Sunday, March 15, 2009

வலைப்பூ July 25, 2004 - July 31, 2004

வலைப்பூ ஆசிரியராக July 25, 2004 - July 31, 2004

------------------------------------------------
விடுதலை...விடுதலை...விடுதலை
விடை பெறும் நேரம் வந்து விட்டது.உங்களுக்கு என் அபத்தங்களில் இருந்து விடுதலை வந்து விட்டது. சென்ற வியாழன் இனிய கனவாக மதி அவர்களிடமிருந்த மின்னஞ்சலில் இந்த வாய்ப்பு வந்த போது , நமக்கு இப்படி ஒரு வாய்ப்பா என்று ஆச்சரியத்துடன் துவங்கினேன். காலி பெருங்காய டப்பாவான நான் என்ன எழுதுவது என்று ஆரம்பத்தில் விழி பிதுங்கினாலும், எழுத ஆரம்பித்த பின் எண்ணங்கள் வரத் தொடங்கின.

நண்பரது வீட்டில் பார்த்த சாக்பீஸ் கோலத்தினால் "வரவேற்பு கோலம்", சுவாரசியமாக இருக்கும் என்பதால் "செவ்வாய் கிழமை கொழுக்கட்டை", கார சாரமாக காதல் கதைகளை மூடி வைத்திருப்பவர்களை சீண்டி விட "காதல் பொய்யடா",என் சிந்தனையில் எப்பொழுதும் இருந்து வரும் "ஏட்டுச் சுரைக்காய்", கணிதத்தில் கொண்ட காதலின் காரணமாக "வாடகை வாகன எண்",தமிழ் வலைப் பதிவில் அவ்வளவாக வந்திராத/எழுதப்படாத "மாயா ஜாலம்",தாய் மண்ணின் பாசத்தால் "செட்டிநாடு ஸ்பெஷல்" என்று தொடர்ந்தேன்.வலை வலம் சென்றது உண்மையிலேயே புத்துணர்ச்சி தருவதாக இருந்தது.

மழை நகரம், குழந்தை கவிஞர், ப்ளேக் நோய் பரவிய போது மகாத்மாவின் சேவை , ஊனம் , வண்ணங்களின் "பால்" என்று எழுத நினைத்திருந்தேன். தட்டுத் தடுமாறி எழுதி, பித்து பிடித்தவன் போல கடந்த ஒரு வாரமாக இருந்ததனால் இவற்றை எழுத இயலவில்லை. என் வலைத் தளத்தில் இவற்றை தொடர்வேன்.

"எழுத்தென்னும் தவம்" என்பதன் கனம் ஒரு வாரம் தொடர்ந்து எழுதியதில் புரிந்தது. இலக்கண (?) சந்தேகங்களும் , எங்கே காற்புள்ளி வைப்பது, அரைப்புள்ளி வைப்பது என்பது போன்ற குழப்பங்களும், சில ஆங்கில வார்த்தைகளின் தமிழாக்கம் தெரியாமலும் விழி பிதுங்கி போனேன். எண்ணத்தில் ஓடுவதை அப்படியே எழுத்தில் வடிப்பதற்கே , இவ்வளவு கடினமாக இருக்கிறது. கற்பனை செய்து, சுவரசியமாக , மெருகூட்டி எழுதுவது என்பதற்கு தவமிருக்க வேண்டும். தவமிருக்க ஆர்வம் வந்து விட்டது.

தனி மடலிலும் , பின்னூட்டங்கள் மூலமாகவும் ஆதரவு தந்தவர்களுக்கும் , நல்ல கருத்துக்களை சுட்டிக் காட்டியவர்களுக்கும் , மௌனமாக படித்து பொருத்து வந்தவர்களுக்கும் என் கோடானுகோடி நன்றிகள்.

- அநாமிகா மெய்யப்பன்



என் மனைவி , கணினியில் எந்த advanced options ( copy-n-paste, rotate) பயன்படுத்தாமல் சில வருடங்களுக்கு முன் வரைந்த ரங்கோலி.




Posted by Editor at 03:50 AM | Comments (6) | TrackBack





செட்டிநாடு ஸ்பெஷல் - 2
இதை பழம் பெருமை பேச மட்டும் எழுத வில்லை. நண்பர்களே , நீங்கள் அனைவரும் உங்களால் இயன்ற அளவில் ஏதாவது பொது சேவை , நன்கொடைகள் கண்டிப்பாக செய்து கொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. "அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது" என்பது நாம் அறியாதது அல்ல. அடுத்தவர்களுக்கு உதவும் நிலையில் இருத்தல் அதனினும் அரிது என்பதை உணர வேண்டும்.வணிக நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் , சென்ற வருட வருமானத்தை விட அதிகமாக ஈட்ட இலக்கு நிர்ணயித்து செயல்படுவது போல் , உங்களின் ( உங்களோடு என்னையும் சேர்த்து தான்) உயர்ந்த சேவை இலக்குகளும் வருடா வருடம் உயர்ந்து கொண்டே இருக்கட்டும்.

செட்டிநாட்டவற்கு வணிகம் தான் இவர்களின் உயிர்மூச்சு.கந்து வட்டி வாங்காமல் நியாய(?!?) வட்டி வாங்கி தொழில் புரிந்தவர்கள். "பற்று/வரவு" முறையை ஆரம்பித்து வைத்தவர்கள். இன்றைய தலை சிறந்த வங்கிகள் பலவற்றின் தோற்றத்திற்குப் பின்னால் செட்டிநாட்டுக் காரர்களை ( காரைக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள 96 கிராமங்கள் அடங்கியது செட்டிநாடு) காணலாம்.குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாமல் , திரைகடலோடி திரவியம் தேட சென்றவர்கள்.குழந்தை பிறந்தவுடன் , வெளி நாட்டிற்கு திரவியம் தேடச் சென்ற பலர், குழந்தையின் திருமணத்திற்கு தான் திரும்பி வரும் அளவுக்கு "தொழில் பக்தி" அதிகம். இப்படி பாடுபட்டு,குடும்பத்தை விட்டு சென்று கண்ணும் கருத்துமாக சேர்த்த செல்வத்தை , பல அறப்பணிகளுக்கு செலவிட்டது தான் சிறப்பு அம்சம்.

கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் சென்று, உலகெங்கும் சென்ற இடங்களிலெல்லாம் முருகனுக்கு கோவில்கள் கட்டியதும் , நகர சிவன் கோவில்கள் கட்டியதும் எண்ணற்றவை.சியாட்டலில் ஒரு கோவில் கட்ட 1000 டாலர் நன்கொடை வழங்கலாமா என்று ஆயிரம் முறை சிந்தித்து , சில நாட்கள் உறக்கம் இழந்து தவித்த என்னைப் போன்றோருக்கு , வாழ்நாள் முழுவதும் சம்பாதித்ததை பொதுப் பணிக்கு ஒரு நொடியில் தூக்கி கொடுத்த பலரை பற்றி கேள்வி படும் போது / பார்க்கும் போது ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது.

கோவில் கட்டுவதுடன் நின்று விடவில்லை. கோயிலுக்கு முன் ஒரு குளம் கண்டிப்பாக இருக்கும். இப்படி வறண்ட பகுதியான செட்டிநாட்டில் குளங்களாக நிறைந்திருப்பதனால் தான் தண்ணீர் கஷ்டம் அவ்வளவாக இல்லை.சென்ற இடமெல்லாம் சத்திரங்கள் அமைத்து அதனுடன், வறியவருக்கும், சிவனடியார்களுக்கும் அன்னதானம் தினம் தோறும் செய்யும் படி வருவாய் கொண்ட சொத்துக்களை அமைத்து கொடுத்துள்ளார்கள். காசி முதல் இராமேஸ்வரம் வரை , மலேசியா, சிங்கப்பூர், சிலோன், வியட்நாம் , பர்மா போன்ற நாடுகளிலும் இந்த சத்திரங்கள் உண்டு.இராமேஸ்வரம் , திருவண்ணாமலை, மலேசியாவில் அலோஸ்டார் போன்ற இடங்களுக்கு நான் சென்ற போது இந்த சத்திரங்களில் தான் நான் தங்கியிருக்கிறேன். வாடகை இலவசம்.தலையணை வேண்டுமானால் 1 ரூபாய், அவ்வளவு தான்.அன்னதானம் போன்ற அறப்பணி செய்யவும் , ஊர் விட்டு ஊர் சென்று வணிகம் செய்யும் போது தங்கிக் கொள்ளவும் வசதியாக இந்த பொது சத்திரங்கள் தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியா முழுவதும். எவரெஸ்டிற்கு சென்றால் கூட டீக்கடை மலையாள நாயரை பார்க்கலாம் என்பது போல , எங்கு போனாலும் ஒரு நகர சத்திரமும் இருக்கும்.கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை முறையாக தெரிந்து கொண்டதனால் தான் , இப்படிப் பட்ட பொது சத்திரங்கள் அமைக்க முடிந்தது.

ஆன்மிகம் , அன்ன தானம் இவை எல்லாவற்றையும் விடவும் காலத்தால் இவர்கள் செய்த மிகப் பெரிய அறப்பணி கல்விகூடங்கள் அமைத்தது தான்.செட்டிநாட்டிலும் , மதுரை, சிதம்பரம் , சென்னை மற்றும் தமிழகம் முழுதும் பல இடங்களிலும் இவர்கள் அமைத்த சிறு பள்ளிக் கூடங்கள் முதல் பரந்து விரிந்த பல்கலைக் கழகங்கள் வரை காணலாம். அதில் பயனுற்றவன் என்ற முறையில் நன்றி பெருக்கோடு எண்ணிப் பார்க்கிறேன். வியாபாரத்தில் நொடித்து கடனில் தத்தளித்த எங்கள் குடும்பத்திலிருந்து வெளியூரில் விடுதியில் தங்கி படிப்பது என்பது இயலாத காரியம். உள்ளூரிலேயே இருந்ததினால் தான் பொறியியல் கல்லூரியில் என்னால் படிக்க முடிந்தது. DOTE-1 விண்ணப்பங்களில் விருப்ப வரிசையில் முதலில் கிண்டி பொறியியல் கல்லூரியையும் , இரண்டாவதாக REC யையும் பொதுவாக மாணவர்கள் எடுக்கும் போது, நான் அழகப்பா பொறியியல் கல்லூரியை தான் எனது முதல் , இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்ப வரிசையில் தெரிவித்திருந்தேன். காரைக்குடியில் கல்லூரி அமைத்துக் கொடுத்த அருமை அழகப்பருக்கு நான் என்றென்றும் கடமை பட்டிருக்கிறேன்.

கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள் இவர்கள்.வீட்டு நிலைப் படியில் இருந்து வாசல்தரை வரை எங்கும் கலைநயம் மிளிரும்.அதானால் தானோ என்னவோ பிற்காலத்தில் பத்திரிக்கை துறை, திரைத் துறை இவற்றில் பலரை காரைக்குடியிலிருந்து காணலாம்.மற்ற துறைகளையும் விட்டு வைக்கவில்லை. விளையாட்டு ஆகட்டும் (சென்னை சேப்பாக்க மைதானம்), தமிழிசை ஆகட்டும் பொதுநலமே பெரிதென கருதும் உன்னதம் எங்கிருந்து வந்திருக்கும் என்று எண்ணி பார்க்கிறேன். செல்வம் ஈட்டும் போது காட்டும் கடின சித்தம் , அறப் பணி செய்யும் போது எப்படி முற்றிலும் மாறி விடுகிறது என்பது அதிசயம் தான். இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ளாமல் , செல்வம் தீட்டும் காலம் ஒன்று, சேவை செய்யும் காலம் ஒன்று என்று பிரித்து கொண்டதால் தான் இது சாத்தியமாயிற்றோ என்று நினைத்ததுண்டு.

நிறைகளை மட்டும் சொல்லி முடிக்க மனம் ஒப்பவில்லை. குறைகளை பட்டியலிடவும் மனமில்லை. அதனால் மனக்குறை ஒன்றை மட்டும் தெரிவித்து முடித்துக் கொள்கிறேன்.செல்வந்தர்கள் பலர் என்றாலும் , வறுமையின் பிடியில் இருப்பவரும் எண்ணற்றவர்கள். அவர்களுகாகவாவது , அரசனும் ஆண்டியாகும் அளவிற்கு உள்ள பழக்கம் காரணமாக நீடித்து வரும் வரதட்சிணை முறை மாற வேண்டும்.

- அநாமிகா மெய்யப்பன்

Posted by Editor at 03:38 AM | Comments (5) | TrackBack





July 30, 2004
செட்டிநாடு ஸ்பெஷல் - 1
முன்னறிவிப்பு : "குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்பதை நம்புகிறவன் நான். இது நான் பிறப்பால் அடையாளம் காணப்பட்ட ஒரு சாதியின் அருமை பெருமைகளையோ அல்லது சிறுமைகளையோ பற்றியோ அல்ல. காரைக்குடி பக்கம் வந்திடாதவர்கள் , அந்த பக்கம் நடக்கும் சில சுவாரசியமான விஷயங்களை தெரிந்து கொள்ள மட்டுமே இதை எழுதுகிறேன்.எல்லை மீறியிருந்தால் மன்னிக்கவும்.

கோவில்களில் சின்ன ட்யூப்லைட்டில் கூட பெரிதாக உபயம் என்று எழுதப்பட்டிருப்பது இப்பொழுதெல்லாம் சகஜம்.இந்த பழக்கம் காரைக்குடி பக்கமிருந்து தான் ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆற்றில் கொட்டினாலும் , அளந்து கொட்டு என்பதோடு இனிஷியல் எழுதி கொட்டு என்று நினைப்பவர்கள். சட்டி, பானை, ஸ்பூன் முதற்கொண்டு இனிஷியல் இல்லாத இடம் இருக்காது. குடும்ப முன்னோர்களை தெரிந்து கொள்ள வேண்டுமா ? இங்கே வாருங்கள் என்று பல இணைய தளங்கள் இப்பொழுது வரவேற்கின்றன. எங்களுக்கு , அங்கேயெல்லாம் செல்ல தேவையில்லை.வீட்டிலுள்ள சட்டி முட்டிகளை திருப்பி பார்த்தாலே தெரிந்து விடும். ஒவ்வொருவருக்கும் புகைவண்டி நீளத்திற்கு இனிஷியல் இருக்கும்.உதாரணத்திற்கு எனது இனிஷியல் எக்ஸ்பிரஸ் பி.பெரு.சிஅ.ராம.முரு.சுப.கும.மீ.மெய்யப்பன்.
அநேகமாக் திரு.பிச்சான் ( எனது இனிஷியலில் முதலில் உள்ளவர் இவர் தான்) அவர்கள் ஒற்றை ஆளாக வந்து , எங்கள் கிராமத்தை துவக்கியிருப்பார் என்று நினைக்கிறேன்.

முல்லைக்கு தேர் தந்த பாரியை பற்றி படித்திருப்பீர்கள். வீட்டு சுவற்றிற்கு முட்டை கொடுத்தவர்களை பற்றி தெரியுமா?. இப்பொழுது "முட்டை புரட்சி" வந்து சல்லிசாக கிடைக்கும் காலத்திலேயே, சத்துணவில் முட்டை போடுவது பெரிதாக இருக்கிறது. அந்த காலத்தில் வண்டி வண்டியாக கோழி முட்டைகளை கொண்டு வந்து , அதன் வெள்ளைத் தாதுவை எடுத்து , வீட்டுச் சுவர்கள் பளபளப்பாக இருக்க பூசியிருக்கிறார்கள் காசுள்ள பார்ட்டிகள்.

நான்கு அறை கொண்ட வீட்டை நான் வாங்கி விட்டு , ஒரு அறையை யாரும் பயன்படுத்தவில்லையே என்ற கவலையில் , மாதம் ஒரு முறை அந்த அறைக்கு சென்று நடைப் பயிற்சி செய்து வருகிறேன். அந்த காலத்தில் சிலர் முன்னோக்கு பார்வையுடன் தெருவிற்கு ஒரு வீடாக குட்டி அரண்மணை போல வளவு முழுவதும் அறைகளை வைத்து கட்டிவிட்டு சென்றதால் தான் , சில தலைமுறைகள் கழித்து இன்று குடும்பத்திற்கு ஒரு அறையாக மிஞ்சியிருக்கிறது.

வாழ்க்கை முழுவதும் சேமித்து ஒரு நாள் திருமண வைபவத்தில் அனைத்தையும் செலவளித்து விடும் வினோதம் இங்கு அதிகம். தலை வாழை இலை போட்டு, எத்தனை வகையான பலகாரங்கள் தருகிறார்கள் என்பதில் தான் இருக்கிறது ஒவ்வொருவரின் பெருமையும். அடுத்த அளவுகோல் எத்தனை அடுக்கு சட்டி வைக்கிறார்கள் என்பதில் இருக்கிறது. "சாமான் பரப்புவது" ஒரு பெரிய கலை. என்னைப் போன்ற ஏழைகள் , இப்படி வரும் சாமான்களை , வாடகைக்கு ஒரு அறை எடுத்து போட்டு வைக்க வேண்டும்.ஆட்கள் குடியிருக்க வாடகைக்கு வீடு எடுப்பதை விட , இது மாதிரியான பொருள்களை போட்டு வைக்க வாடகை வீடு ( அறை) எடுப்பவர்கள் அதிகம். வீட்டு சொந்தக் காரர்களுக்கும் , குடியிருப்போர் தொல்லை வராது பாருங்கள்.

திருமணத்திற்கு மொய் எழுத வேண்டுமே என்று யாருமே கவலைப் பட வேண்டாம். எல்லாரும் ஓர் நிறை என்பது போல , fixed rate ஆக , பணக்காரராக இருந்தாலும் , பரம ஏழையாக இருந்தாலும் அனைவரும் 25 பைசா தான் மொய் எழுத வேண்டும். சில இடங்களில் 1 ரூபாய் 25 பைசாவாக இருக்கும். அதை கறாராக வசூல் செய்ய , மொய் நோட்டுடன், தடபுடலாக கல்லாப் பெட்டி,காற்றாடி சூழ மொய் எழுதும் கூட்டம் ஆச்சர்யமாக இருக்கும்.

செட்டி நாட்டு அசைவ சமையல் ரொம்ப பிரபல்யம். ஆ(ட்)ச்சியை பிடிக்க போறோம் என்று காரைக்குடி பக்கம் போய் சொல்லி விடாதே , அடித்து விடுவார்கள் என்ற திரை வசனம் கேள்விபட்டிருப்பீர்கள். அந்த அளவிற்கு "ஆச்சி" யின் புகழ் ஒங்கியிருக்கிறது. அசைவ சமையலுக்கும் , ஆச்சிக்கும் தொடர்புடைய ஒரு கதை இருக்கிறது.சோழ ராஜ்ஜியத்தில் , செட்டி இன பெண்ணை ஒரு அரசன் கவர்ந்து விட்டதாகவும் , அதனால் பெண்கள் எல்லாம் தீக்குளித்து விட்டதாகவும் , அதனால் சைவ பிள்ளை குலத்தில் இருந்து பெண்களை கலப்பு மணந்து கொண்டதாகவும் ஒரு கதை உண்டு. ஆச்சி என்ற அடை மொழி அந்த குலப் பெண்களை குறிப்பதாகும். பின்னர் அதுவே நிரந்தர அடையாள மொழியாகி விட்டது.திருமணம் செய்து வந்த பின் , பெண் வழி குல சொந்தங்கள் தொடராமலிருக்க அசைவம் சமைக்க ஆரம்பித்ததாக செல்கிறது அந்த கதை.அதற்கு முன் சைவமாக தான் இருந்தார்களாம். ஆச்சியால் வந்தது தான் அசைவ சமையலும்.இந்த சம்பவத்திற்கு பின்னர் பாண்டிய நாட்டிற்கு புலம் பெயர்ந்து விட்டனராம்.

Posted by Editor at 04:01 PM | Comments (11) | TrackBack





வலை வலம் - 4
புது மொட்டுக்களின் அணிவகுப்பு புத்துணர்ச்சி அளிக்கிறது.மேலும் பூத்து குலுங்க, உங்களின் ஆதரவு நிழல் வழங்க வாருங்களேன்.

