார சாரமாக ஆரம்பித்த விவாதம் நார சாரமாக சென்று கொண்டிருப்பது தெரிந்தது.

இதிலிருப்பது போலில்லாமல் திட்டு வாங்குவதும் சில நல்ல அனுபவங்களாக அமைவது உண்டு. என்னை திட்டியவர்களை எண்ணிப் பார்க்க , இதை விட சிறந்த சந்தர்பம் வேறு ஏது?

திட்டு வாங்குவது என்றவுடன் , பலருக்கு அப்பாதான் ஞாபகம் வரும்.அப்பாவிடம் விவாதம் செய்து , அவரை கோபத்தின் உச்சிக்கு கொண்டு செல்வது எனக்கு கை வந்த கலை. எல்லாரும் அவரைப் பார்த்து நடுங்கும் போது , கொண்ட கொள்கையை (?) விடாமல் , நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அவரிடம் விவாதம் செய்து கொண்டிருப்பேன். அவர் அப்பொழுதெல்லாம் , "பெரிய லார்ட் வேவல் இவரு. இவர் சொல்றதுதான் சரி..." என்று என்னை திட்டுவார். திட்டுவதில் கூட என்னை லார்ட்-ஆக பார்த்தவர்.

மானாமதுரையில் சிறுவர்களெல்லாம் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த கால கட்டம். ஒரு முறை பெரியம்மா மகனின் உடைந்த மட்டையயும், கிரிக்கெட் பந்தும் எனக்கு பரிசாக கிடைத்தது. ( விடாத கெஞ்சலுக்கு பின்).கிரிக்கெட் மட்டை வைத்திருந்ததால் , நான் வைத்தது தான் சட்டம். தேவிலால் போல நான் கேப்டன் பதவி வேண்டாம் என்று, துணை கேப்டன் பதவி வைத்து கொண்டேன். முதலில் மட்டையடிக்க நான் செல்வது வழக்கம். பந்து எப்படி வந்தாலும் , ஸ்டம்பில் பட்டு விடாமல் , மட்டையை சரியாக பந்து வரும் வழியில் வைத்து , அங்கேயே செத்து விழுந்து விடும் படி கட்டை வைப்பது என் வழக்கம். அடித்து விளையாட தெரியாது. அதனால் ஆட்டம் இழக்காமல் , கடைசி வரை விளையாடி ரன் அதிகம் எடுக்காமல் இருப்பது என் வழக்கம்.நண்பர்களெல்லாம் பொறுமை இழந்து , என்னை அடித்து விளையாட சொல்வார்கள். என்னை நேரிடையாக திட்ட முடியாமல் , "டெஸ்மண்ட் ஹெயின்ஸ்" என்று என்னை அழைப்பார்கள். (பின்னாளில் ஒரு நாள் ஆட்டங்களில் ஹெயின்ஸ் அபாரமாக அடித்து ஆடி , என் பெயரை காப்பாற்றியது வேறு விஷயம்.)

பனிரெண்டாம் வகுப்பு படித்த போது , இயற்பியல் ஆசிரியருக்கு என் மேல் கொஞ்சம் கோபம். வகுப்பு முடிய சற்று நேரம் இருக்கும் முன்னரே , அவர் பாடம் நடத்துவதை கவனிக்காமல் , எல்லா புத்தகங்களையும் பையில் எடுத்து வைத்து , தோள் பட்டையில் பையை மாட்டிக் கொண்டு , மணியடித்தவுடன் வகுப்பிலிருந்து ஓடிவிட ஆயத்தமாக உட்கார்ந்திருப்பேன். ஒவ்வொரு நாளும் , நான் செய்யும் ஆயத்தங்களை பார்த்து , அவர் என்னை "கிளர்வுற்ற எலக்ட்ரான்" மாதிரி , ஏண்டா இப்படி வெளியே ஓட ரெடியா இருக்கே என்று திட்டுவார்.

மற்ற திட்டல்கள் மற்றொரு நாளில்....

Wednesday, August 04, 2004

நரகம்+நம்பிக்கை=முன்னேற்றம்

நரகத்தை நம்பும் நாடுகளில் வளர்ச்சி அதிகமாக இருப்பதாகவும் , ஊழல் குறைவாக இருப்பதாகவும் Federal Reserve Bank of St. Louis ஆய்வு அறிக்கை கூறுகிறது.அமெரிக்காவில் 71 விழுக்காட்டினர் நரகம் இருப்பதை நம்புவதாகவும் , அதனால் ஊழல்/தவறு செய்வதை தவிர்ப்பதாகவும் சொல்கிறது இந்த அறிக்கை. இந்த அறிக்கை மதநம்பிக்கைகளை வளர்க்க சில மதவாத நிறுவனங்களால் செய்யப்பட்ட முயற்சி என்று சிலர் குற்றம் சாட்டவும், இந்த பகுதி அறிக்கையில் மாற்றப் பட்டு விட்டது.

நான் குழந்தையாக இருந்த போது , நரகத்தில் கொதிக்கும் எண்ணெய்யில் வறுக்கும் படங்களையும் , மற்ற கொடுமைப் படுத்தப் படும் படங்களையும் பார்த்து சில நாட்கள் பொய் பேசாமல் இருந்ததுண்டு. அதெல்லாம் சில நாட்களே.... .

சொர்க்கத்திற்கு போனா தனியா போரடிக்கும் . நரகம் என்றால் தெரிந்தவர்கள் நிறைய பேர் இருப்பார்கள் . என்ன ? நான் சொல்றது சரிதானே..


அமெரிக்காவில 71 % நரகத்திற்கு பயப்படுகிறார்களா ???!!!!

Monday, August 02, 2004

கரும் துளைகளை காணவில்லை

தற்காலத்து ஐன்ஸ்டீன் என்றழைக்கப் படும் ஸ்டீபன் ஹாகிங் (Stephen Hawking) ( இவரது உடல் நலக் குறைவு மற்றும் கரும் துளைகள் - blackhole பற்றிய கண்டுபிடிப்புகளால் உலக பிரசித்தம் பெற்றவர்) சில நாட்களுக்கு முன் தனது கரும்துளைகள் பற்றிய கருத்து சிறிது பிழைபட்டது என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். நான்கு வருடங்களுக்கு முன்பே நம்ம ஊர் அபாஸ் மித்ரா (Abhas Mitra) இதைப் பற்றி கரும் துளைகள் என்பது இல்லவேயில்லை என்று கட்டுரை எழுதியதாகவும் , அப்பொழுது யாரும் அவரது கருத்தை ஒத்துக் கொள்ளவில்லை என்றும் , அவரை அத்துறையிலிருந்தே மாற்றி விட்டதாகவும் Rediff-ல் படித்தேன். சாக்ரடீஸ் காலத்திலிருந்து , இன்று வரை இதே நிலை தான்.

Monday, July 26, 2004

வலைப்பூ

ஈழநாதனின் நீல நிலவு பரிசு கேள்விக்கு சிரத்தையாக கூகிளில் தேடி பதில் சொன்னதற்கு பரிசாக ( வேறென்ன காரணம் இருக்க முடியும்?) , வலைப்பூ ஆசிரியராக இந்த வாரம் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.


இந்த வார பதிவுகள் வலைப்பூவில்.