அருள் குமரனின் உள்ளத்து ஓசை பலமாக கேட்கிறது.சிங்கையிலிருந்து சென்னைக்கு சென்ற பயணத்தை மூன்று பகுதிகளாக விவரித்திருக்கிறார். அவர் அருகிலேயே தனித்தீவாக உள்ளத்திற்கு திரை போட்டு , கைதொலைபேசி தர தவிர்த்த சிங்கிற்கு அருகில் அமர்ந்து பயணித்தது போல இருக்கிறது. தனியாளாக சென்றால் பச்சை நரம்பெல்லாம் பார்க்கலாம் என்று தெரிகிறது.நமக்கெங்கே! பிள்ளையாண்டான் எங்கே ஓடுகிறானோ , புத்திரி எதற்கு அழுகிறாளோ , அம்மணி எதற்கு முறைக்கிறார்களோ என்று எப்படா ஊர் போய் சேர்வோம் என்று இருக்கிறது.

முரளி வெளிச்சம் நோக்கி நடக்கச் சொல்கிறார். ஒரு வயசானவருக்கு அவர் செய்த மிகப் பெரிய சமூக சேவை பற்றி எழுதியுள்ளார். காலத்தால் செய்த உதவி சிறிதெனினும்... ஞாபகம் வந்தது.bestseller டா வின்ஸி கோட் பற்றி சொல்கிறார். இந்த ஊரில் எல்லாமே bestseller தான் :). இந்த புத்தகத்தை பற்றிய குறிப்பை படிக்கும் போது கிறிஸ்துவின் சகோதரது கல்லறை என்று ஒரு புதுக் கதையை ஹிஸ்டரி சேனலில் பார்த்தது ஞாபகம் வந்தது.

சுபாஷினியின் தெய்வம் பற்றிய கவிதை நன்றாக இருக்கிறது.
"உன் புன்னகைக்காக காத்திருக்கும் இதயம்
உன்னருகில் என்றும் இருக்கும் தெய்வம்... "
எங்கள் வீட்டில் உண்மை தான் . அப்பப்ப சாமியாடும் போதே நினைத்தேன்.

ப்ருந்தாவனத்திற்கு வந்திருக்கிறார் கோபி. கனிகாஸ் - நிஜமல்ல கதை என்கிறார். நம்புவோம்.கதாபாத்திரங்களுக்கு சங்கர் போல முன்னுரை கொடுத்து அறிமுகப் படுத்துகிறார்.

யாழ் சுதாகர் எங்கே நிம்மதி என்று தேடுபவர்களுக்கு , இங்கே நிம்மதி என்று காட்டுகிறார். புகழ்பெற்ற தைப்பூச காவடியின் படம் அருமையாக உள்ளது.

-அநாமிகா மெய்யப்பன்

Posted by Editor at 01:43 AM | Comments (3) | TrackBack





மாய ஜாலம்
உங்களுக்கு மந்திரம், மாய ஜாலம் இவற்றின் மேல் நம்பிக்கை இருக்கிறதா?. இல்லையென்றால் இந்த பதிவை தொடர்ந்து படிக்கவும்.
நம்பிக்கை இருக்கிறது என்றால் , நான் எழுதுகின்ற எல்லா குப்பைகளையும் நீங்கள் படிக்க நான் ஏற்கனவே மந்திரித்து விட்டதால் , நீங்கள் விரும்பா விட்டாலும் , இதை படிக்கத் தான் போகிறீர்கள்....

மந்திரம்
அம்புலி மாமாவையும், ரத்ன மாலாவையும் படித்து வளர்ந்ததாலோ, விக்ரமாதித்தன் கதைகளில் அதிகம் ஆழ்ந்து விட்டதாலோ மந்திரம் , மாயா ஜாலம் இவற்றைக் காண எனக்கு கொஞ்சம் ஆர்வம் உண்டு. விறகு அடுப்பு வைத்திருந்ததால் , தேள்களுக்கு எங்கள் வீட்டில் பஞ்சம் இல்லை. வாரத்திற்கு ஒரு தேளாவது வீட்டிற்கு விஜயம் செய்து விடுவர். அப்பொழுதெல்லாம் அம்மா 'ஙொப்பராண சத்தியமா சொல்றேன்..." என்று சொல்லி ஏதோ ஒரு சொற்தொடரை சொல்வார் ( எனக்கு இப்பொழுது மறந்து விட்டது). அந்த மந்திரத்திற்கு கட்டுப்பட்டு தேள்கள் அசையாமல் அங்கேயே நிற்கும். சாவகாசமாக விளக்குமாறையும், குப்பைக் கூடையையும் எடுத்து வந்து அதை அடித்து போடும் வரை அப்படியே நின்று கொண்டிருக்கும். இது ஒரு மந்திரம் என்று நான் நினைத்து வந்தேன்.எப்பொழுதாவது தேள் கொட்டி விட்டால், மருத்துவரிடம் நாங்கள் செல்ல மாட்டோம். ஊரில் பெட்டிக்கடை வைத்திருந்த , ஒரு மலையாள தாத்தாவிடம் சென்றால் , அவர் "சூ சூ" என்று ஏதோ சொல்லி மந்திரித்து, தேள் கடித்த இடத்தில் பட்டென்று கைக்குட்டையால் ஒரு அடி கொடுத்து அனுப்பி விடுவார்.எல்லாம் சரியாகிவிடும். காய்ச்சல் வந்து விட்டால்,பயந்து விட்டோம் என்று சொல்லி , மந்திரித்து கறுப்பு கயிறு கட்டி விடுவார்கள். அது தான் மருந்து.

ஹிப்னாடிஸம்
ஆரம்ப கல்வி கற்கும் கால கட்டத்தில் , குடும்ப வறுமை காரணமாக அத்தை வீட்டில் தங்கி படித்து வந்த என் நண்பன் பூதலிங்கம் ஒரு நாள் காணமல் போனான்.யாரோ அவனை மயக்கி,விபூதி பூசி கூட்டி சென்று விட்டதாகவும், போகும் வழியில் பேருந்து நிலையத்தில் ஞாபகம் மீண்டு வந்து தப்பித்து , அவனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாக , அவனது அத்தை வீட்டிற்கு தகவல் வந்தது.ஹிப்னாடிஸம் பண்ணி , அவனை கூட்டி சென்றிருப்பார்கள் என்று நண்பர்கள் அனைவரும் நம்பினோம். கொஞ்ச நாட்கள் பள்ளிக்கூடம் செல்லவே பயமாக இருந்தது. யாரும் கண்ணை உற்றுப் பார்க்க சொன்னால் , பார்க்க கூடாது என்று முடிவெடுத்தோம். சற்று காலம் கழித்து , அத்தை வீட்டு வேலை செய்யச் சொல்லி செய்த கொடுமைகள் தாங்காமல், அந்த சிறு வயதிலேயே அவனே அப்படி ஒரு கதை கட்டி விட்டு அப்பா அம்மவிடம் சென்றி விட்டான் என்ற ஊரில் பேசத் தொடங்கினார்கள். எது உண்மை என்பது பூதலிங்கத்திற்கு தான் தெரியும். ஹிப்னாடிஸம் செய்து நான் இது வரையில் யாரையும் நேரில் பார்த்திருக்கா விட்டாலும் , அறிவியலால் ஒத்துக் கொள்ளப்பட ஒரு துறை என்ற வகையில் இது உண்மையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

சாமியாட்டம்
இராமநாரயணன் படம் பார்த்து சாமி ஆடும் பெண்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அய்யானர் பெயரை சொல்லிக் கொண்டு , அரிவாளில் நின்று கொண்டு வந்து , அருள் வாக்கு சொல்பவர்கள் எங்கள் பகுதியில் அதிகம். இதையும் மனோதத்துவத்தில் அறிவியல் பூர்வமாக விளக்குகிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு , என் நண்பன் ஒருவன் வீட்டில் 10 லட்சம் பரிசு விழும் என்று சொல்லி விட்டு சென்று வாங்கிய பரிசு சீட்டிற்கு 10 லட்சம் பரிசு விழுந்தது. பின் குமுதத்தில் பேட்டி கண்ட போது , அடுத்து 20 லட்சம் பரிசு விழும் என்று பேட்டியில் சொன்னார்கள். அது போலவே அவர்களுக்கு அடுத்து 20 லட்சம் பரிசு கிடைத்தது.அவர்கள் வீட்டில் அனைவருக்கும் சாமி வரும். தெலுங்கு சாமியெல்லாம் வந்து தெலுங்கில் சரளமாக மாட்டலாடிவார்கள்.தொடர்ந்து இரண்டு முறை பரிசு கிடைத்தது , ஏதோ ஒரு மந்திரத்தில் தான் என்று நம்பியவர்கள் பலர்.

சித்து விளையாட்டு
பிரபல சாமியார்கள் விக்கி உள்ளிருந்து லிங்கம் வர வைப்பதையும் , ஆகாயத்தில் கையை வீசி தங்க சங்கிலி கொண்டு வருவதையும் கேள்விப்பட்டு , சித்து வேலைகள் உண்மையாக இருக்குமோ என்று நினைத்ததுண்டு.பின்னாளில் பி.சி.சர்க்கார் பார்வையாளர்கள் முன் புகைவண்டியை மறைய வைத்தது எப்படி , மற்ற மந்திர காட்சிகளை எப்படி தந்திரமாக செய்கிறார்கள் எனறெல்லாம் , பத்திரிக்கைகளிலும் , தொலைக்காட்சியிலும் வந்து விட்டதால் , சித்து விளையாட்டும் இது மாதிரி தான் இருக்கும் என்று நினைக்கிறேன். சாவி போன்ற இதழ்களில் வெளி வந்த பகவான் தொடர்களை படித்திருக்கிறேன். பெரிய மனிதர்களெல்லாம் எந்த அடிப்படையில் இது மாதிரியான சித்து வேலைகளை நம்பி பக்த கோடிகளாகிறார்கள் என்று தெரியவில்லை.யாகவா முனிவரும் , ஏதோ ஒரு பாபாவும் சன் டி.வியில் சண்டை போட்டது ரொம்ப பிரபல்யம்.

அறிவியல் கப்ஸா
இந்தியாவில் தான் இப்படி என்றால் , அமெரிக்காவிலும் ,ஊருக்கொரு கைரேகை பார்க்கும் ஜோஸ்யக் கூடங்களும், அவற்றிற்காக தொலைக் காட்சியில் வரும் விளம்பரங்களும் ஆச்சர்யமாக இருந்தன. கலிபோர்னியாவில் , சான் பிரான்சிஸ்கோவிற்கு அருகில் ஒரு மர்மமான இடம் (mystery spot)இருப்பதாக அங்கு அறிவியலுக்கு அப்பாற்பட்ட, புவியீர்ப்பு விசைக்கு எதிரான விஷயங்கள் நடப்பதாகவும் கேள்விப் பட்டு , ஆர்வத்துடன் சென்று பார்த்தேன். கூட வந்த நண்பரும் , அதன் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி வந்தார். அங்கு எடுக்கப் பட்ட புகைப் படங்களில் குள்ளமானவர் , உயரமாவது போல் காண்பித்ததையும் இணையத்தில் பார்த்து , அறிவியலால் விளக்க இயலாத ஒரு நிகழ்வை பார்க்க போவதாக மிகுந்த நம்பிக்கையுடன் சென்றேன்.அங்கு சென்றபின் தான் தெரிந்தது , எல்லாம் ஏமாற்று வேலை என்று. தாறுமாறான சரிவுகளைக் கொண்ட இடத்தில் , புத்திசாலித்தனாமாக சில அமைப்புகளை அமைத்து , நம் கண்களை ஏமாற்றுகிறார்கள்.

பெர்முடா முக்கோணமும் (Bermuda Triangle ) இப்படித்தான் கட்டுக் கதையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பெர்முடா முக்கோணத்தை அடிப்படையாக கொண்ட ஆங்கில படத்தை பார்த்த போது , அங்கு சென்று (முடிந்தால் திரும்பி )வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
மிஸ்டரி ஷ்பாட்க்கு அப்புறம் , அந்த ஆசையை மூட்டை கட்டி வைத்து விட்டேன்.

போனால் திரும்பி வர முடியாத கரும்துளைகளை (black hole) முதலில் படித்த போது , எங்கோ ஆஸ்திரேலியாவிற்கு அப்பால் வானத்தில் இருக்கும். விமானம் அதற்குள் சென்றால் காணாமல் போய்விடும் என்று நினைத்திருந்தேன். பின்னர் தான் தெரிந்தது , இதை கணித சமன்பாடுகள் மூலம் தான் பார்க்க முடியும். நேரில் பார்க்க முடியாது ( பார்த்தால் திரும்பி வர முடியாது) என்றார்கள். பின்னர் ஹப்பிள் தொலைநோக்கியில் பிடித்த தாக சில படங்களை வெளியிட்டு அவை கரும்துளைகளாக இருக்கலாம் என்று அனுமானித்தார்கள். இப்பொழுது ஸ்டீபன் ஹாகிங் (Stephen Hawking ) கரும்துளைக்குள் செல்லும் பொருள் மீண்டு வருமென்கிறாராம். என்ன ! கரும்பாக உள்ளே போனால் , கரும்பு சாறாக திரும்பி வருமாம்.அறிவியலில் சொல்வது எதையும் முழுமையாக நம்ப முடியாது. அண்டத்தை பற்றிய நம் அறிவு வளரும் போது , இன்று சொல்வது நாளைக்கு மாறி விடும் .

செய்வினை ( Black Magic)
மலையாள மாந்திரீகர்கள் இதற்கு புகழ் பெற்றவர்கள். என் மனைவி , அவளது வீட்டில் தங்கியிருந்த நெருங்கிய உறவினர் குடும்பத்திற்கு யாரோ செய்வினை செய்து விட்டதாகவும் , அதனால் அடுப்பறையில் தனித்தனி டப்பாவில் வைத்திருக்கும் பொருள்களெல்லாம் , பிரிக்க முடியாதபடி ஒன்றாக கலந்து விடுமாம் (மிளாகாய் பொடியும் , டீத்தூளும். இப்படி நல்ல பொருத்தம் பார்த்து உபயோக படுத்த முடியாத படி கலக்குமாம் ).பின்னர் இன்னொரு சாமியார் வந்து , அதை பிடித்து அடைத்த பின் தான் சரியானதாம். இதை நேரில் பார்த்ததாக சொல்கிறாள். மனைவி சொல்லே மந்திரம் என்று நம்பித் தானே ஆக வேண்டும்.இதே போல , உடன் வேலை பார்க்கும் நண்பரும் , அவரது தந்தை ஆசிரியராக வேலை பார்த்த போது , அவரால் கண்டிக்கப் பட்ட மாணவனது குடும்பத்தால் செய்வினை செய்யப்பட்டு அவதியுற்றதாக கூறினார். இதெல்லாம் எப்படி நடக்கிறது என்பதில் சற்று குழப்பமே!

எதிர்காலம்
தொலைக்காட்சியில் ஒரு பேட்டியில் பேராசிரியர் ஒருவர் கண்ணிற்கு தெரியாத கதிர் வீச்சுக்களை பற்றி நாம் சென்ற நூற்றாண்டில் தான் தெரிந்து கொண்டோம்.இன்றைய அறிவியலின் அடிப்படையே நம் அறிவால் ஜீரணிக்க முடிந்த தத்துவங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. இப்பொழுது அது தவறு என்று மெதுவாக புலப்பட துவங்கி விட்டது.நாம் முப்பரிமாணங்களுடன், காலத்தையும் (Back to the future I/II/III படத்தை இரசித்திருக்கிறீர்களா?) ஒரு பரிமாணமாக கருத துவங்கிவிட்டோம். இது போல் இன்றைய நம் அறிவிற்கு புலப்படாத எத்தனையோ பரிமாணங்கள் இன்னும் இருக்கலாம். அவற்றிலெல்லாம் என்னென்ன ஆச்சரியங்கள் காத்திருக்கிறது என்று தெரியவில்லை என்றார். தெரிந்தால் கூடு விட்டு கூடு பாய்வது எப்படி என்று தெரிந்து விடும்.

Posted by Editor at 12:28 AM | Comments (0) | TrackBack





July 29, 2004
ஏட்டுச் சுரைக்காய்
இந்தியாவில் கல்வி முறை மாற்றப் பட வேண்டும் என்பது பலரைப் போல என் கருத்து. ஆங்கிலேயர்களுக்கு குமாஸ்தாக்களை உருவாக்க கொண்டுவரப் பட்டது இந்த கல்வி முறை.

குழந்தைகளுக்கு வேப்பங்காயாக கசக்கும் அளவுக்கு, பிழிந்து வாங்கும் இந்த கல்வி முறை , அந்த அளவுக்கு அவர்களை எதிர்கால நிஜ வாழ்க்கைக்கு தயார்படுத்துவதில்லை.அவரவர் அறிவுத் திறனுக்கேற்ப பாடம் கற்பிக்காமல், வயதை மட்டுமே அடிப்படையாக் கொண்டு , பாடம் கற்பிக்கப் படுகிறது.சற்று சுமாராக படிக்கும் குழந்தைகளை , மழைக்கு கூட பள்ளியில்
ஒதுங்க பயப்படும் அளவிற்கு பயமுறுத்திவிடுகிறது இன்றைய பாடத் திட்டம்.பலரின் வாழ்க்கை பொதுத் தேர்வு நடக்கும் சில மணி நேரங்களில் தீர்மானிக்கப் படுகிறது.

பள்ளி கூடத்தின் வாசலில் உள்ள மரம் , செடி, கொடி வகைகள் கூட தெரியாது , உலகத்தின் எந்த மூலையில் எந்த மரம் வளரும் என்று புவியியல் பாடம் எழுத்தில் மட்டும் சொல்லி தரப்பட்டது."அச்சமில்லை அச்சமில்லை" என்ற பாடல் வரிகள் படிக்க மட்டுமே சொல்லி தரப் பட்டதே தவிர , அச்சமில்லாமல் எப்படி வாழ வேண்டும் , குறைந்த பட்சம் அந்த பாடலை அச்சமில்லாமல் எப்படி மேடையேறி பாடுவது என்பது கூட சொல்லித் தரப்படவில்லை.வடிவங்களின் பயன் அறியாது , அவற்றின் செயல் தெரியாது , வகைகள் மட்டுமே சொல்லி தரப் படுகிறது வடிவியலில்.வேதியியலில் குடிவையில் வண்ணம் வண்ணமாக திரவங்களை கலந்து, நிறம் மாறும் அளவுகளை குறிக்க சொல்லி தரப்பட்டதே தவிர, அன்றாட வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நடக்கின்றன என்பது தவிர்க்கப் பட்டுவிட்டது.இலைகளையும் , விலங்குகளையும் வரைய சொல்லித்தரும் வரைபட வகுப்பாகவே உயிரியல் இருக்கின்றது."ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" என்பது எப்பொழுதும் பொய்யா மொழியாக இருக்க வேண்டும் என்று,கண்மூடித்தனமாக இன்னமும் விடாமல் கடைப் பிடித்து வருகிறோம் இந்த கல்விமுறையை.இப்பொழுது காணும் பொருளாதார வளர்ச்சி , இதை மாற்ற எந்த வகையிலும் உதவவில்லை.

நான் இது பற்றி முன்பு எனது வலைதளத்தில் பதிந்திருந்தேன். சுவடு சங்கர் "தட்டு"ங்கள் திறக்கப்படும் என்று சாடுகிறார்.
"மூக்கு" சுந்தர் June 03 பதிவு மற்றும் வெங்கட் May 25 , June 02 தேதியிட்ட பதிவுகள் கல்வி முறையைப் பற்றியது தான்.கே.சத்யநாராயணனின் http://prayatna.typepad.com/educationஇதற்காகவே படைக்கப் பட்டிருக்கிறது.

இதைப் பற்றி எழுதுவதனால் என்ன பயன் என்று சிலர் நினைக்கலாம். முதலில் நோய் இருக்கிறது என்று தெரிந்தால் தான் , அதை குணப்படுத்த என்ன மருந்து என்று கண்டுபிடிக்க தோன்றும்.நோயே இல்லை என்று நினைத்திருந்தால் , கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் தான்.

கல்வி முறையை மாற்றினால் எல்லாம் சரியாகி விடுமா என்று கூட சிலர் நினைக்கலாம்.ஒரு காலத்தில் , இந்தியாவில் நல்ல வேகப் பந்து வீச்ச்சாளர்களே இல்லையே என்று வருந்தாதவர்கள் உண்டா?. அதுவும் இடது கை வேக பந்து வீச்சாளர்கள் இந்தியாவிற்கு கிடைக்க மாட்டார்களா
என்று ஏங்காத மனமும் உண்டா?.மதன்லால் , பின்னி போன்று வேகமாக ஓடி வந்து , மித மெதுவாக பந்து வீசுபவர்களே வந்து கொண்டிருந்தார்கள் ( அவர்களின் திறமைய நான் குறைத்து மதிப்பிட வில்லை. பந்தின் வேகத்தை மட்டுமே குறிப்பிடுகிறேன்.) இந்தியர்களால் இவ்வளவு வேகம்தான் முடியும், சுழற் பந்து தான் நம் சொத்து என்று இருந்தோம். ஆனால் இன்று, உலக தரத்தில் வேக பந்து வீச்சாளர்கள் வந்து இந்திய அணியில் குவிகின்றார்களே அது எப்படி? மாயமா, மந்திரமா ? . இல்லை , அதுவாக தானாக மாறியதா? MRF Pace Foundation வந்த பின் தானே இதெல்லாம் சாத்தியமாயிற்று.வேகபந்து வீச்சாளர்கள் இல்லை என்ற குறையை உணர்ந்து , எப்படி அதை சரி செய்து பயிற்று விப்பது என்று அடிப்படையில் இருந்து ஆரம்பித்ததால் தான் இந்த அளவிற்கு வெற்றி பெற்றனர்.

அது போல , இந்தியா வளர்ந்த நாடாக , அறிவியல் வல்லரசாக , வறுமையில்லாத நாடாக உருவெடுக்க , அடிப்படைக் கல்வி முறை மாறத்தான் வேண்டும்.

Posted by Editor at 01:17 AM | Comments (6) | TrackBack





வாடகை வாகன எண்
நீங்கள் ஏறிச் சென்ற வாடகை வாகனத்தின் (TaxiCab) பதிவு எண்னை எப்பொழுதாவது ஞாபகம் வைத்திருந்ததுண்டா?. எங்கே ! வண்டியில் ஏறும் முன் பேரம் பேசுவதிலும் , ஏறியவுடன் ,மீட்டருக்கு மேல் கொடுக்க வேண்டியிருப்பதை நினைத்துக் கொண்டு, சூடு வைத்த மீட்டரா , சூடு வைக்காத மீட்டரா என்று பக் பக் என்று ஒலி வேகத்தில் ஓடும் மீட்டரை நோட்டம் விடுவதிலுமே கவனம் போய்விடுகிறது. இதிலெங்கே வண்டி எண்ணாவது , ஞாபகமாவது என்கிறீர்களா?!


சிலர் பார்க்கும் பொருளிலெல்லாம் அவர்கள் தொழிலுடன் அல்லது விருப்பமான துறையுடன் இணைத்து பார்ப்பார்கள். நம்ம ஊர் ஆள் ஒருவரினால், கணிதத்தில் சில எண்களுக்கு வாடகைவண்டி (TaxiCab) எண் என்று பெயர் வந்ததாக ,ஒரு குட்டிக் கதை படித்தேன்.


கணித மேதை இராமானுஜம் லண்டனில் மருத்துவமனையில் இருந்த போது , அவரைப் பார்க்க வந்த ஹார்டி , தான் வந்த வாடகை வாகனத்தின் எண் 1729 என்றும் , அது ஒரு மந்தமான எண் என்றும் சொன்னாரம்.அந்த எண்ணின் மகத்துவம் அவருக்கு தெரியும். நோய்வாய்பட்டிருந்த இராமானுஜத்தை உற்சாகப்படுத்த வேண்டுமென்ற அவர் அப்படி சொன்னார் என்றும் செல்கிறது கதை.உடனே இராமானுஜம் இல்லை 1729 அது ஒரு அற்புதமான எண். இரண்டு எண்களின் மூன்றாம் வர்க்கத்தின் ( cube-க்கு சரியான தமிழ் பதம் இதுதானா?) கூட்டுத் தொகையின் சிறிய எண் இது என்றாரம்.( தமிழ்ப்படுத்தியதில் உங்களை படுத்தியிருந்தால் கீழே உள்ள ஆங்கில வாக்கியத்தை படித்துக் கொள்ளுங்கள்.) அதனால் , இந்த வரிசை எண்களுக்கு வாடகைவாகன (TaxiCab ) எண் என்று பெயர் வந்ததாம்.


நீஙகள் அடுத்த ஏறுகின்ற வாடகை வாகனத்தின் எண் 87539319 ஆக இருந்தால் , உங்களுக்கும் ஒளிந்திருக்கும் இராமானுஜர் அடுத்தமுறை விழித்துக் கொள்வார் என்று நம்புகிறேன்.


Taxicab(1) = 2
= 1*1*1 + 1*1*1


Taxicab(2) = 1729
= 1*1*1 + 12*12*12
= 9*9*9 + 10*10*10


Taxicab(3) = 87539319
= 167*167*167 + 436*436*436
= 228*228*228 + 423*423*423
= 255*255*255 + 414*414*414

In memory of this incident, the least number which is the sum of two positive cubes in n different ways is called the nth taxicab number.

வெறும் சிலேட்டில் எழுதி தன் கணிதக் காதலை வளர்த்த , சாதி/மத கட்டுப்பாட்டை தவிர்த்து கப்பலேறி எப்பொழுதும் எண்களுடனேயே வாழ்ந்த் இராமானுஜரின் தீரங்களுக்கு விடை காண இன்னும் முயற்சி நடந்து வருகிறது.




Posted by Editor at 12:24 AM | Comments (4) | TrackBack





July 28, 2004
வலை வலம் - 3
எனக்கு தன்னடக்க வியாதி அதிகமாக இருப்பதாக வந்தியதேவரும்,மூக்கரும் குறிப்பிட்டிருந்தனர். இந்த வியாதியின் அறிகுறி என்ன என்று பார்த்ததில் , என் வலைத்தளத்திற்கு நான் சூட்டிய பெயர் (பாமரனின் பிதற்றல்கள் ) முதலில் தெரிந்தது.என்னைப் போல இந்த நோய் பீடிக்கப் பட்டவர்கள் வேறு யாரேனும் தமிழ் வலைத்தளத்தில் உள்ளனரா என்று , வலைத்தளங்களுக்கு இடப்பட்ட பெயரிலிருந்து அறிய எடுத்த முயற்சியில் கிடைத்த வலைத்தளங்களைப் பற்றி.


அன்பு செழியன் - குப்பை : இணையமெங்கும் சென்று மாணிக்கங்களை திரட்டி வந்து இந்த குப்பையில் சேர்க்கிறார். குப்பை வலைத்தளங்களுக்கு நல்ல உரமாக மாறி வருகிறது.

ஹரி - புலம்பல்ஸ்: நாட்டு நடப்பை பற்றிய தனது புலம்பல்களை இங்கு பதிவாக சொல்கிறார். தேர்தல் தோல்வியில் அம்மாவின் புலம்பல்களை இங்கு பார்க்கலாம்.அம்மாவிர்ற்கு கற்பனை கதைகளில் ரொம்ப ஆர்வம் போல. சென்னா ரெட்டி தொட்டு , சதி திட்ட கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டே இருக்கிறார்.

மூனா - கிறுக்கல்: இலங்கை பற்றி பல நல்ல கேலிச் சித்திரங்கள். "யுத்தம் கவனம் கச்சாமி" ,"வெளியேறுவது எப்படி" தலைப்பும் , படமும் நன்றாக உள்ளது.

பரி - வலைக்கிறுக்கல்: மரத்தடி போட்டி வெற்றியாளர்களுக்கு மருத்துவ செலவு பற்றி முக்கிய அறிவிப்பு கொடுத்துள்ளார். போட்டியில் கலந்து கொள்பவர்கள் கவனிக்க.

பெயரிலி - பெயரிலியின் பினாத்தல்
: அரற்றுமணி (தளையுறாததும் தலைப்புறாததும் IX) ஒரு முறைக்கு நான்கு முறையாக படித்து , ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் புரிந்து... வாவ் நன்றாகத் தான் இருக்கிறது இந்த வகை கவிதைகளைப் படிப்பது. அடுத்த கவிதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

ரங்கா - புண்ணாக்கு : ப்ரெஸ்டிஜ் பத்மனாபன் , பட்ஜெட் பத்மனாபன் ,பீட்டர் பத்மனாபன் போன்ற பத்மனாபன் வகையறாக்களுக்காக ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது இந்த தளம். மௌனம் பேசலாம் , எண்ணங்கள் பேசக் கூடாதா என்கிறார். பேசலாம். தொடர்ந்து பேச வேண்டும்.

சாமான்யன் - சாமான்யன் : சாமான்யமாய் புதுப்புது அறிவியல் சொற்களை தமிழாக்கம் செய்கிறார்.

சந்தோஷ்குரு - வெட்டிப் பேச்சு : சந்தோஷ்குரு பற்றி சென்ற வலத்திலேயே குறிப்பிட்டு விட்டேன்.ரூட் போட வாரீகளா என்று செலவு மிச்சமாக ரூட் போட சொல்லித் தருகிறார்.

சங்கரய்யா - கிறுக்கனின் கிறுக்கல்கள்: காணாமல் போய்விட்டவர்கள் பட்டியலில் இருந்து மீண்டு வந்து தமிழில் klipfolio தந்துள்ளார்.


-அநாமிகா மெய்யப்பன்


Posted by Editor at 12:28 AM | Comments (4) | TrackBack





பாரதி தாசனின் "ஒரே குறை"
காதலே பொய்யடாவில் நான் சொல்லியிருந்த "காக்க வைத்தல்" படலத்திற்கு இதை விட சிறந்த கவிதை இருக்க முடியுமா?

அழகிருக்கும் அவளிடத்தில் அன்பி ருக்கும்
அறிவிருக்கும்! செயலிலுயர் நெறியி ருக்கும்
விழியிருக்கும் சேலைப்போல்! கவிதை யின்பம்
வீற்றிருக்கும் அவளரிய தோற்றந் தன்னில்
மொழியிருக்கும் செந்தமிழில் தேனைப் போலே
முகமிருக்கும் நிலவுபோல்! என்னைக் காணும்
வழியிருக்கும்; வரமாட்டாள்; வந்தெ னக்கு
வாழ்வளிக்கும் எண்ணந்தான் அவள்பா லில்லை!

திருவிருக்கும் அவளிடத்தில்! திறமி ருக்கும்!
செங்காந்தள் விரல்நுனியின் நகத்தி லெல்லாம்
மெருகிருக்கும்! இதழோரப் புன்சி ரிப்பில்
விளக்கிருக்கும்! நீள்சடையில் மலரி ருக்கும்!
புருவத்தில் ஒளியிருக்கும்; வளைவி ருக்கும்!
போய்ப்போய்நான் காத்திருக்கும் இடமும் மிக்க
அருகிருக்கும்! வரமாட்டாள்; உடையும் நெஞ்சுக்
கணைகோலும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

பண்பிருக்கும் அவளிடத்தில்! ஆடு கின்ற
பச்சைமயில் போல்நடையில் அசைவி ருக்கும்!
மண்ணிருக்கும் கல்தச்சுச் சுதைநூல், நல்ல
வார்ப்படநூல் ஓவியநூல் வல்லார் எல்லாம்
பெண்ணிருக்கும் அமைப்பறியும் ஒழுங்கி ருக்கும்!
பிறர்துயின்றபின், என்போல் இரவில் மூடாக்
கண்ணிருக்கும் வரமாட்டாள்; என்றன் காதற்
கனல்மாற்றும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

கனிவிருக்கும் அவளிடத்தில்! சங்கைப் போலும்
கழுத்திருக்கும்! உயர்பசுமை மூங்கிலைப் போல்
தனித்துயர்ந்த தோளிருக்கும்! கன்னம், ஈரச்
சந்தனத்துப் பலகைபோல் குளிர்ந் திருக்கும்!
இனித்திருக்கும் பொன்னாடை! அவள் சிலம்பில்
எழும்ஒலியில் செவியனுப்பி நிற்பேன். அந்த
நினைவிருக்கும்; வரமாட்டாள்; சாவி னின்று
நீக்குமோர் எண்ணந்தான் அவளுக் கில்லை.

வளமிருக்கும் அவளிடத்தில்! இருக்கும் தூய்மை!
மயிலிறகின் அடியைப்போல் பல்லி லெல்லாம்
ஒளியிருக்கும்! உவப்பிருக்கும் காணுந் தோறும்!
உயர்மூக்கோ எள்ளுப்பூப் போலி ருக்கும்!
தெளிவிருக்கும் பேச்சிலெல்லாம் சிரிப்பி ருக்கும்!
செழும்ஊரார் அறியாமல் வரவும் கொல்லை
வெளியிருக்கும்! வரமாட்டாள்; என் விழிக்கு
விருந்தளிக்கும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

பொறையிருக்கும் அவளிடத்தில்! கொல்லை தன்னில்
பூம்பாகற் கொடிதனது சுருட்கை யூன்றி
உறைகூறை மேற்படர்ந்து சென்றிட் டாலும்
ஒருதொடர்பும் கூறையிடம் கொள்ளாமை போல்
பிறரிருக்கும் உலகத்தில் என்னையே தன்
பெறற்கரிய பேறென்று நெஞ்சிற் கொள்ளும்
முறையிருக்கும்! வாமாட்டாள்; வந்தே இன்ப
முகங்காட்டும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

அறமிருக்கும் அவளிடத்தில்! இருக்கும் வாய்மை!
அண்டையிலே பெற்றோர்கள் இருக்கும் போதும்
புறமிருக்கும் என்மீதில் உயிர் இருக்கும்!
'பூத்திருக்கும் நான்காத்த முல்லை' யென்றும்
'நிறம்காண வேண்டும்'என்றும் சாக்குச் சொல்லி
நிழல்போல என்னிடத்தில் வரவும் நல்ல
திறமிருக்கும்! வரமாட்டாள்; வந்தென் நோயைத்
தீர்க்குமோர் எண்ணந்தான் அவளுக் கில்லை.

உயர்விருக்கும் அவளிடத்தில்! இருக்கும் நேர்மை!
உடலாவி பொருளிவற்றில் நானும்,தானும்
அயலில்லை என்னுமோர் உளம் இருக்கும்!
அசைகின்ற இதழிலெல்லாம் அத்தான் என்ற
பெயரிருக்கும்! எவற்றிலுமே எனை யழைக்கும்
பித்திருக்கும்! மாடியினின் றிறங்க எணிக்
கயிறிருக்கும்! வரமாட்டாள்; என்செய்வேன்! நான்
கடைத்தேறும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

சீரிருக்கும் அவளிடத்தில்! உலகம் போற்றும்
செந்தமிழ்மங் கைக்கிருக்கும் சிறப் பிருக்கும்!
தார்இருக்கும் நெடுந்தோளான் பாண்டி நாட்டான்
தானேநான் எனும்கொள்கை தனக் கிருக்கும்.
ஊரிருக்கும் தூக்கத்தில் கொல்லைப் பக்கத்
துயர்கதவின் தாழ்திறந்து வரவோ பாதை
நேரிருக்கும் வரமாட்டாள்; என்றன் காதல்
நெருப்பவிக்கும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

அருளிருக்கும் அவளிடத்தில்! இசையி ருக்கும்!
ஆடவனும், ஓர்மகளும் ஒப்ப நோக்கி
இருள்கிழித்து வெளிப்படுமோர் நிலவு போல
இரண்டுளத்தும் திரண்டெழுந்த காத லுக்குத்
திரைஎன்ன மறைவென்ன? அவள்என் தோள்மேல்
தேன்சிட்டைப் போற்பறந்து வருவ தற்கும்
கருத்திருக்கும் வரமாட்டாள்;வந்தெ னக்குக்
காட்சிதரும் எண்ணந்தான் அவள் பாலில்லை.

Posted by Editor at 12:14 AM | Comments (7) | TrackBack





காதலே பொய்யடா!!!
தலைப்பை பார்த்தவுடன் உடனே எனக்கு காதல் தோல்வி அல்லது நான் காதலுக்கு விரோதி என்று நினைத்து விடாதீர்கள். காதலுக்கும் , எனக்கும் காத தூரம். திருமணத்திற்கு பின் மனைவியை காதலிக்கிறேன் என்று கதை விடும் கூட்டத்தை சேர்ந்தவன் நான்.


(மனைவியை காதலிப்பதாக கூறுவது ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை போல).

காவிய காதல் , தெய்வீக காதல் , காதல் போயின் சாதல் போன்றவை எல்லாம் காவியங்களுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்குமே தவிர , இந்த காலத்து காதலில் இது போன்ற தகுதிகளுக்கு இடமில்லை என்றே தோன்றுகிறது.காதல் பெரும்பாலும் கண்டதும் காதலாக இருப்பதால் , தோற்றத்தின் அடைப்படையிலேயே ஆரம்பிக்கிறது. உலக அழகியாக இல்லா விட்டாலும் , ஓரளவாவது பார்வைக்குரியவளாக இருக்க வேண்டும் என பெரும்பாலான ஆண்கள் விரும்புகின்றனர்.பெண்களோ தங்களின் காதலன் கதாநாயகன் போல ( இப்பொழுதெல்லாம் வில்லனைப் போல) இருக்க விரும்புகின்றனர் அல்லது குறைந்தபட்சம் தன் சொல் கேட்டு நடப்பவனாக , நிலையான சந்தோஷமான வாழ்க்கையை தர வல்லவனாக இருக்க வேண்டும் என்று பார்த்தே காதலனை தேடுகின்றனர்.இப்படி புற விஷயங்களை /தேவைகளை ஒட்டி ஆரம்பிக்கும் காதல் எப்படி காவிய காதலாக அமைய முடியும்?. அதிர்ஷடவசத்தால் இப்படி ஆரம்பிக்கும் காதலில் ஒரு சில சமயங்களில் அலைவரிசை ஒத்த காதலாக அமைந்து விடுவது உண்டு.மற்றபடி கருத்தொருமித்த காதல் கதைகளில் மட்டும் தான். அக அழகை , நல்ல குணத்தை , உயர்ந்த இலட்சியத்தை பார்த்து வந்த காதலை நான் இதுவரை நடைமுறையில் பார்த்ததில்லை.சுஜாதா சொன்னது போல காதல் ஹார்மோன்களின் வேலையாகவே பெரும்பாலும் உள்ளது.இதில் காவியமாவது , கத்தரிக்காயாவது?


சென்னையில் காதலிக்க குறைந்த பட்சம் ஒரு மோட்டார் சைக்கிளாவது வைத்திருக்க வேண்டுமென்று என்று சொல்லி , காதலிப்பதற்காக வாகனம் வாங்கியவர்கள் உண்டு.காதல் நோய் ( காதலை நோய் என்று சரியாக சொன்னார்கள் அந்த காலத்தில்) பிடித்தவர்கள் செய்யும் கூத்துக்கள் சொல்லி மாளாது. அதுவும் சுற்றியுள்ள நண்பர்கள் எல்லாம் காதலிக்க அதை பார்த்து மகிழ்வது மிகவும் சுவாரசியமாக இருக்கும்.காக்க வைப்பதிலும் , சுற்ற வைப்பதிலும், போட்டு பார்ப்பதிலுமே பாதி காலம் போய்விடும் இவர்களுக்கு.பக்தர்களை துன்பத்தில் ஆழ்த்தி , அவர்களின் உண்மையான பக்தியை சோதனை செய்து பின் ரட்ஷிக்க சிவபெருமான் போன்று இவர்கள் செய்யும் திருவிளையாடல்கள் எண்ணற்றவை.

காதலை நான் எதிர்க்கா விட்டாலும் , காதலிக்கும் போது தேவையில்லாமல் படு(த்து)ம் பாடு, காதல் தோல்வியடைந்தால் காட்டும் அளவு கடந்த வருத்தம் ஆகியவற்றை நம்ப முடியாமல் எதிர்க்கிறேன். பாய்ஸ் படத்தில் வரும் காட்சிகள் சிலவற்றை நேரில் பார்த்திருக்கிறேன். சீச்சீ நீங்க நினைக்கிற காட்சியெல்லாம் இல்லை. அந்த காட்சிகள் படத்தில் வரும் போதெல்லாம் , காசை கீழே போட்டுக் கொண்டு நானே குனிந்து தேடிக் கொண்டிருந்தேன். நான் சொல்வதெல்லாம் , காதலி எழுதிய கையை கழுவாமல் பல நாட்கள் பாதுகாத்தல் போன்ற காதல் மகத்துவ காட்சிகளை...


சாதி , மதம் , வரதட்சிணை போன்றவற்றை அழிக்க வல்லது என்ற முறையில் ( இப்பொழுதெல்லாம் வசதியாக சாதி/பிரிவு/வசதி பார்த்த பின் தான் காதலிக்கவே ஆரம்பிக்கிறார்கள்), காதலை ஆதரிக்கலாம்.இளவயதில் திருமணத்திற்கு முன்பு மற்றொரு பாலரின் அருகாமையும் , அன்பும் ,அக்கறையும் ரொம்பவும் ரம்மியமாகத் தான் இருக்கும்."மடி மீது தலை வைத்து" என்று மெரீனா பீச்சிலோ, லால் பாக்/கப்பன் பாக்கிலோ காலம் போவது தெரியாமல் சீண்டிக் கொண்டும் , சிணுங்கிக் கொண்டும் அமர்ந்திருப்பது மறக்க முடியாத அனுபவமாக இருக்கலாம்.ஆனால் அதற்காக , தெய்வீகக் காதல் , காதலிப்பவர் கிடைக்காவிட்டால் வாழ்க்கை அஸ்தமித்து விட்டது போன்ற மூடத்தனமாக காதலை கருதி வாழ்க்கையை தொலைத்து விட்ட தேவதாஸ்கள் , அவர்களின் காதலின் தகுதியை எண்ணிப் பார்க்க வேண்டும்.இன்றைய காதல் திருமணத்திற்கு உரியவரை தேர்ந்தெடுக்கும் ஒரு வழிமுறையாகவே உள்ளது. மெல்ல இனி உண்மையான காதல் சாகும் என நினைக்கிறேன். டேடிங்கிற்கும் , வரும் தலைமுறையின் காதலுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருக்கப் போவதில்லை.


காதலை , இயல்பாக நட்பு போல , பாசம் போல மற்றுமொரு அன்பின் சாதாரண வகையாக எடுத்துக் கொள்ள தெரியாதவர்கள் , காதல் தவம் கிடந்து உள்ளத்தையும் உடலையும் வருத்தி கோணங்கித் தனங்கள் காட்டாமல் , மனைவியை/கணவனை காதலிக்கும் வகையில் சேர்ந்து விடுவது சாலச் சிறந்தது.


Posted by Editor at 12:04 AM | Comments (11) | TrackBack





July 27, 2004
செவ்வாய்கிழமை கொழுக்கட்டை
செவ்வாய்கிழமை என்றதும் எனக்கு ஞாபகம் வருவது கொழுக்கட்டை தான்.

ஆடி மாதங்களில் (என்று நினைக்கிறேன்) , எங்களூரில் பெண்டு பிள்ளைகளெல்லாம் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு வீட்டில் ஆண்களையும், ஆண் குழந்தைகளையும் சேர்த்து கொள்ளாமல் ஒதுக்கி வைத்து விட்டு கொழுக்கட்டை செய்து ரகசியமாக சாமி கும்பிடுவார்கள்.
பூஜைக்கு பின்னர் , மறு நாள் அந்த கொழுக்கட்டையை சாப்பிடும் போது கூட ஆண்கள் கண்ணில் அந்த கொழுக்கட்டை பட்டு விடக் கூடாதாம். பள்ளி செல்லும் பருவத்தில் , இது ஆண் (குழந்தை) சமூகத்திற்கு இழைக்கப் பட்ட அநீதி என்று , சம உரிமை கேட்டு அம்மாவிடம் போராடியிருக்கிறேன். மாடிப்படி, கொல்லைப் புறம் என்று ஒளிந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அக்கா மற்றும் அவரது தோழிகளை நிம்மதியாக சாப்பிட விடாமல் துப்பறியும் சாம்பு போல விரட்டி எதற்காக அந்த பூஜை , ஏன் ஆண்களை தவிர்க்க வேண்டும் என்று கெஞ்சி,கொஞ்சி,ஆசை காட்டி, மிரட்டி என்று எல்லா வகைகளிலும் கேட்டு பார்த்திருக்கிறேன்.பார்த்தால் கண் கெட்டுவிடும் என்று பயமுறுத்த பதில்கள் தான் கிடைத்திருக்கின்றனவே தவிர உண்மையான காரணம் ஒருபோதும் அவர்கள் சொன்னதில்லை.

ஏதோ அவ்வையார் சம்பந்தப் பட்டது என்று அரசல் புரசலாக காதில் விழுந்தது தான் மிச்சம். என் தொல்லை தாங்காமல் , அம்மா எனக்கு புதன்கிழமை காலை தனியாக கொழுக்கட்டை செய்து தருவார்கள். பாவம் அவர்களுக்கு இரட்டை வேலை.நான் அதில் கார், கட்டிடம்,பாலம்,குடை என்று என் கைவண்ணத்தை காண்பித்து கொழுக்கட்டை பிடித்து கொடுப்பேன். அதை பழிக்குப் பழியாக மற்ற யார் கண்ணிலும் படாமல் ஒளித்து வைத்து நான் சாப்பிடுவதை , அம்மா கதை கதையாக மற்றவர்களிடம் சொல்வதுண்டு.

இந்த பழக்கம் , எங்கள் வட்டாரத்தில் மட்டும் தானா அல்லது பொதுவானதா என்று தெரியவில்லை.ஆனால் ரகசியமாய் இருப்பதனால் ஆண்களுக்கு கொஞ்சம் ஆர்வத்தை ஊண்டும் "செவ்வாய்கிழமை கொழுக்கட்டை" மேல் எனக்கு எப்பவும் கொஞ்சம் ஏக்கம் தான்.

-அநாமிகா மெய்யப்பன்


Posted by Editor at 01:09 AM | Comments (16) | TrackBack





வலை வலம் - 2
tamilblogs பட்டியலில் இருந்து , எந்த அடிப்படையிலும் இல்லாமல் தேர்ந்தெடுத்து படித்த சில வலைத் தளங்களைப் பற்றி...

அண்ணாகண்ணன் ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் இந்தியா எத்தனை பதக்கம் வாங்கும் என்று கருத்து கணிப்பு நடத்துகிறார். உயிருள்ள வரை உஷாவை மறக்க முடியாமல் செய்த ஒலிம்பிக்ஸை நினைவில் நிறுத்தி,அஞ்சு ஜார்ஜ்ஜை நம்பி , நான் ஒரு ஓட்டு போட்டுள்ளேன். உங்களின் கருத்தை அங்கு தெரிவியுங்களேன்.
வீர தீர சிறுவர்களைப் பற்றிய வரிசையில் கீதா சோப்ரா விருது வாங்கிய ராம்சீனா பற்றி எழுதியுள்ளார். படித்தவுடன் சம்பந்தமில்லாமல் கும்பகோண கொடூரம் ஞாபகத்திற்கு வந்தது.


வெட்டிப் பேச்சு பேசுவதாக நக்கல் பேசும் சந்தோஷ்குரு ஆயத எழுத்து/யுவாவை கிண்டி , அருமையான புகைப் படங்களுடன் வலைப் பதிந்திருக்கிறார்.சத்யம் திரையரங்கில் மாதம் 500 செலவு செய்வதை , நல்ல திரை விமர்ச்சனங்களாக வலைப்பதிந்து அசத்துகிறார்.மிர்ச்சி சுசித்ரா மூலம் , லல்லுவுக்கு இவர் சொல்ல முயன்ற யோசனைக்கு ஒரு மிர்ச்சி மண்குவளை லல்லு கைப்பட கொடுக்கலாம். இதைக் கேட்டதும், பரிசு வழங்க லல்லு எருது எக்ஸ்பிரஸில் கிளம்பிவிட்டதாக தகவல் வந்துள்ளது.

தும்பை பாலசுப்ரமணி நீரின்று அமையாது உலகு என்பதை உணர்த்தி ,தண்ணீரைப் பற்றி (நீங்க நினைக்கிற தண்ணீ இல்லீங்கோவ்...) விளக்கியுள்ளார்.இன்னும் நிறைய தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும்.


பிருந்தாவனத்தில் சின்ன கண்ணனை கொஞ்ச நாட்களாய் காணோம். திங்கள் கவிதை , தேவிகாவின் குறும்பு என்று நன்றாக வந்து கொண்டிருந்தது. முகம் முழுக்க குறும்பு,ஆப்பிளை நன்றாக அரைத்து அதனுடன் இட்லி மாவையும் கலந்து இட்லித் தட்டில் எடுத்துவைத்த பொசு பொசு இட்லி மாதிரி கன்னங்கள் என்று மதுரை மல்லி இட்லியாக விவரித்திருக்கிறார் தேவிகாவை பற்றி.மருதய் பாசத்தில நண்பர் ராசுவோட பின்னூட்டத்தையும் இந்த தளத்தில் பார்த்தேன்.

சந்தர வதனாவின் மாவீரர்கள் தமிழீழ மாவீரர்களைப் பற்றி குறிப்பு வழங்குகிறது. இத்தனை ஆயிரம் உயிர்களை குடித்த பின்னும் , நீண்டு கொண்டே செல்லும் இந்த போர் முடிவிற்கு வரும் நாள் , எந்நாளோ?. குட்டி மணி,கிட்டு, திலீபன் போன்று தமிழ்நாட்டிற்கு பரீட்சயமானவர்களை தவிர ,மற்ற மாவீரர்களை பற்றியும் தெரிந்து கொள்ள உதவுகிறது இந்த தளம்.

எழிலின் எழிலுலாவில் இதயம் பேசுகிறது மணியன் போல இனிய பயணக் கட்டுரைகள் தருகின்றார். பசு விழா சுவையான தகவல். வல்லவனுக்கு வண்ணமும் ஆயுதம் என்பதை விளக்குகிறது பசு விழா பற்றிய கதை.


-அநாமிகா மெய்யப்பன்

Posted by Editor at 01:00 AM | Comments (9) | TrackBack





பாரதியின் வசன கவிதை
பாரதியின் வசன கவிதைகள் அவ்வளவாக வெளியில் தெரியாத அவரின் மற்றொரு பரிமாணம்.
படித்ததில் எனக்கு பிடித்த சில வரிகள்.

உயிரே, நினது பெருமை யாருக்குத் தெரியும்?
நீ கண்கண்ட தெய்வம்.
எல்லா விதிகளும் நின்னால் அமைவன.
எல்லா விதிகளும் நின்னால் அழிவன.
உயிரே,
நீ காற்று. நீ தீ, நீ நிலம், நீ நீர், நீ வானம்.
தோன்றும் பொருள்களின் தோற்ற நெறி நீ.
மாறுவனவற்றை மாற்றுவிப்பது நீ.

-----

உணர்வே நீ வாழ்க.
நீ ஒன்று. நீ ஒளி.
நீ ஒன்று. நீ பல.
நீ நட்பு. நீ பகை.
உள்ளதும் , இல்லாததும் நீ.
அறிவதும், அறியாததும் நீ.
நன்றும்,தீதும் நீ.
நீ அமுதம் , நீ சுவை.
நீ நன்று, நீ இன்பம்.

-----

-அநாமிகா மெய்யப்பன்

Posted by Editor at 12:21 AM | Comments (2) | TrackBack





July 26, 2004
வலை வலம் - 1
லாடு லபக் தாஸ் பாலா- Young Sports பத்திரிக்கையின் நிறுவன ஆசிரியர். இவர் வலைப் பதிய ஆரம்பித்தது ரொம்ப நல்ல விஷயம்.

விகடன், டைம்ஸ், இந்தியா டுடே போன்ற பெரிய பத்திரிக்கைகளின் விலைக் குறைப்பு போரினால் , Young Sports என்ற அருமையான பத்திரிக்கை அழிந்து விட்டது வருந்த தக்கது. பெரிய பாளையத்து அம்மன் நன்கொடையுடன் போட்டி போட விரும்பாத இந்த நல்ல உள்ளத்திற்கு, தொடர்ந்து வலை பதிய அந்த அம்மன் அருள் புரியட்டும். பிர்லா கணக்கு போட்டிருக்கிறார், கொஞ்சமே கொஞ்சம் எனக்கு புரிந்தது போல் இருக்கிறது , இந்த புதிர் கணக்கு.

காணும் கண்ணாடி மூலம் பார்பதை பதியும் சஞ்சித் "என்ன எனக்கு தெரியாது என்பது எனக்கு தெரியாது என்கிறார்". தெரிந்தவர்கள் அவரை தொடர்பு கொள்க. மணல் கயிறு எஸ்.வி.சேகர் போல அவரது நண்பர் சில நிபந்தனைகள் வைத்துள்ளாரம். ஊரெல்லாம் விசுவைப் போல பல மடங்கு உண்மை விளம்பி தரகர்கள் இருப்பது அவருக்கு தெரியாது போலிருக்கிறது.

நவன் பகவதி என்னைப் போன்ற பச்சை பேய் பிடித்தவர்களுக்காக, அவரது தளத்தில் பச்சை பேய் ஆடை வசதி செய்து கொடுத்துள்ளார். விண்டோஸ் அப்டேட், வானிலை (இலண்டன் வாசிகளுக்கு) என்று பயனுள்ள தகவல்களை தந்திருக்கிறார். அடுத்து சிநேகா வால்பேப்பர் வைப்பது எப்படி என்று வருமென எதிர்பார்க்கிறேன். கொடிக்குள் ஒளிந்திருந்த கேடியை கண்டுபிடித்து தமிழ் மானம் காத்த வீரர் இவர்.

மது காண்பதுவே என்று "பூ பூக்கும் வாசம்" என்று மஞ்சள் பூக்கூட்டத்தின் படங்களைப் பதிந்துள்ளார். "வா வா மஞ்சள் மலரே" என்று பாடித் திரிந்த கல்லூரி காலம் சற்றே நினைவில் வந்து சென்றது. "போர்" படத்திற்கு தந்திருப்பது போல புகைப்படம் எங்கு , எப்பொழுது எடுக்கப் பட்டது போன்ற குறிப்புகளைக் எல்லா படங்களுக்கும் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

Posted by Editor at 02:41 AM | Comments (12) | TrackBack





வரவேற்பு கோலம்
வணக்கம் நண்பர்களே!!!

எதிர்பாரத இந்த வாய்ப்பு கொடுத்த மதி அவர்களுக்கு நன்றி. அடுத்த ஏழு நாட்கள் ஆதரவு தரப் போகும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
வலைப்பூவில் முதல் பதிவை கோலமிட்டு ஆரம்பிக்கிறேன்.

கோலம் தமிழ் காலச்சாரத்தின் முக்கிய வெளிப்பாடு.

அதிகாலையிலும், அந்தி சாயும் வேளையிலும் வாசல் பெருக்கி, சாணம் தெளித்து, புள்ளி வைத்து நெளி நெளியாய் சமச்சீராய் பளிச்சென்று போடப்படும் கோலம் வாசல் வழி செல்வோரை வரவேற்கும்.விழாக் காலங்களில் கோவிலில் கூட்டுறவாய் அனைவரும் சேர்ந்து போட்டிடும் கோலம் ஒற்றுமையின் வெளிப்பாடாய் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். பெண்கள் திருமணம் முடிந்து செல்லும் போது மறக்காமல் எடுத்துச் சென்ற சீதனம் கோல நோட்டாக இருக்கும்.பழைய வரவு செலவு புத்தகமோ, சென்ற வருட நாட்குறிப்போ புது கோல நோட்டாக மாறிவிடும். பக்கத்து வீட்டு பெண்களெல்லாம் , இரவல் வாங்கி சென்று ,புதுப் புது வகை கோலங்களை கண்டு பிடிப்பதில் குறியாக இருப்பர்.
சில சமயங்களில் ஆரம்பித்த கோலத்தை முடிக்க முடியாமல் , மற்ற பெண்களை அழைத்து , ஆன் த ஸ்பாட் டிஸைன் மாற்றி முடிப்பது சுவாரசியமாக இருக்கும். இதெல்லாம் , கிராமங்களிலும் , கிராம வாடை மாறாத சிறு நகரங்களிலும் தான்.பட்டிணங்களில் ???

மார்கழி மாதத்தில் வண்ண கோலப்பொடி தயாரிப்பது குழந்தை பருவத்தில் என் பொறுப்பு.வண்ணம் காய்ச்சி , வெள்ளை பொடியை வண்ண மாக்கி , காய வைத்து கொடுப்பதால் , கோலத்தில் வண்ணமிட எனக்கு முன்னுரிமை வழங்கப் படும்.பக்கத்து வீட்டு பெண் குழந்தைகளுக்கு நான்கு புள்ளி கோலம் ,ஒன்பது புள்ளி கோலம் என்று வரைந்து என் கோல அறிவை காண்பித்ததுண்டு. பின்னாலில் சென்னை வந்த போது , குழந்தையாய் நான் போட்ட நான்கு புள்ளி கோலமே வேண்டா வெறுப்பாக பெரும்பாலான வீடுகளின் வாசலில் இருந்தது , மாறி வரும் காலத்தையும், நேரமின்மையையும் காண்பித்தது.கோவில்களில் கூட இப்பொழுதெலாம் , பெயிண்ட்டிலேயே அழியாத கோலம் போட்டுவிடுகிறார்கள்.

கோலங்கள் இப்பொழுது மெல்ல மறைந்து வந்தாலும் , மீண்டும் அதன் அருமை புரிந்து மெல்ல வளரும் என்றே நம்புகிறேன்.

http://www.i-kolam.com/p-kolam.html இந்த தளத்திற்கு சென்று , கீழே இருக்கும் பொத்தானை அழுத்தி கணினி கோலமிடும் அழகை பாருங்கள் ,பிரம்மிப்பூட்டும்.

புள்ளி வைத்து , அதைச் சுற்றி நெளி நெளியாய் சென்று , ஆரம்ப இடத்திலேயே முடியும் கோலங்கள் , கூட்டுக் குடும்பத்தின் தத்துவத்தை விளக்குவதாக எனக்கு பட்டது. தனி மனிதர்களை அரவணைத்து , அவர்களின் உணர்வுகளை புண்படுத்தி விடாமல் , பாசத்தால் பின்னிப் பிணைந்து , ஒன்றாய் காட்டும் இந்த கோலங்கள் , இப்பொழுது ஆராய்ட்சியாளர்களை கவர்ந்துள்ளது. கோலங்களின் பின்னால் ஒளிந்துள்ள கணிதத்தை கண்டுபிடிப்பது,"சோனா ஜியாமெட்ரி".

கணினியில் பெயிண்ட்டில் நான் முதலில் வரைந்தது நான்கு புள்ளி கோலம் தான். என் மனைவியும் , முதலில் வரைய முயற்சித்தது ஒரு கோலம் தான்.பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள் , எஸ்.வி.சேகரின் வண்ண கோலங்கள் பிரபல்யமானவை. சன் டி.வியில் கோலங்கள் என்று ஒரு சீரியல் வந்தது ( இன்னும் வருகிறது என்று நினைக்கிறேன். சன் டி.வி எங்கள் வீட்டில் நிறுத்தி 5 மாதங்கள் ஆகி விட்டது :). இவையெல்லாம் கோலங்களின் மனோதத்துவத்தையும் , மகத்துவத்தையும் பறை சாற்றுகின்றன.

கொஞ்சம் கோலம் போட்டு பழகுங்கள். நான் வலைவலம் சென்று புதிதாய் பூத்த மலர்களை பார்த்து வருகிறேன்.

- அநாமிகா மெய்யப்பன்

Posted by Editor at 02:02 AM | Comments (10) | TrackBack





July 25, 2004
மழை நகரிலிருந்து அநாமிகா

இவ்வாரம் ஆசிரியராக வர இருப்பவருக்கு அழகான புனைபெயர். எனக்கு மிகவும் பிடித்த பெயர் கூட. 'அநாமிகா'.

இவருக்கு இங்கே நிறையத் தோழர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் ஒரே பட்டறையில் தீட்டப்பட்டு வெளி வந்தவர்கள். அந்தப் பட்டறைமேல் இவர்கள் எல்லோருக்கும் இருக்கும் பற்றுக் கொஞ்ச நஞ்சமல்ல.

உங்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன் என்ற போது இவர் சொன்னது:


பாரதி,பாரதிதாசன்,மேத்தா, வைரமுத்து,பாலகுமாரன் இவர்களெல்லாம் என் படிக்கும் ஆர்வத்தை தூண்டியவர்கள். கல்லூரி பத்திரிக்கையில் எழுதி கலக்கிய "காரைக்குடி கவிஞன்" ராஜ்குமார்,"மூக்கு" சுந்தர், "வந்திய தேவன்" ஞானம், "படக் களஞ்சியம்" பாலா போன்றவர்களால் எழுத தூண்டப்பட்டேன். (பூவோடு சேர்ந்த நார் போல).

கற்பனையில் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற்று, ஒலிம்பிக்ஸில் தங்க பதக்கம் வாங்கி, அறிவியலில் நோபல் பரிசு வாங்கி இன்ன பிற சாகஸங்கள் புரிந்து , இந்தியாவை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் கனவு வாழ்க்கை வாழும்,நிஜத்தில் வெந்ததை தின்று , விதி வந்தால் சாவோம் என்ற வெட்டி வாழ்க்கை வாழ்ந்தி விட்டோமோ என்ற வருத்தத்துடன், ஏதாவது சாதிக்க துடிக்கும் சராசரி மனிதன்.


இவ்வாரம் உங்களுடன் 'அநாமிகா' மெய்யப்பன்

Tuesday, January 20, 2009

புறப்படட்டும் புதிய கனவுகள்

இன்று
உன் கை உயர்ந்த போது
உயர்ந்தது உலகமே!


அன்று
பொக்கைவாய் தாத்தாவின்
புதிரான ஆயுதத்தின்
அற்புதம் அறிந்திட்ட
மக்கள் அரசன்
தொடங்கிய பயணம்
கண்டது இன்று
முதல் மைல்கல்!

உலகமய மாகட்டும்
முதலில்
இது போன்ற அற்புதங்கள்!

பூமியைச் சுற்றி வர
புறப்படட்டும் புதிய கனவுகள்!

Friday, November 21, 2008

கல்லடி பட்ட மரம்

யாரோ எறிந்த கல்
மரத்தின் குறி தவறி
என் தலையை
நோக்கி வந்து கொண்டிருக்கிறது...

செம்புலம் கலக்க
வர மறுத்த மழையின்
பரிட்சயம் மறந்த மரம்
செந்நீர் பட்டாவது
சிறிது சிலிர்க்கட்டும்
என் வீரமாய் நோக்கினேன்...

கனி நோக்கி கல்லெரிந்த
சிறுவன் சிதறியோட
தழும்புகளின் நினைவுகள்
ஓடும் சிறுவனும்
நானே என உணர்த்தியது...

காயத்தின் அடையாளம்
தழும்பென
நினைத்திருந்த என்னை
காலத்தின் தொடர் பயணம்
ஆற்றிய அனுபவ வித்தை என..

கல்லெரிந்த கைகளுக்கு
கனி கொடுக்கும் மரம்
சன்னமாய் அசைந்தே
கல்லுடன் சில பூக்களையும்
என் மேல் உதிர்த்து காண்பித்தது!

Saturday, November 01, 2008

கடவுள்

கல்லை
கடவுளாக்கி காட்டியது
சில மனித கைகள் தானெனினும்
என் வாழ்வில்
வெளிச்சமிட்டு காட்டியது
கண் தான ஒப்பமிட்ட
உன் கைகள் தான் !

வார்த்தைகளை
மந்திரமாக்கி
வாழ்த்து பாடியது
சில மனித குரல்கள் தானெனினும்
என் பார்வைக்கு
வாழ்த்து அழைத்தது
மரணத்திலும்
மறவாத
உன் வாக்கு தான் !!

Saturday, September 27, 2008

ஏமாற்றம்

ஏமாறுவதில் தான்
எத்தனை சௌகர்யம்!

அதிலும்
தன்னை தானே
ஏமாற்றிக் கொள்பவர்களை
விஞ்சியவர்கள் எவருமில்லை!!


மாற்றம் எனும்
அசுரன் மாயக் குரல்
கேட்டு காவியம் படைத்திட
விருப்பமில்லாமல்
இல்லாத இலக்குமண கோடுகளை
தானே வரைந்து கொள்வது
எளிது தானே!!!

நிஜங்களை
காண விரும்பாமல்
விழித்திரையை மூடி
தூங்குவதாய்
பிறரை ஏமாற்றிய பிம்பம்
தந்தாலும்
ஏமாற்றிக் கொண்டிருப்பது
தன்னையே என்பதை உணர்!!

மூடனாக்குவது
நீயே எனினும்
அதை முறித்திட
உன்
வசதி வட்டத்தை
விட்டு வெளியே வந்து
உன்னையே நீ வெல்!!!

Sunday, June 22, 2008

ஜீரோ வாட் பல்ப்

இருளுக்கும்
பொலிவு தந்திடும்
வெளிச்ச பூவாய்
வீட்டு வாசலில்
நித்தம் பூத்திடும்
வாடா மல்லியின்
வாசம் மறைந்தது இன்று...

ஏழு குதிரை பூட்டி
எட்டாத தூரம்
சென்றிட்ட தலைவன்
வருகைக்கு காத்திருக்கும்
விசுவாச வேலை
விடைபெற்றது இன்று...

அன்னிச்சை செயலாய்
அந்தி மாலைப் பொழுதில்
நித்தம் வணங்க வைத்த
வெளிச்ச அபிஷகம்
நிறையச் செய்தது
நினைவலைகளை...

இரவை பகலாக்கும்
வித்தை கற்ற
வெளிச்ச கர்வம் காட்டாத
கரிய யோகியின்
கடமையை வணங்கி
இருள் துக்கம்
அனுஷ்டிப்பேன்
சில நாட்கள்...

Saturday, June 07, 2008

முள்ளும் மலையும்

முள்காடு குத்திடுமென
தரை இறங்காமல்
முன் நகர்ந்த
முகிலனமே!

நான் மலராகாமல்
மோக முள்ளானது
உன்னால் தான் என அறிவாயா?

நீ
முச்சி உகர்ந்திடும்
உயர் மலையின்
பனி விரல் ஸ்பரிசம்
மறைத்திடும்
வெடித்து சிதறும்
அதன் எரிமலை இறுக்கம்
என அறியாயோ?

Saturday, March 22, 2008

இடற் கல்

காலில் இடறிய
கல்லை உதைத்தேன்
வேகமோ , கோபமோ..

எதிரே விழுந்து விளித்தது
மீண்டும் உதை பட

விடாமல் வீடு வரை
விரட்ட விளைந்தேன்
அதனால்
வழி நெளிந்தது!

வீண் வேலையென
விட்டு தொடர்ந்தேன்
எதையோ இழந்த
தவிப்பு தொடர்ந்தது!


கண்ணில் பட்டது
மற்றொரு கல்.
சற்றே விலகிய
தொலைவில்...

Sunday, February 24, 2008

கர்வம்

முதுகெலும்பை நிமிர்த்தி
நேர்கொண்ட பார்வை
தரும் எனில்
தவறில்லை சற்றே
கர்வம் கொள்வாய் நீ!
அது முதுகெலும்பை முறிக்கும்
சுமையாகும் முன்..

திறமையின் சிகரமாய்
அழகூட்டும் அணியாய்
இருக்கும் எனில்
தவறில்லை சற்றே
கர்வம் கொள்வாய் நீ!
அது கண் மறைக்கும்
கடிவாளமாகும் முன்...

இயலுமென எதையும்
தொடங்கும் தைரியம்
தரும் எனில்
தவறில்லை சற்றே
கர்வம் கொள்வாய் நீ!
அது தெரியும் என்ற
அறியாமையை அடையும் முன்..

பொருந்தாத சட்டையில்
பொதிந்திருக்கும் குழந்தை அல்ல
என உன் உருவம் நீ அறிய
கர்வத்தையும் கற்று மற
அது நம்பிக்கையின் திரிபு எனில்

புலித்தோல் போர்த்த விரும்பிய
பசுவாய்...

Saturday, January 05, 2008

நாள்காட்டி

அந்திம நாள் அறிந்தே
அவதரித்த நாள்காட்டியின்
கடைசி இதழ் கிழியும் நேரம்..

எழுதப்படாத டைரியும்
நிறைவேற்றப் படாத வாக்குறுதிகளும்
நிறைந்திருக்க
நித்தம் தேய்ந்த நாள்காட்டி
நினைவுபடுத்தியது நிதர்சணத்தை...

வரப் போகும் வருடத்தின்
வாழ்த்துக் குவியல்
வலி தந்தது
வாழ்க்கையில் தொலைத்து வந்ந
நட்புக் கூட்டத்தை

விரதமிருந்து விழித்திருக்க
விளையாடிய பரமபதம்
வாழ்க்கை என
விழித்திருக்க தொடங்கினேன்

வரும் வருடத்தை வரவேற்க
மட்டுமல்ல
நினைவு சுமைகளில் சேரப் போகும்
இந்த வருடத்தை
வழியனுப்பவும் தான்

கோளப் பாதையின்
கற்பனைப் புள்ளியை
கடக்கும் இந்த தருணம்
தரட்டும்
தவறுகளை சரிசெய்ய
மீண்டும் ஒர் வாய்ப்பை..

Thursday, November 29, 2007

காதலின் அகரம்

கடல் அலையில்
கால்நனைய சென்ற
மனைவி வருமுன்
அலைவந்து அழித்துவிடும்
என நம்பி
காலணிகளை காத்திருந்த
நான் எழுதினேன்
காதல் அகரம் தொடங்கிய
"அவள்" பெயரை...


அலைக்கு பயந்து
அதி வேகமாய்
ஓடி வந்த குழந்தை
படிக்க முயற்சித்தது
அழிய மறுத்த
புரியாத மொழியை..

Saturday, November 24, 2007

ஆயிரம் ஜன்னல்

தூக்கம் வராத
இரவு அது!
பழைய நினைவுகளை
அசைபோட ஆயாசம்!
எதிர்கால பேராசை
கனவுகளோ எதுக்களித்தன!
கற்பனையின்
துச்சாதன கைகள் களைத்திருக்க
தற்காலிக மரணம் போல்
மரத்துப் போனது மனம்
வேறு செய்வதறியாது!!!

இமைகளின் வேலை
நிறுத்த போராட்டத்தில்
சமாதானம் பேச விரும்பாமல்
தூக்க தொழிற்சாலையை
காலவரையற்று இழுத்து மூடி
வீம்பாய் எழுந்தேன்!

இருளையும் நிலவையும்
இணைத்து உருக்கிய
இரவின் சுகந்தம்
மூடிய ஜன்னலின் சல்லடையில்
சிக்காமல் வழிந்து உள் வந்தது!

எழுந்து அந்த
வெளிச்ச பெட்டகத்தை திறந்து
முகம் துளைத்து
உயிர்ப்பிக்க
இதழ் தேடினேன்

வீசிய காற்றில்
வேப்பங்கொழுந்து
ஒன்று முகத்தில் அடித்து
மனப்பேயை
விரட்டிச் சென்றது

முதிர்கன்னிகளின்
உருவக புகைப்படச் சட்டம்
அன்றோ அணிந்திருந்தது
புது ஓவியம்

அது
கீறிச்சிட்ட அணிலின்
வாலொன்று வரைந்து சென்ற
வான்வெளியின்
நட்சத்திர ஓவியம்

தூங்காத கண்களின்
கவலை போய்
இது வரை
காண்காத கண்களின்
கவலை வந்தது

தட்டினாலும் திறக்க
தயங்கும்
தாழ்ப்பாள் அணிந்த
வாயிற் கதவுகளில்
முட்டி மோதாமல்
இனி
எட்டாத உயரத்தில்
என்றென்றும் திறந்திருக்கும்
ஆயிரம் ஜன்னல் வழி காண
ஆயத்தமானேன்!!!

Sunday, November 04, 2007

சமீபத்தில் என்னைக் கவர்ந்த ( பாதித்த) சில வார்த்தை பிரயோகங்கள்

சமீபத்தில் என்னைக் கவர்ந்த ( பாதித்த) சில வார்த்தை பிரயோகங்கள்

சமூக வர்த்தகம் (Social Business)
ஜனநாயக தொழிலகம் (Industrial Democracy)
ஏழு நாள் வாரயிறுதி (Seven Dat Weekend)

"சமூக வர்த்தகம்" - இது கிராமின் வங்கி மூலம் சிறு கடன் திட்டத்தை தொடங்கிய முக்மத் யூனஸ் அவர்களின் மேடைப் பேச்சை கேட்ட போது, சட்டென கவர்ந்த கருத்து. இலாபத்தை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல், சமூக நலனை குறிக்கோளாக கொண்டு , அதே சமயம் நஷ்டமடையாமல் வெற்றிகரமாக நடத்தப் படும் வர்த்தகம் தான் சமூக வர்த்தகம் (Social Business). இது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என சந்தேகம் கொள்பவர்களுக்கு அவரின் பதில் , இலாபத்தை மட்டும் குறி வைத்து பணம் குவிக்கும் பலர் அதே பணத்தை தனி வாழ்க்கையில் வாரி வழங்கும் வள்ளல்களாக இருக்கும் போது, இது ஏன் சாத்தியமாகாது என்பது தான்.ஏழ்மையை அருங்காட்சியகத்திற்கு அனுப்ப கண்டிப்பாக சமூக வர்த்தகம் பயன்படும்.

பொதுவாக ஜனநாயகத்தை விரும்பும் மக்கள், வாழ்வில் பெரும்பகுதியை கழிக்கும் அலுவலகத்திலும் அதே ஜனநாயகம் இருக்குமானல் ,அலுவலில் அவர்களின் சந்தோஷமான முழு ஈடுபாடு இருக்கும்.அது தொழின் தொடர்ந்த வெற்றியை , அபரிமிதமான வளர்ச்சியை அளிக்கும் என்ற சித்தாந்தம் தான் ஜனநாயக தொழிலகம் (Industrial Democracy) . பின் வார நாட்கள் ஏழும் வார இறுதி போல் சந்தோஷம் தான். இதன் நல்ல கருத்துக்களை , நவீன தொழில்முறையோடு கலந்து பல வெற்றியடைந்த நிறுவனங்கள இன்றும் பின்பற்றி வருகின்றன.இந்த கருத்துக்களை வலியுருத்தி வரும் ரிக்கார்டோ செம்லரின் (Ricardo Semler) MIT உரையை இங்கு கேட்கலாம். சில சமயம் நரசிம்மராவ் போல இருப்பதும், மாற்றங்களை வேகமாக திணிக்க தவிர்ப்பது நல்லது என்பது போன்ற நல்ல கருத்துக்கள் பல இவரின் இந்த MIT பேச்சில் நிறைந்திருக்கின்றன.கடந்து பத்து வருடங்களாக எந்த முடிவும் எடுக்காத இவரின் சேவையை பாரட்டி , சமீபத்தில் பாராட்டு விழா எடுக்கப் பட்டதாம். ( எல்லா பிரச்சனைகளுக்கும் முடிவுகள் கீழ்மட்டத்திலேயே கிடைப்பது நல்ல விஷயம் தானே?)

Friday, October 12, 2007

முடிவும் தொடக்கமும்

முடிவு அறிந்த கனவின் கம்பீரம்
http://wms.andrew.cmu.edu/001/pausch.wmv
http://online.wsj.com/public/article_print/SB119024238402033039.html

கனவு தொடங்கும் கலை
http://blog.guykawasaki.com/2006/06/the_art_of_the_.html

Saturday, September 29, 2007

பால பாடம்

எழுதாத சிலேட்டை
எடுத்து வந்தேன்னு
கோவத்தில் குட்ட வந்த
வாத்தியாரு
முன் ஜாக்கிரதயாய்
மோதிரத்தை கழட்டிக்கிட்டு கத்தினாரு
"பழைய சிலேட்டுனாலும்
பாழும் அடுப்புக்கரி பூசியிருக்கலாம்" என்று

பாவம் தெரியவில்லை
அவருக்கு
மதியம் வரை காத்திருக்க
கடித்து தின்ன சிலேட்டுக் குச்சி
வயிற்றுக்குள் எழுதிய பாடம் !

Thursday, September 06, 2007

வெள்ளை யானை

வீதி வழி வந்தது
வெள்ளை யானை!


வெல்லத்திற்கும் பழத்திற்கும்
வளைந்து குனியாமல்
அம்பாரி சுமப்பது போல்
அமைதியாய் அடி வைத்தது!


தர்மத்திற்கும் செழிப்பிற்கும்
அடையாளமான காலம் போய்
வீண்செலவாய் அறிந்திட
விருப்பமில்லாமல் விடை பெற்றது!


காவிய பாத்திரம்
என மட்டுமே அறிய போகும்
காலத்தை நோக்கி
மெல்ல அடி வைத்தது!


மதம் கொண்ட
பிளிரல் இல்லை அதனிடம்
மௌனத்துடன்
அபூர்வம் அருவமாகியது!


நிறங்களின் பேதம்
நிழல்களை தான் பிரிக்கவில்லை
என்ற நிஜம்
நிழல் வரா நேர பகலவனாய்
உச்சந் தலையில்
ஓங்கி அறைந்தது!

Monday, August 20, 2007

அசோக மரம்

ஞானம் பெற
போதி மரம்
தேவையில்லை
போதும் எனக்கு
அசோக மரம்!

சாலையெங்கும்
காத்திருக்கும்
அதுவே எனக்கு
அரச மரம்!!

Tuesday, July 31, 2007

கடற்கரை

வற்றிய கடல்
வரைந்த கோலங்கள்
கரையெங்கும் வரவேற்கும்!


கடல்வனம் காட்டும்
நீலவண்ணம்
வெண்ணிறமாய் கரை வந்து
கண்களை வருடும்!


உவர்ப்புக்குள்
உயிர்களை அடக்கி
உலாவரும் அலைகள்
உணர்வுகளுடன் ஒத்ததிரும்!


கரை சேர்ந்த சிப்பிகளின்
உடைந்த கூடும்
கைதேர்ந்த சிற்பியின்
செதுக்கலாய் கலை வண்ணம் சேர்க்கும்!

பால் வனமாய் வெண்மணல்
பூத்திடும் சந்தோஷப் பூக்கள்
பாலைவன சோலைகளாய்
பார்க்கும் இடமெங்கும்
பரவசம்!!!

Monday, May 14, 2007

மனக்காக்கை

கொல்லையில் கரையும் காக்கை
முற்றத்தில் சொல்லும் பல்லி
என பலன் பார்க்க கேட்டும் உனக்கு
என் குரல் மட்டும் கேட்க மறுப்பதேன்?


பழைய அனுபங்களின்
பிரதிபலிப்பு மட்டுமா நான்?
உண்மையில் உன்னில் இல்லையா?
இல்லை
உண்மையின் உளறல்களின் தொகுப்பா நான்?


மழைக்கால வானவில்லாய்
மௌனத்தில் மட்டும் தெரியாமல்
மனமே நான்
என ஒன்றாய் தெரிவது எப்பொழுது?

கானல் நீரின் ஆழம் அதிகமென
கருங்கற்களை போட்டுத் தவித்தது
தாகத்தில் மனக் காக்கை...

Wednesday, April 25, 2007

துணி துவைக்கும் கல்

கனவில் வந்தது
ஒரு துணி துவைக்கும் கல்
ஆற்றங்கரையோரம் அநாதரவாய்...

காதலையும் காமத்தையும்
காயங்களையும் காணாத பயங்களையும்
மட்டுமே வடித்து இதுவரை வந்திருந்த கனவுகளில்
இது மட்டும் என்ன புதுமையாய் ...

மஞ்சள் அரைத்து மணக்காமல்
மண்ணில் மிதிபடும் ஏக்கமா?
உழைக்கும் வர்க்கத்தின்
உடைகளை துவைக்கும் கர்வமா?

சலவைக்கு உதவுவது
'தான்' எனினும்
சலவைக்கல் என் பெயர் பெறுவது
பளபளக்கும் பளிங்கு என புழுக்கமா?

சலசலக்கும் ஆறும்
சுட்டெரிக்கும் சூரியனும்
துணை கொண்ட இடத்தில்
வந்த அமர்ந்தன் பயனேயன்றி
வேறொன்றுமில்லை என பயமா?..

கறைகளை ரகசியமாய்
காக்காமலும் கழிக்காமலும்
பொதுவில் அடித்து துவைக்க
ஒரு அறைகூவலா?

அடிபட்டாலும்
அடுத்தவருக்கு உதவ
ஒரு உந்துகோலா?

எதற்காக வந்தாய்
என் இனிய சலவைக்கல்லே?

Wednesday, March 14, 2007

வளையட்டும் வரையறை

கடல் அலை
கரை சேர்க்கும் தருணம்
கண நேரம் கவனம் தவறியதால்
கவிழ்ந்தது நண்டு..

நீரில் நீந்தவும்
நிலத்தில் ஊரவும்
அறிந்து என்ன பயன்
நிமிர்ந்து எழ முடியாமல்?

பற்றி எழ ஏதுமில்லை
எனினும் பரிதவிக்காமல்
காற்றையேனும் கைப்பற்றி
கவிழ்ந்த நிலை மாற
தொடர்ந்தது கடும் பிரயத்தனம் ...

வீசும் கால்கள் விசிறிய காற்று
தூக்கி நிறுத்த தூது போகாதா
துள்ளி வரும் அலைகளிடம் !

நீந்தியவை நிலத்தின்
வனம் கண்டு ஊர்ந்ததும்
ஊர்ந்தவை வானத்தின்
விரிவை கண்டு பறந்ததும்
பறந்தவை கடலின்
ஆழம் கண்டு நீந்தவும்
சாத்தியமானது
வரையறைகளை
வளைக்க முடிந்ததால் தானே !

Sunday, March 04, 2007

வின்செண்ட் வான் கோ

உடன் பயணம் செய்த ரஷ்ய நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க , வின்செண்ட் வான் கோ(Vincent van Gogh)வின் ஓவிய அருங்காட்சியத்திற்கு செல்ல நேரிட்டது. www.vangoghmuseum.nl.

ஓவியத்திற்கும் எனக்கும் ஏக தூரம். அதிலும் நவீன ஓவியம் என்றால் சொல்லவே வேண்டாம். என்றாலும் வழக்கம் போல் ஏதாவது ஒரு நகர சுற்றுலா ஊர்தியில் ஒரு நாளை செலவிட்டு ,சில புகைப்படங்களை எடுத்து அற்ப சந்தோஷம் அடையாமல் , ஏதாவது புதிதாய் முயன்று பார்ப்போம் என்று சென்றேன்.

19ஆம் நூற்றாண்டுகளின் இறுதியில் , நவீன ஓவியங்களிக்கு வித்திட்டவர் வான் கோ(வ்).அருங்காட்சியத்தில் வார நாளில் கூட ஏக கூட்டம் அவரின் படைப்புகளுக்கு இருந்த மதிப்பை உடன் புரிய வைத்தது.

ஓவியம் என்பது காட்சியை நகல் எடுக்கும் கலையாக மட்டும் இருந்த காலத்தில் , ஓவியரின் திறமை என்பது ஓவியத்தின் தத்ரூபத்தில் மட்டும் மதிப்பிடப்பட்ட காலத்தில் ஒவியரை ஒரு படைப்பாளியாக காட்ட வித்திட்ட முதல் முயற்சி இது.காட்சியின் நகலாக ஒரு பரிமாணத்தை மட்டும் ஓவியம் காட்டாமல் , காண்பவரின் கற்பனையில் ஆயிரம் கதைகள் சொல்லும் ஒரு படைப்பாக அதை மாற்ற , காட்சியின் வரைவை சிறிதே திரித்து , கருப் பொருளின் வீர்யத்தை உணர்வாக வெளிப்படுத்தும் அவரின் முயற்சிகள் ஓவியத்தை பற்றி சிறிதும் அறியாத என்னைப் போன்றோரை கூட பாதித்தது.

அறுவடை செய்யப்பட்ட வயல் வெளிகள், நகர காட்சிகள், சூரிய காந்தி பூக்கள், காட்டின் பசுமையில் ஊடுரும் ஒளிக்கதிர்கள், படுக்கை அறை, இரவு உணவருந்தும் காட்சி போன்றவை மிகச்சிறப்பாக இருந்தது.

சில படங்கள் விக்கிபீடியாவில் காண கிடைக்கிறது. http://en.wikipedia.org/wiki/Vincent_van_Gogh

அவரது சகோதரரின் ஆதவரவும் , நட்பும் அவர்களின் கடிதங்களும் கண் கலங்க செய்தது. இதன் பின் சில நாட்கள் , அலுவலகத்தில் மாட்டியிருந்த தற்கால நவீன ஓவியங்களை சற்றே முறைத்து பார்த்து , தலையை முட்டிக் கொண்டதுதான் மிச்சம்.

Saturday, February 17, 2007

ஒரு சங்கடமான உண்மை (An Inconvenient Truth)

சனிக்கிழமை கூட அலுவலகம் செல்ல வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்துடன் (பொய்) சாயங்காலம் வீடு திரும்பிய பின் கடைக்கு அழைத்துச் செல்லலாம் என்று அழைத்தால் யாரும் செவி சாய்ப்பதாக இல்லை.நூலகத்தில் இலவசமாக கிடைக்கக் கூடிய படத்தைக் கூட , பணம் செலுத்தி NetFlix-ல் பார்க்கும் என் சாமர்த்தியத்தை மெச்சிய என் மனைவியின் வஞ்சப் புகழ்ச்சி , செலவழித்த பணத்திற்கு வந்த படத்தையாவது பார்த்து விடலாம் என்று நினைவு படுத்தியது. அப்படி பார்த்த படம் தான் An Inconvenient Truth.

இணையத்தை கண்டுபிடித்ததாக பீற்றிக் கொண்டவர் அல் கோர் என்று பின்னிரவு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிம் கிண்டலடிக்கப் பட்டவர் என்ற வகையிலும், தேர்தல் நேரத்தில் தன் ஆளுமையை காண்பிக்க தன் மனைவியை மேடையில் ஆழ முத்தமிட்டவர் என்ற வகையில் தான் எனக்கு , அல் கோர் அறிமுகம்.

ஒரு இரண்டு மணி நேர படத்தை , ஒருவரை பேச வைத்து மட்டும் சுவாரஸ்யமாக எடுக்க முடியும் என்பது ஆச்சர்யமாக இருந்தது. சுஜாதாவின் திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்தின் விதிகளுக்கு அடங்காத படம்.

ஒரு விவாதத்திற்கு உரிய கருத்தைப் பற்றிய ஒருவரின் மேடை பேச்சை, அவரின் சொந்த வாழ்க்கையை கொஞ்சம் இடை சொருகி, இது கட்சியின் பிரசார படமோ அல்லது ஒரு தனிநபரின் அரசியல் பயன் பாட்டிற்கு அப்பாற் பட்டது என்ற நம்பகத் தன்மையை நாசுக்காக நிலை நிறுத்தியது.அல் கோரின் பேச்சுத் திறமையும், கடினமான விஷயங்களை கூட எளிதாக விளக்கிய முறையும் , நகைச்சுவை கலந்த பேச்சும் அருமை.

சில சமயங்களில் , பூதாகரமாக உலகின் எல்லா நிகழ்விற்கும் முடிச்சு போட பார்ப்பது போல இருந்தாலும், இந்த விஞ்ஞானிகளுக்கு வேறு வேலை இல்லை , இன்றைக்கு ஒன்று சொல்லுவார்கள் , நாளைக்கு அதற்கு மாற்று கருத்து தான் சரி என்பார்கள். எல்லாம் இயற்கை பார்த்துக் கொள்ளும்என்று அலட்சியமாக விடக் கூடிய விஷயம் அல்ல. நாம் இயற்கையின் மீது காட்டும் அலட்சியமான வன்முறை மாற வேண்டும் என்பது மட்டும் உண்மை.

படத்தை என் மனைவி இரண்டு முறை பார்த்து விட்டாள். ஒரு நல்ல தலைவரின் தலைமையை அரசியல் இழந்து விட்டது என்ற கருத்து அவளது கணிப்பு. படத்தை பார்த்த என் பத்து வயது மகள் , அடப் பாவிகளா நீங்கள் நல்லா என்ஜாய் பண்ணி விட்டு , எங்களுக்கு பூமியை விட்டு வைப்பீர்களா இல்லை மாட்டீர்களா என்று ஒரு பார்வை பார்த்தாள்.

Thursday, February 15, 2007

மரணம்

உன் உயிரணை உடைந்ததால்
உருவானது இந்த கண்ணீர் நதி
உலராது உறைந்து விடும்
உன் புகழ் தாங்கி

ஓர் நாள்
உப்பளமாய் உய்வு பெறும்
உனக்கு நன்றி நவிலச் சொல்லி

வார நட்சத்திரமாய்
வந்தது போதுமென
துருவ நட்சத்திரமாய்
சுடரச் சென்றாய்

மீண்டும்
துடிக்காதா உன்இதயம் என
துடிக்கிறது பார்
ஓராயிரம் உள்ளம்

வார்த்தையால்
வடிக்க முடியாத
வருத்தத்திற்கு
காரணப் பெயர் தான்
இந்த மரணமோ

நீ தந்த
இந்த அபாய அறிவிப்பொலி
நினைவுபடுத்துகிறது
வாழ்வாங்கு வாழச் சொல்லி

ஐம்புலன் அடங்கினாலும்
ஐம்பூதத்திலும் கலந்து
ஆட்கொள் இனி
நல்வழி நடக்க

Monday, December 18, 2006

காணாமல் போகும் தந்திரம்

காணவில்லை
ஆறாம் வகுப்பு பூதலிங்கத்தை
கலங்கியது நண்பர் கூட்டம்..

வறுமையால்
அத்தை வீட்டில்
படித்து வந்தவனை
பிச்சை எடுக்க
கடத்தியவன் எவனோ?

காணாமல் போகும் பயம்
காணத் தொடங்கியது அனைவரிடமும்

பிள்ளை பிடிப்பவன்
பூசிய விபூதி
வியர்வையில் வசியம் அழிய
தப்பிய பூதலிங்கம்
தாய் தந்தையோடு
இப்பொழுது என
கசிய தொடங்கியது சேதி..

பள்ளி நேரத்தில் கூட
பாத்திரம் விளக்கியவன்
பயத்தையும் விலக்கினான் !
சமூகத்தையும் விளக்கினான் !!
விபூதியில் அல்ல விஷயம் !!!

Tuesday, November 28, 2006

பனி

பூ வரம்
கேட்டதோ
இந்த புல்லினம்
புதிதாய் பூத்துவிட்டதே
இந்த வெண் மல்லி !

வெள்ளை சட்டை
கேட்டதோ
வெற்றுடம்பில் வாடிடும் சாலை
விரிந்து ஆடையானதே
இந்த வெண்பருத்தி!

சருக்கு மரம்
கேட்டதோ
சிறு குழந்தைகள்
வீதிக்கு வந்ததே
இந்த வெள்ளிப் பனி மலை


பரிதியை
வென்றதே
பனி இன்று
பாரியானதாலா
ஈகையில்...

  Posted by Picasa

Thursday, November 16, 2006

முயுனிக் - ஜெர்மனி
















நிப்ஹென்புர்க் அரண்மனை

Nymphenburg Palace

நிப்ஹென்புர்க் அரண்மனை

Marble Table and paintings inside Nymphenburg Palace

நிப்ஹென்புர்க் அரண்மனை

Inside Nymphenburg Palace

BMW பொருட்காட்சி நிலையம்

BMW Museum

ஒலிம்பிக் அரங்கு

Munich Olympic Stadium

புதிய நகர மண்டபம்

Neues Rathaus

Friday, November 10, 2006

ஆகாயம்

ஆகாய ஜன்னல்
காட்டிடும்
ஆயிரம் ஒளிச் சிதறல்கள்

நித்தம் நிறம் மாறும்
அரங்கத் திரையில்
விரிந்து மறையும்
நட்சத்திர நாடகம்

விழித்திரையை அடைய
எடுத்திடும்
ஒளிவருடம் பல

ரசிக்கத் தொடங்கிய
மனம் அதன்
ரகசியம் அறிய
துடித்திட

வியந்தது போதும் என்
விண்ணில் சற்றே
மிதந்து வருகிறேன்
புவியாளே உன்
அன்பு பிடியை சற்றே
தளர்த்தேன்!

வாண வில்லை
வளைத்து அம்பெய்தி
உன்னை கண்சிமிட்டி
ஏளனம் செய்யும் அந்த
நட்சத்திர கூட்டத்தய்
வென்று வருகிறேன்

கடமை தவறிய
கார்மேகங்களை
கண்டித்து வருகிறேன்

அழிவில் தொடங்கியு
உன் ஆரம்பத்தின்
அதிசயத்தை
அறிந்து வருகிறேன்

Sunday, October 22, 2006

தீபாவளி

அமுதா மற்றும் அவரது தோழியர்கள் ஒரு மாத காலமாக திட்டமிட்டு தீபாவளி கொண்டாட்டத்தை நேற்று இனிதே எங்கள் இல்லத்தில் நடத்தினர்.
அப்பொழுது எடுக்கப்பட்ட நிகழ்படத் துண்டுகள் இங்கே. நடந்த அனைத்துப் போட்டிகளிலும் , பெருவாரியான மதிப்பெண்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது , எங்கள் அணியே என்பது இரண்டாவது நிகழ்படத்தின் இரைச்சலில் இருந்து தெளிவாக தெரியும்.



Monday, July 31, 2006

ஓடை

மலையைக் குடைந்த
ஓடை
மௌனமாகும்
மண்ணின் மடியில்

கருங்குகை
கரைந்தெடுத்த
கனிமங்கள்
கரை சேர்க்கும்

நிலவியலை
நிதம் செதுக்கும்
பசுமையைப்
பண்படுத்தும்

எனினும்
நொடி நேரம்
சுவம் கொளாது
பிரிந்து செல்லும்


விதிகளுக்கு அடங்காத
வீர்யம் பிறழாது
மீண்டும்
விண் நோக்கும்

Thursday, July 20, 2006

காய்ந்த மரம்


தளும்பும் குளம்
தரை சேர்த்த மரம்
இருந்த இடம்
முகில் முகரும்
உயரம் எனினும்
மிதந்தது போதும் என
கரையில் காய்வது
கால்களுக்கு ஒய்வு தரவா?
இல்லை! எண்ணத்திற்கு ...?

Sunday, July 02, 2006

டென்மார்க் - சில புகைப்படங்கள்

டென்மார்க் - சில புகைப்படங்கள்













கடற்கன்னி



காவலர் மாற்ற அணிவகுப்பு



குளிர்கால அரண்மணை



மாலுமிகளின் பழைய உல்லாசபுரி



கன்னி முரசு



கிரிஸ்டியன்போர்க் அரண்மனை


Sunday, May 28, 2006

இரண்டு கால் பூச்சி

கடந்து வந்த பாதையின்
காலடி தடங்கள் கலைந்தது

விடிதலும் சாயலும்
விளக்கொளியில்
விரிந்து மறைந்தது

தேன் சிந்திய வானம்
திராவகமாய் எரிந்தது

கோழியின் கூவல்
வாகன இரைச்சலில் குறைந்தது

ஒப்பாரியும் ஓங்கார சிரிப்பும்
நாசூக்கில் நசுங்கியது

ஆட்டமும் பாட்டும்
தொலைக்காட்சி முன் அடங்கியது

பம்புசெட்டு குளியல்
பக்கெட்டில் படிந்தது

பாத்தி கட்டிய தோட்டம்
வரவேற்பறை காகித பூவானது

பூசி மெழுகிய ஒப்பனை
இழிக்கத் தொடங்கியதும்
இனம் புரியாத சோகம்
இதயம் முழுதும் வியாபித்தது

வழியக் காத்திருக்கும்
கண்ணீர் துளிகள் கனத்தது

மாறியது தெரிந்தே என்றாலும்
மருகுவது மட்டும் ஏன்?
வெருமையில் அசைபோடவா!


பட்டாம் பூச்சியானதா
இந்த இரண்டு கால் பூச்சி
இல்லை பச்சோந்தியானதா?

Thursday, May 25, 2006

இரும்புக்கை மாயாவி

காமிக்ஸ் படிக்கும் போது மாயாவி எல்லாருக்கும் பிடிக்கும் தானே!!!
மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாமல் இருப்பதில் எவ்வளவு வசதிகள் உள்ளன.
கண்ணிற்கு தெரியாமல் இருக்கும் போது தான் நம் உண்மை உருவம் தெரியும்.
அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கு தயார் செய்வது போல் லண்டனில் இந்த முயற்சி நிஜமாகவே நடக்கிறதாக இந்த செய்தி தெரிவிக்கிறது.

http://www.newscientisttech.com/article.ns?id=dn9227

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4968338.stm

Monday, May 22, 2006

யூரோவிஷன் பாட்டு போட்டி

யூரோவிஷன் ( Eurovision) பாட்டு போட்டியின் இறுதிப் போட்டியை தொலைக்காட்சியில் பார்க்க நேரிட்டது.பின்லேண்ட் மான்ஸ்டர்ஸ் வெற்றி பெற்றனர்.கெட்ட வேஷம் போட்டால் எல்லாருக்கும் பிடித்துப் போகிறது. ரஷ்யாவின் டிமா மிகவும் உற்சாகத்துடன் பாடியதாக எனக்கு பிடித்திருந்தது.அந்த குழு பாடும் போது அரங்கம் முழுதும் அந்த உற்சாகம் பரவியிருந்தது. யுக்ரைனின் டினாவின் புன்னகை கசிந்த முகபாவனையும்,ஆட்டமும் நன்றாக இருந்தது.

நாடுகள் வாரியாக ஓட்டெடுப்பு முடிவு அறிவிக்கப் பட்ட போது , அண்டை நாடுகளின் மீதான பாசம் பாடல்களின் தரத்தை விட ஓட்டெடுப்பில் வெளிப்பட்டதாக தோன்றியது. ஐரோப்பாவின் அமைப்பு எளிதாக புரிந்தால் போலிருந்தது.

Sunday, May 21, 2006

கியவ்

லக்ஷ்மி மிட்டல் தவிர இந்திய பாஸ்போர்ட்டுடன் யுக்ரைனில் திரிந்த ஒரே ஆள் நான் தான் போலும். விமானம் ஏறியதிலிருந்து திரும்பி வரும் வரை வேறு இந்திய வம்சாவளியினரை காண முடியவில்லை( ஹிமாலயா காபி பார் தவிர). சந்தித்த யுக்ரைனியர்கள் எல்லாம் மிட்டல் ஸ்டீலைப் பற்றி என்னிடம் விவரிக்கவும் தவறவில்லை.

கிய்வ் யுக்ரைனின் மிக அழகிய தலைநகரம். 1600 வருட பழமையும், நவீன தொழிற்சாலைகளின் கலவையும் கொண்ட பசுமையான நகரம்.பல பழமையான கிறித்துவ தேவாலயங்கள் தங்க கோபுரத்துடன் ,கருணை ததும்பும் அற்புதமான ஓவியங்களுடன் வரலாற்றை விவரிக்கின்றன.

வெல்டிங் தொழில்நுட்பத்தில் கிய்வ்வின் பங்கை பறைசாற்றும் வகையில் , பல பாலங்கள் ரிவட் பயன்படுத்தப் படாமல் , வெல்டிங்கிலேயே இணைக்கப் பட்டிருக்கிறது.

சாலை , போக்குவரத்து வசதிகள் இந்தியாவை விட சிறப்பாக இருந்தாலும் , கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பல வகைகளில் இந்தியாவை ஒத்தே இருக்கின்றன. ஐரோப்பிய யூனியனில் சேரும் நாளை கனவுகளுடன் இங்கு மக்கள் காத்துக் கொண்டிருப்பது தெரிகிறது. ஆனால் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.

இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் அடித்தள , கிராமப் புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் படி செய்தால், நாமும் ஆசிய யூனியன் ஆரம்பிக்கலாம்.


இந்தியாவில் வரலாற்று நாயகனாக , மக்களின் பாதுகாவலனாக ஒப்பற்ற தலைவராக அறியப் பெற்ற ரஷ்ய தலைவர் ஸ்டாலினின் ,மறுபக்கத்தை யுக்ரைனின் ஒவ்வொரு அணுவும் கவலையுடன் காட்டுகின்றது.






 

 

 

  

 

 

 

  
Posted by Picasa

Monday, May 15, 2006

யுக்ரைனின் சிராங்கூன் சாலை

யுக்ரைனில் கிய்வ் நகரில் கோடை காலத்தில் வார இறுதியில் அனைவரும் Independence Square சாலையில் கூடி விடுவார்கள். சிங்கப்பூரில் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் சிராங்கூன் சாலையில் சந்திப்பது போல, எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் தான் . வயதான பாட்டிகள் , கடலை மற்றும் பூ விற்றுக் கொண்டும் , காலி பீர் பாட்டில்கள் பொருக்கிக் கொண்டும், இளவட்டங்கள் அனைவரும் பீர் பாட்டிலோடும் ,குழந்தைகள் சர்கஸ் பார்த்துக் கொண்டும் என்று அனைவரும் இந்த சாலையில் தான்.
இங்கு தான் ஆரஞ்சு புரட்சி நடந்ததாம்.

Posted by Picasa

Posted by Picasa

Thursday, May 04, 2006

இது என்ன?


இது என்ன?Posted by Picasa

இங்கே என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று தெரிகிறதா?
தெரியுது,ஆனால் புரியவில்லை என்று கடிக்க வேண்டாம்.ஐராவதம் மகாதேவன் அவர்களை தேடி போகவும் வேண்டாம்.

Sunday, April 16, 2006

தமிழ் புத்தாண்டு

வட மொழி தாங்கி வரும் 60 வருட சுழற்சி தமிழ் பஞ்சாங்க முறை மற்றும் இன்றைய கால கட்டத்தில் கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டு தினம் , உண்மையிலேயே தமிழரின் புத்தாண்டு இல்லை என்று எப்பொழுதோ படித்த திராவிட கழக பத்திரிக்கை கட்டுரை ஒவ்வொரு முறையும் ஞாபகம் வந்து விடும். ஆனால் இந்தியா முழுவதும் பல வடிவங்களில் இந்த பண்டிகை கொண்டாடப்படுவது பற்றிய மின்னஞ்சலை படித்த பொழுது , தமிழ் புத்தாண்டாய் பண்டைய காலத்தில் கொண்டாடப் படாவிட்டாலும், வேறு ஏதோ ஒரு வகையில் திருநாளாய் இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. அதனால் இந்த வருடம் விடுப்பு எடுத்து சிறப்பாக தூக்கம் போட்டு தமிழ் புத்தாண்டை கொண்டாடினேன்.

அஸ்ஸாமில் ரங்கோலி உத்சவ்
பிகாரில் வைஷாஹா
கேரளாவில் விஷு
பஞ்சாபில் பைசாஹி
மேற்கு வங்காளத்தில் நப பர்ஷோ
ஆந்திரா, கர்நாடகாவில் யுகாதி
மஹாரஷ்டிரத்தில் குடிபட்வா
ஒரிஸ்ஸாவில் மஹாவிசுப்ஹ சங்கராந்தி

Monday, April 03, 2006

தானிய கிடங்கு தந்த பாடம்

டக் பர்கம்(Doug Burgum)மின் கன்வர்ஜென்ஸ் நிகழ்ச்சியின் பேச்சு என்னை மிகவும் நெகிழ்வடையச் செய்தது. அவர் தனது தந்தை மற்றும் மூதாதையரின் தானிய கிடங்கு (Grain elevator) வணிகத்திலிருந்து கற்றுக் கொண்ட தொழில் ரகசியத்தை இந்த பேச்சில் குறிப்பிட்ட விதம் மற்றும் இடம் ( listen to the talk starting from 38 minutes till 50 minutes at least , if you can't listen to the whole talk) , மிக அருமை. பரஸ்பர நம்பிக்கை மற்றும் நேர்மை தான் தொழிலின் வெற்றியின் அடித்தளம் என்று தனது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை மேற்கோளிட்டு உணர்ச்சிபூர்வமாகா பேசி , பின் உணர்ச்சி பிரவாகத்தை கட்டுப் படுத்தி கருத்தை வலியுருத்தி பேச்சை முடித்தது அருமையாக இருந்தது.

Some excerpts here.For full Speech Transcript http://www.microsoft.com/presspass/exec/burgum/03-28convergence2006.mspx


So, my great-grandfather got involved in starting the grain elevator. The grain elevator business that buys the crops from farmers, that aggregates those crops, and then works on arranging transportation, and sending them off to some other market. You know, pretty basic little add value, being in the middle type things, very, very super low margins in the grain elevator business. At the grain elevator, this is where your neighbors come to bring their crops. This is where people's income depends on the price you pay for their crops.It was a relationship where I'm sure there could have been someone might have said, hey, they really don't have a choice, because it's too difficult for them, and too costly for them to haul their grain 15 or 20 miles away to another town. Certainly in the early days, when people were hauling grain by horse, and before there was even road infrastructure or trucks, this was the case.

And when people harvest their grain, it's not pristine. If there's weeds in the field, and this is back, again, if I'm that age, this is probably in the early '60s. The ability to have a super clean field isn't the way it is there today with all the advances in seed technology, and technology in farming, etcetera. You've got a truck that's got grain, and it's got stuff that's not grain, call it chaff. Separate the wheat from the chaff. And within that mix, when the grain is coming out into the pit, someone from the elevator comes out, because you're weighing the truck full of grain, and you're going to weigh the truck empty. The farmer, the customer, is going to get paid for what's in that truck. When the grain comes out, you have an opportunity to stand in the back with a little silver, almost like a gold panning type pan, and you get a chance to pull some grain out of this truck. And then you take that grain, and from that sample you go into a little small separating machine, and that becomes analogous, or a metaphor, or a measurement that says, this is what percent of that truck is grain, and this is what percent of that truck is chaff. And the chaff you don't get paid for, it's dockage. So, if you take a sample that's 5 percent chaff, the farmer gets paid 5 percent less. If you take a sample that's 1 percent, they get paid 1 percent less. Everybody understands there's going to be some dockage.

I'm standing there with my dad as a little kid, he's got the pan. You know what he's teaching me? He's teaching me how to take the cleanest possible sample.I didn't get that out very well. He taught me how to take the cleanest possible sample.That was about how to make sure, even if that truck had 5 percent chaff, you'd only come up with 2, and why was that? Part of that was, I think, this deep understanding about the trust relationship. The other part is, my dad, my uncle, my aunt, were smart business people. The understood that if they and part of being smart is thinking about the long-term, not the short-term. There was a phrase that I later, and it wasn't very articulate, but it sort of came to me after my dad passed way that what he was teaching me, because these farm, all your customers, get passed from one generation to the next generation, the next generation, and this relationship between us and the grain elevator, and the farmers that we support.


And so, if I was going to shorten this story up by about 15 minutes, I could just say something like, you screw grandpa, and his grandson will never bring you his grain 50 years later, because families (applause) because families remember that. Families pass on that kind of learning. Here is who you buy from,here is who you don't buy from, here is who you can trust. And so I think about that trust example, and how important trust is in terms of that relationship between those two between the customer and the partner, and it's such an important thing.

Wednesday, January 11, 2006

கலவை மனிதன்

ரே கர்டஸ்வெய்ல் (Ray Kurzweil) இயற்கைக்கு அப்பாற்பட்ட மனித வாழ்க்கை பற்றி எழுதியிருக்கிறார்.

மனித மூளை சிந்திப்பதை படமெடுக்க தொடங்கி விட்டார்களாம். ஒரு கன அங்குல நானோ ட்யூப் மின்சாதனம் 100 மில்லியன் மனித மூளைகளை விட சிறப்பாக செயல்பட தொடங்கி விடுமாம்.நானோபோடிக் வெள்ளை அணுக்கள் உயிரியல் வெள்ளை அணுக்களை விட வேகமாக செயல் பட தொடங்கி , அவற்றை மனித உடம்பிற்கும் கலந்து விடும் சாத்தியக் கூறு வரும் போது , மனிதன் பாதி கணினி பாதி கலந்து செய்த கலவை நான் என்று எல்லாரும் ஆளவந்தான் மாதிரி திரிய வேண்டியது தான்.

மனிதனுக்கு தான் சிரிக்க தெரியும் , பகுத்தறிவு உண்டு என்று கப்ஸா விட்டுக் கொண்டு காலம் தள்ள முடியாது. மனிதனின் பகுத்தறிவு பழுது பட்டது. பாங்குகளை அடையாளம் காணும் (pattern recognition) கலை மட்டும் தான் நம்மை இன்னும் வேறுபடுத்தி வைத்திருக்கிறது போலும்.

கலவை மனிதனால் கவிதை எழுத முடியுமா , நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வீண் வாதிட முடியுமா என்று தெரியவில்லை.

மேலும் படிக்க http://www.computerworld.com/hardwaretopics/hardware/story/0,10801,107494,00.html

Saturday, January 07, 2006

ஈரம் புரிந்த நேரம்

அறைந்து சென்ற காற்றின்
கரைந்து கிடந்த ஈரம்
பட்டுக் கன்னத்தில்
ஒட்டி நின்றது தெரியும் போது
புரிந்தது
கோபத்தின் அன்பு!

Thursday, January 05, 2006

கொ(கு)ட்டிக் கதை

ஒரு குளத்தைக் கடக்க வேண்டிய தேவை ஒரு தவளைக்கும் , ஒரு தேளிற்கும் வந்ததாம். தவளைக்கு , குளத்தில் இருக்கும் கொக்கு/நாரையைக் கண்டு பயம். தேளிற்கு நீந்த தெரியாது. அதனால் , தேள் தவளையிடம் நான் உன் முதுகில் ஏறிக் கொள்கிறேன். நீ என்னை மறு கரை சேர்த்து விடு. பதிலாக , கொக்குவிடம் இருந்து உன்னை நான் காப்பாற்றுகிறேன் என்றாதாம். தவளை தேளைப் பார்த்து , நீ என் முதுகில் இருக்கும் போது என்னை கொட்டி விட்டால் என்ன செய்வது , தரையில் இருந்தாலாவது நான் தப்பித்து செல்வேன் முதுகில் இருக்கும் போது என்ன செய்வது என்று தேளைப் பார்த்து அவநம்பிக்கையோடு கேட்டதாம். அதற்கு தேளானது , உன் முதுகில் இருக்கும் போது நான் உன்னைக் கொட்டினால் நீயும் நானும் நீரில் மூழ்கி சேர்ந்தே இறந்து போவோம். அப்படி இருக்கையில் நான் ஏன் உன்னை கொல்லப் போகிறேன் என்றாதாம்.அதன் கூற்றில் அர்த்தம் இருப்பதை உணர்ந்த தவளை , தேளை முதுகில் ஏற்றிக் கொண்டு குளத்தை கடக்க தொடங்கியதாம்.

இந்த கதையை கேட்டறிந்திராதவர்கள், இதன் முடிவு என்னவாகும் என்று ஊகிக்க முடிகிறாதா (கூகிளை நாடாமல்)?
முடிவு நாளை என்றோ அல்லது முழுப்பக்கத்தையும் வெற்றிடமாக தந்து அடியில் பதில் தந்து உங்களை சோதிக்க விரும்பவில்லை.

இதோ கதையின் தொடர்ச்சி.

பாதி குளத்தை கடந்த பொழுது , தேள் தவளையை கொட்டி விட்டதாம். தவளை விஷம் ஏறி தண்ணீரில் மூழ்க தொடங்கியதாம். அதனோடு சேர்ந்து , தேளும் தண்ணீரில் மூழ்கி இறக்க தொடங்கியதாம்.அப்பொழுது , தவளை முட்டாள் தேளே! உன்னால் நாம் இருவரும் மடிய போகிறோம். கரையில் இருந்த போது அறிவுப்பூர்வமாக பேசிய நீ ஏன் இப்படி முட்டாள் தனமாக நடந்து கொண்டாய் என்றதாம். அதற்கு தேள் , கொட்டுவது என் குணம் , அதை எதனாலும் மாற்ற முடியாது என்று கூறி மடிந்ததாம்.

Monday, January 02, 2006

தொலைந்(த்)த நட்பு

எல்லா திசைகளிலும் நுணுக்கி எழுதி
எச்சில் தொட்டு ஒட்டிய
கடிதம் தந்த
ஆத்ம ஸ்பரிசம்

இல்லாத காரணத்தாலா
இரு வரிகளுக்கு மேல்
எழுத தோன்றவில்லை
இ-மெயிலில்!


ஓசையில்லாமல்
ஒப்பாரி வைக்காமல்
இழந்து விட்ட
அற்புத மனித உறவுகளை
இனம் காண்பது எப்பொழுது?

மௌனித்த வார்த்தைகள்
உயிர்ப்பிக்குமா மறுபடியும்?

Thursday, December 29, 2005

சரியா ! தவறா ? - 2

சரியா தவறா - 2

முடிவு என்பது ஒரு தெரிவு. ஒரு வழியில் செல்ல முடிவெடுத்தவுடன், மற்ற வழிகளில் செல்வது இல்லை என்றாகிவிடும் போது, எல்லா வழிகளுக்கும் அதற்கென்ற தர்க்கம், உத்வேகம், நியாயங்கள் இருக்கையில்முடிவெடுக்கும் போது கருத்து மோதல்கள் வருவது இயல்பு.

ஆனால் முடிவு செய்வதை கருத்து மோதல்களை சமாளிப்பதாக மட்டும் எடுத்துக் கொண்டால் சரியான முடிவு அமையாது. ஒரு பிரச்சனையை ,தீர்வின் ஆரம்பமாக பார்க்கும் அளவிற்கு ,எண்ணங்களை விரிவடையச் செய்வதன் மூலமே , சரியான முடிவை அடைய முடியும்.

முடிவெடுப்பதிற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது மாற்றத்தைப் பற்றிய பயம் தான். எல்லா தெரிவுகளும் செயலுக்கு வழிகோலும். செயல் மாற்றத்தை உண்டு பண்ணும். விருப்பமில்லாத விஷயத்தில் முடிவெடுப்பதில் தடுமாறுவதை விட,திருமணம், வேலை மாறுதல் போன்ற நல்ல மாற்றங்களுக்கான முடிவெடுப்பது இன்னும் கடினமான ,அழுத்தமான செயல்.

தர்க்க அறிவும் (காரண காரணிகளும்) , மன உணர்வுகளும் , முடிவெடுப்பதில் சம ஈடுபாடு கொண்டவை. உணர்வுகளுக்கும் இடம் கொடாமல் ,வெறும் காரணங்களை மட்டும் ஆராய்ந்தால் எதிலும் நிலையான முடிவெடுக்க முடியாது. ஏனெனில் , உலகுன் பல விஷயங்கள் ஒன்றுக்கொன்று முரணானவை. உணர்வோடு ஒட்டிய பகுத்தறிவு தான் , நம்க்கு ஒத்த நல்ல பாதையை தேர்ந்தெடுக்க உதவம்.

செயல்படுத்தப் படாத எண்ணமும் , எண்ணாமல் எடுத்த செயலும் இல்லாமைதான்.கண நேரத்தில் எடுத்த பல முடிவுகள் சரியாக அமையும் போது , யோசித்து முடிவெடுப்பது தேவைதானா என்ற கேள்வியை எழுப்பும்.அதும் யோசிப்பது கடினமாகவும் , மன அழுத்தை தரும் போதும் , அது கொண்டு வரப் போகும் மாற்றத்தைப் பற்றிய பயத்தை பெரிதாக்கும் போதும் , எதற்காக யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று தோன்றும்.
யோசித்து முடிவெடுப்பது , நம்மை முடிவின் மாற்றத்திற்கு தயார் செய்யும். வெற்றியுன் வாய்ப்புகளை இது அதிகரிக்கச் செய்யும். எனினும் , சில சமயங்களிம் மன உண்ர்வுகள் உந்தி தள்ளும் கண வேர முடிவுளும் சரியாக இருக்கும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.

மகிழ்ச்சியைத் தேடி

ஒரு பூனை தன் வாலை கவ்வி பிடிக்க தொடர்ந்து முயற்சி செய்து சுற்றி சுற்றி வந்ததாம்.அதைப் பார்த்த நகைத்த மற்றொரு பூனையிடம் , பூனைகளின் மகிழ்ச்சி அதன் வாலில் தான் இருக்கிறது என்பது தெரிந்ததால் தான் , என் வாலை பிடிக்க சுற்றி வருகிறேன் என்றதாம். அதைக் கேட்ட இரண்டாவது பூனை, அது எனக்கும் தெரியும். நம் வாலைப் பிடிக்க நாமே முயன்று சுற்றி வந்தால் , வால் நம்மை விட்டு விலகியே செல்லும் என்பதும் எனக்கும் தெரியும். அதை விட்டு , நம் வேலையை பார்க்க போனால் , சந்தோஷம் இருக்கின்ற வால் விலகிச் செல்லாது , நம் பின்னே வரும் என்றதாம்.

மேலே குறிப்பிட்ட தகவல்கள் சேகரிக்க உதவிய தளம் http://www.gita-society.com/section2/dharmic-management.htm

Monday, December 19, 2005

இந்த ஆண்டின் சிறந்த நபர்(கள்)

டைம் - இந்த ஆண்டின் சிறந்த நபர்(கள்) விருது

போனோ,மெலிண்டா,பில் இவர்களுக்கு இந்த விருது கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது.பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள், பொது சேவைக்கு பெருமளவிற்கு பணம் செலவளிப்பதில் ஆச்சரியமில்லை என்றாலும், அவர்களின் ஈடுபாடும் , தன்னார்வமும், திட்டமிடலும்,தெளிந்த கூர்மையான நோக்குடன் தேர்ந்தெடுத்து செய்யும் காரணங்களும் , அதனால் ஏற்படும் விழிப்புணர்வும் , தாக்கமும் அளவிட முடியாதவை. தனி மனிதர்கள் , தொண்டு நிறுவங்கள் முதல் அரசாங்கங்கள் , உலக அமைப்புகள் வரை இதனால் கற்றுக் கொள்ள கூடியது நிறையது.

பில் கேட்ஸ்-ன் நிறுவனத்தைப் பற்றி மாற்று கருத்து கொண்டவர்கள் கூட மறுக்க இயலாத கருத்து. நேபெல் பரிசு கிடைத்திட வாழ்த்துக்கள்.பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை அடைய லட்சியம் கொண்டவர்கள் இதையும் இனி கவனித்திட வேண்டும்.


http://www.time.com/time/magazine/article/0,9171,1142278,00.html

Wednesday, December 14, 2005

சரியா ! தவறா ?

ஆய கலைகள் அறுபத்து நான்கில், முடிவெடுக்கும் ( முடி எடுக்கும் அல்ல) கலை தான் என்னை கவர்ந்தது போல. அது பற்றி என்ன கட்டுரை வந்தாலும் என்னை ஈர்த்து விடுகிறது.
"சரியான முடிவெடுப்பது கடினமல்ல. எடுத்த முடிவை சரியானதாக்குவது தான் கடினம்" (The problem is not to make the right decision; it's to make the decision right) என்ற மேற்கோளை சுட்டிக் காட்டிய பெரடரிக் ப்ரூக்ஸ் (Frederick Brooks)-ன் Fortune பேட்டியை படித்தவுடன் பிடித்து விட்டது.

http://www.fortune.com/fortune/print/0,15935,1135298,00.html

ஒரு முடிவின் இருபக்கம் 80/20 என்று கீழ்மட்டத்தில் மிகச்சரியான முடிவாக ஆரம்பிப்பது , ஒவ்வொரு நிர்வாக அடுக்கை தாண்டும் போது 70/30 , 60/40 என்று தேய்ந்து , கடைசியாக

உயர் அதிகாரிகளின் வசம் செல்லும் போது 49/51 என்ற அளவில் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்ற நிலையை அடைகிறது. எடுத்த முடிவில் உறுதியாக இருந்து செயல்படுத்துவதில் தான் வெற்றியே தவிர , இருபக்கமும் ஊசலாடுவதில் இல்லை என்று செல்கிறது.

பல விவாதங்களில் இரு பக்கங்களிலும் நியாயம் இருக்கிறது. சிக்கல்கள் ,நல்லதற்கும் கெட்டதற்கும் இடையில் வருவதல்ல. ஒரு நல்லதிற்கும் , மற்றொரு நல்லதிற்கும் இடையில் வருவது தான் என்று படித்தது , இந்த கட்டுரையை படித்த போது நினைவில் வந்தது.

Wednesday, November 30, 2005

மூணாம் கிளாஸ் கவிதை

நாம எழுதறது எப்பவுமே மூன்றாம் தர கவிதைதானே , இதில தலைப்பு என்னத்துக்கு மூணாம் கிளாஸ் கவிதை என்ற கேள்வி நியாயம் தான்.
இது நான் தத்துபித்துன்னு எழுதினது கிடையாது. மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகள் , பள்ளியில் நடந்த "Reflections" என்ற தலைப்பில் நடந்த கலைப் போட்டியில் பங்கு பெற்று

எழுதியது. போட்டியில் பங்கு பெற்றவர்களில் முக்காலே மூணு விசம் பேர் ஓவியம் வரைந்திருந்த போது , கவிதை எழுதின ஒரே ஒரு ஆளு , நம்ம வாரிசு தான்.

Earth , dear Earth
Hope you like
you're Birth !

I Wonder
what it feels like
Covered in Dirt !!

You look so beautiful
And different too!

I wonder
Almost everything about you !!

I bet everyone
loves you And
wonders about you too!!!

Reflections judge comments:
The use of rhyme in this work was quite successful. Earth/Birth and then the use of "dirt" on the following line of the

couplet show and ability to be flexible with rhyme and was excellent.

பரிசு - அப்பா மாதிரி தான் :) !!!

Tuesday, November 29, 2005

சிறந்த மதம்

வலைப்பதிவுகளில் அவ்வப் பொழுது சிலர் தங்கள் மதத்தின் சிறுமைகளையும் , அவற்றின் பாதிப்புகளையும் புரட்சியாளர்களாக பதிப்பதை படித்ததுண்டு.வேறு சிலரோ மற்ற மதத்தின் குறைகளை விலா வாரியாக தொடர்ந்து எழுதுவதை முழு நேர தொழிலாக கொண்டுள்ளதை கண்டு வி(ப)யந்ததுண்டு. ஒருவர் முப்பது ஆண்டுகள் வாழ்ந்த மதத்தை விட , மூன்று மணி நேரம் சென்ற ஒரு நாட்டின் கோவிலின் கதையை கேட்டறிந்து , அதுதான் சிறந்த மதம் என்று எழுதியதை பார்க்க நேர்ந்தது. அவர்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் தெரியாத காரணத்தால் , அவர்கள் அவ்வாறு எழுதுவது எதனால , எந்த பாதிப்புகளினால் என்று ஊகிக்க முயற்சி செய்ததுண்டு.

நான் சில வருடங்களுக்கு முன் வேலை பார்த்த பிரிவின் இயக்குநராக பணி புரிந்தவர் , சென்ற வருடம் அந்த வேலையை விட்டு விட்டு சால்ட் லேக் சிட்டி பக்கம் பல்கலையில் ஆராய்ச்சி மாணவராக/பயிற்சியாளராக சென்றார். அவரின் பதிவில் , ஊடகங்களில் மிகவும் விமர்ச்சிக்கப் படும் மோர்மொன் பற்றியும் , அதன் குறைகளை கூறி விலகுபவர்களிடம் அணுக வேண்டிய முறைகளைப் பற்றியும் ஆழமாக சிந்தித்து பதிந்துள்ளார். அதில் Slide 36 - "Things for them to consider" என்பது எந்த ஒரு மதத்திற்கும் , அமைப்பிற்கும் பொருந்தும். அதன் சாரம்சம் பிழையற்ற (அல்லது பெரும் குறைகள் இல்லாத) அமைப்பு என்று எதுவுமே இல்லை எனும் பொழுது , எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு தனி மரமாக இருப்பதை விட , தான் சார்ந்துள்ள அமைப்பை அதன் நிறைகளை , தனக்கு ஒத்த கருத்துக்களை மட்டுமே பின் பற்றி ,குறைகளை களைவதே சிறந்தது என்பதாகும்.மதவாதிகள் சொல்வதை மந்திரமாக கண்மூடித்தனமாக அது மட்டும் தான் உண்மை என்று நம்பாமல் , அவர்கள் தவறு செய்திருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு என்று புரிந்து கொள்வது அவசியம் என்ற கருத்தும் அருமை.

1) Is perfection, or even the lack of major flaws, the measure of affiliation/relationships?
1.a) Where is the perfect XYZ? Government? Business? Marriage? Family?
1.b) If "lack of major flaws" were the criteria, what relationship would survive?
2) Do we ever have an obligation to help make things better, vs. pack up and leave?
3)Forget "true".... consider "good"
4) What will bring you the most joy?
5) Look to the XYZ as a good place to SERVE
6) You CAN be a XYZ on your own terms - At the core, everyone is

மோர்மொன் அல்லது வேறு எந்த மதமானாலும் , அதன் பற்றிய குற்றசாட்டுகளை சரி என்றோ அல்லது தவறு என்று நியாப்படுத்தியோ அல்ல இந்த பதிவு.

Saturday, November 19, 2005

பீட்டர் ட்ரக்கர்

நாளைய நிர்வாக துறையில் தோன்றக் கூடிய போக்குகள் இன்றே தெரியும் மந்திரக் கண்ணாடி போலும் அவரது மூக்கு கண்ணாடி என்று குறிப்பிடும் படியான ஆளுமை படைத்தவர் பீட்டர் ட்ரக்கர் (Peter F. Drucker).

சில வருடங்களுக்கு முன் சிஎன்என்னில் அவரைப் பற்றிய விவரண படத்தை பார்த்த மாத்திரத்தில் , அவரது கட்டுரைகளையும் , புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன்.
காலங்களை கடந்த சிந்தனையோட்டம் அதில் தெளிவாக தெரியும்.நிர்வாக மேலாண்மை மட்டுமின்றி , சமூக , பொருளாதார மாற்றங்களையும் அலசும் தன்மை என்னை மிகவும் கவர்ந்தது. சேவை நிறுவனங்களை நிர்வாகிப்பது மற்றும் அவற்றின் தாக்கம் பற்றிய அவரின் கருத்துக்கள் , புதிய பார்வையை தந்தது.

வர்த்தக மேலாண்மை பட்டப் படிப்பு படித்திராத என்னைப் போன்றோர்க்கு , படிக்கத் தூண்டும் பயனுள்ள பல படைப்புகள் தந்தவர். மேலும் இன்று என்னைப் போன்றோருக்கு சோறு போடும் "Knowledge worker" என்ற பதத்தை தந்தவர். அண்மையில் தனது 95வது வயதில் நிறைவான வாழ்க்கையின் இறுதி அத்தியாயத்தை முற்றிலுமாக நிறைவடைந்தார்.

Monday, November 07, 2005

கடற் கன்னி

சாண்டில்யன் கதை மாதிரி தலைப்பை பார்த்தவுடன் , இதை மேலும் படிக்க கிளிக் செய்ய நினைப்பவர்கள் மன்னிக்க.இது சென்ற வாரம் , கடற்கன்னி கதைகளை படைத்த ஹான்ஸ் கிர்ஸ்டின் ஆண்டெர்சன் சொந்த நாட்டிற்கு நான் அலுவல் நிமித்தம் சென்ற பயணக் க(கு)ட்டுரை.


சென்ற வாரம் அலுவல் நிமித்தம் கோபன்கேஹன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் சென்று பார்த்தது அங்கு இருந்த கடற்கன்னி சிலையை தான்.அமெரிக்காவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ,இதை பார்க்க வரும் முன் , வழிகாட்டுபவரிடம் ,இதை ஏறிப் பார்க்க , மின் தூக்கி இருக்கின்றதா என்று விசாரித்துக் கொண்டே வருவார்களாம்.இந்த இடத்தைப் பார்த்தபின் , அசடு வழிவது சகஜம் என்று அலுவலகத்தில் ஒருவர் சொன்னார். கடற் கன்னி சிலை நம்மை விட சிறியதாக இருக்கும்:)

கோபன்கேஹன் டென்மார்க்கின் தலை நகரம். குழந்தைகளுக்கு லெகோ ப்ளாக் , வளர்ந்த குழந்தைகளுக்கு கார்ல்ஸ்பெர்க் , மற்றவர்களுக்கு குக்கி என்று ஏதாவது ஒரு வகையில் டென்மார்க் பரிச்சயமான நாடு தான்.

ஆனால் நான் அறியாதது , (கடற்கன்னியை தவிர) மிதிவண்டிகளின் தலை நகரம் இது என்பது தான்.எங்கு பார்த்தாலும் சைக்கிள்கள் தான். டென்மார்க்கின் மொத்த மக்கள் தொகை ( 6 மில்லியன்) கிட்டத்தட்ட சிங்கப்பூர் அளவு தான்.மக்கள் தொகை அளவிற்கு சைக்கிள்களின் தொகையும். அது தவிர தலைசிறந்த கட்டிட நிர்மாணிகள் , கலை ல்லுனர்கள் இங்கு அதிகம் போலும். கடந்த 1000 வருடங்களின் தலைசிறந்த பல கட்டிட கலைகளையும் ஒருங்கே காணலாம்.

மற்றொரு ஆச்சர்யம் பயணம் செய்த இரயிலில் ஒவ்வொரு முறையும் , பரிசோதகர் வந்து 100% டிக்கெட்டை பரிசோதித்தது தான். ( ஹிஹி. என்னை மட்டும் இல்லை. எல்லாரையும் தான்.)

Monday, October 24, 2005

எண்ணுவம்

நான் எதிலும்
முடிவெடுக்க
தயங்கியதில்லை!

சரியா தவறா
என்று
குழம்பி திரிந்ததில்லை!

பிரசவ வேதனை
என் பிறழ்ம்பி
திரிந்ததில்லை!

வாதங்களில்
காலங்களை
கடத்திய தில்லை!

என் குழப்பம்
எல்லாம்
முடிவெடுத்த பின் தான்
ஆரம்பம் :)

எனினும்
இழுக்கை விட
துணிவுக்கு
கவர்ச்சி அதிகம் தான்!

Saturday, October 01, 2005

பிரம்மன் நானே!!!

என்
சிறிய தவறுகளை கூட
நான்
பெரிதாக பிரகடனப்படுத்துவது
பெரும் குறைகள்
என்னிடம் இல்லை
என தெரிவிக்கத் தான்!

முட்டாள் தனமான
கேள்விகளை
நான்
பொதுவிடங்களில்
வெட்கப் படாமல் கேட்பது
கற்ற கர்வம்
என்னிடம் இல்லை
என் தெரிவிக்கத் தான்!!

முட்டித் தள்ளி
ஓடும் கூட்டத்தில்
நான்
காலில் உரசியதற்குக் கூட
கவனமாய் வருத்தம் தெரிவிப்பது
கண்ணியனாய் காட்டிடத் தான்!!!

உன்
உள்ளக் கண்ணாடியில்
ஓளிரும் உருவம்
நான் வடித்தது
என்பதனால்
இரவில் கூட
என் வீட்டுக் கண்ணாடியில்
பார்க்க விரும்புவதில்லை
அந்த பிரம்மன் படைத்த
உண்மை உருவத்தை

எனக்கு
நானே பிரம்மன்!!

Tuesday, August 30, 2005

கவர்ந்த காலை பேச்சு

காலையில் எப்பொழுதும் போல் இல்லாமல் , அலாரம் வைத்து எழுந்து , வாகன வெள்ளத்தில் மெதுவாக நீந்தி , வாகன நிறுத்தும் இடத்தில் ஒவ்வொரு தளமாக தேடி , கலப்பின வாகனத்தை நிறுத்தி , அலுவலகத்தின் காலை சிறப்பு பேச்சு நடைபெறும் சந்திப்பறையில் நுழைந்த போது , கடைசி வரிசையில் ஒரு சில இடங்கள் மட்டுமே காலியாக இருந்தது.நூற்றுக் கணக்கானவர்கள் நுழைவாயிலில் வந்து கொண்டிருக்க நடை ஓட்டமாக விரைந்து , இருக்கையில் அமர்ந்து மடிக் கணினியை தட்டி , மின் அஞ்சலை அலச தொடங்கு முன் , கிரெய்க் (Craig Mundie) அறிமுக உரையை ஆரம்பித்தார்.

ஆயிரம் பேர் அமரக்கூடிய அந்த கூட்ட அறைக்கு , அன்றைய பேச்சை கேட்க இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விருப்பம் தெரிவித்திருந்தார்களாம். மிகுதி அறைகள் மேலும் இரண்டு அமைத்தும் ,கூட்டம் நிரம்பி வழிந்தது இதற்கு முன்பு XBox 360க்கு மட்டும் தான் என்று நகைச்சுவையாக அறிமுகப் படுத்தி , சிறப்புரையாற்ற வந்த தாமஸ் ப்ரைட்மேனை(Thomas L. Friedman) பேச அழைத்தார். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு , மடிக்கணினியை மறந்திருந்து அவரின் பேச்சாற்றலில் மயங்கியிருந்தேன்.

உலகம் சம தளம் என்ற அவரின் நூலைப் பற்றி , உண்மையில் பாதி உலகம் தான் சம தளமாகி இருக்கிறது என்று பில்ஜி கூறியதாக சொன்னது மிகவும் சரி என்பது எனது கருத்து. என்றாலும் , தாமஸின் புதிய சிந்தனையும்,படைப்பாற்றலும், கருத்துகளை தொகுக்கும் திறனும் , அவற்றை தொடர்பு படுத்தி சிறந்த கதை போல ஆர்வமுடன் படிக்கும் வகையில் எழுதும் திறனும், தனது கருத்தில் தீவிர நம்பிக்கையுடன் கேட்பவர்களை கவரும் வகையில் பேசும் திறனும் நேரில் பார்த்து கேட்க கிடைத்து ஒரு சிறந்த அனுபவம்.

Friday, August 19, 2005

மாயை

கண்ணால் காண்பதும் ....





நடுவில் இருக்கும் crosshair-ஐ (எப்படி இதை தமிழ் படுத்துவது) உற்று நோக்குங்கள். பச்சை பந்து ,மெதுவாக ஊதா பந்தின் மேல் வட்டமிடுவது தெரிந்தால் சில மணித் துளிகளை வீணாக்குவது எப்படி என்று தெரியும்.
வெறும் பச்சை பந்து மட்டும் தெரிந்தால் பல மணித் துளிகளை வீணாக்குவது எப்படி என்று தெரியும். இதை வலைப்பதிந்தோ அல்லது மினஅஞ்சலுலில் அனுப்பத் தொடங்கினால் , வார இறுதி நெருங்கி விட்டது என்று தெரியும்.

விளக்கம்: http://www.michaelbach.de/ot/col_rapidAfterimage
ஆக்கம்: Jeremy L Hinton (2005-05-22, personal communication, jeremy dot hinton at bigfoot dot com)


மேலும் சி(ப)ல: http://www.michaelbach.de/ot

Sunday, August 07, 2005

வெற்றிக் கோப்பை



வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் , அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் டீம்மைச் (தாமரை) சேரும்.வாழ்க்கையில் வாங்கிய முதல் வெற்றி கோப்பை.

கம்பெனி பிக்னிக் வாலிபால் போட்டி முதல் பரிசு ( ஊதா பிரிவு) Posted by Picasa


பி.கு: நம்பிக்கை கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Thursday, August 04, 2005

அலுவலக வருடாந்திர மகிழ்வுணவு - கைப்பந்து போட்டி


கம்பெனி பிக்னிக் வாலிபால் போட்டி Posted by Picasa

Tuesday, July 26, 2005

நம்பிக்கை

நாளை
வரும் மரணம்
எனும் நம்பிக்கை
தூண்டும் எனை
நன்றே வாழ்ந்து விட
இன்று!!

பி.கு எனக்கு போட்டி , பரிசு இதிலெல்லாம் நம்பிக்கை :) இல்லை என்றாலும், 'நம்பிக்கை' என்ற தலைப்பு எழுத தூண்டிவிட்டது.

Thursday, July 21, 2005

தரையில் இறங்கும் மேகங்கள்


தரையில் இறங்கும் மேகங்களை படம் பிடித்த இடம் Yellowstone  Posted by Picasa

Wednesday, July 06, 2005

நிறைவு

வர்ணம் தீட்டப்படாத
வானவில்
வானவெளியில்
என்றென்றும்!

மீட்டாத வீணையின்
நாதம்
செவியில்
என்றென்றும்!!

மொழியில் அடங்காத
சொல்
நாவினில்
என்றென்றும்!!!

நிறைவை அறியாத
மனிதத்துவம்
வெறுமை என மறுகுவது
எந்த தர்க்கத்திலும்
அடங்காத
சாஸ்திரம்


விழியில் அடங்காத
விஸ்வரூபம்
என்று புரியும்!!!

Friday, July 01, 2005

தீர்வு குரங்கு

தீர்வு குரங்கு (Solutions Monkey) என்ற தொழில்/துறை சார்ந்த கூட்டுப் பதிவை நண்பர்களின் உதவியுடன் http://blogs.msdn.com/solutions என்ற முகவரியில் ஆரம்பித்திருக்கிறேன்.ஆக்கபூர்வமான கருத்துக்களையும் , விவாதங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கும்.

தீர்வு குரங்கு - 1.

Tuesday, June 28, 2005

தமிழனும் தண்டவாளமும்


தமிழனும் தண்டவாளமும் Posted by Hello

Tuesday, June 21, 2005

பசித்திரு! விழித்திரு!!

ஸ்டாண்போர்டு பல்கலையின் பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆப்பிள் நிறுவன இயக்குநர் ஸ்டீவ் ஜாப்ஸ் "Stay Hungry. Stay Foolish" என்று மாணவர்களிடம் கூறியுள்ளார்.நண்பர் ஒருவர் , அதை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.அவருக்கு அநேக கோடி நன்றிகள்.

மிக அருமையான கருத்துக்கள் அடங்கிய பேச்சு அது. மூன்று குட்டிக் கதைகளில் , உணர்வுபூர்வமாக , அருமையான கருத்துக்களை மாணவர்களுக்கு பொருத்தமாக சொல்லியிருக்கிறார்.


என்னை கவர்ந்த சில பகுதிகள்

வாழ்நாள் குறைந்தது , அதை மற்றவர்களின் கருத்திற்காக வாழாதே!

உன் வாழ்நாளில் பெரும் பகுதி உன் வேலையில் சென்று விடும் , அதனால் உனக்கு உண்மையில் பிடித்ததை வேலையாக செய்

தினம் இன்று தான் வாழ்க்கையின் கடைசிநாள் என்று வாழப் பழகு ( ஒரு நாள் உண்மையாகும்). உன் கடைசி நாளில் செய்யத் தகுந்த செயல் தானா நீ இன்று செய்வது என்று எண்ணி செயல் படு.


எழுத்து வடிவம்
http://news-service.stanford.edu/news/2005/june15/jobs-061505

ஒலி வடிவம்
http://news-service.stanford.edu/news/2005/june15/videos/53.html

ஒளி/ஒலி ( சிறு பகுதி மட்டும்)
http://news-service.stanford.edu/news/2005/june15/videos/51.html

Tuesday, June 14, 2005

பு(து)த்தகம்

என்னிடம் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை
156க்கும் மிகக் குறைவு ( ஒற்றை எண்ணிக்கை 156க்கு குறைவுதானே?). அது என்ன 156 கணக்கு?
கல்லூரி காலகட்டத்தில், வேலை கிடைத்தவுடன் , மாதம் ஒரு புத்தகம் மற்றும் ஒலிநாடா வாங்க வேண்டும் என்று கண்ட கனவு , பெங்களூர் பூங்காக்களில் சில மாதங்களிலேயே கரைந்து விட்டது.
13x12=156.


சமீபத்தில் படித்தவை
First Break All the Rules - Marcus Bukingham , Curt Coffman
இணையற்ற இளையற்றங்குடி - Dr.ஜவஹர் பழனியப்பன்
The Feiner Points of Leadership - Michael Feiner
அர்த்தமுள்ள இந்து மதம் - கண்ணதாசன்
I Can See You Naked - Ron Hoff (நீங்க நினைக்கிற மாதிரி இல்லை.சத்தியமா நல்ல புத்தகங்கோ...)
Business Speak - Suzette Haden Elgin

என்னை கவர்ந்த புத்தகங்கள் ( அந்தந்த கால கட்டங்களில்)

ரமணிச்சந்திரன் - லாவண்யா (10-13 வயதில்... அதனால் மன்னித்து விடுங்கள். )
கி.ராஜநாராயணன் - பல கரிசல் காட்டு சிறு கதைகள். கடைசியாக படித்தது "கோபல்லபுரத்து மக்கள்" என்று நினைக்கிறேன்.ஞாபக மறதி ஜாஸ்தி. காரைக்குடி கவிஞர் கிட்ட வாங்கி மெமரி+ மாத்திரை சாப்பிட வேண்டும்..
பாலகுமாரன் - தாயுமானவன் / மெர்குரிப் பூக்கள் ( வார்த்தைகளில் மனவியல் படம் பிடிக்க தெரிந்தவர்.Lathe பற்றியும் எழுத தெரியும்.)
சுஜாதா - கணையாழியின் கடைசி பக்கம் ( My Hero!!!)
வைரமுத்து - இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல / வைகறை மேகங்கள்

மற்றும் முதன் முதலில் படித்த விக்ரமாதித்தன் கதைகள் , கல்கியின் பொன்னியின் செல்வன் ( முடிவு தவிர), குமுதத்தில் எழுதிய ப்ரியா கல்யாணராமன், கிருஷ்ணா டாவின்ஸி எல்லாம் பிடிக்கும்.

இணைய பதிவுகளில் வரும் புத்தகங்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது , கதை படிக்கும் பழக்கத்தை கைவிட்டு விட்ட எனக்கு வெட்கமாக இருக்கிறது.
இன்றளவும் , தினமும் ஒரு நூலாவது விடிய விடிய ( பரிட்சைக்கு படிப்பது போல) படித்து முடிக்கும் என் அப்பாவை பார்க்கும் போது இன்னும் எனக்கு வெட்கமாக இருக்கிறது.

என்னைப் போல கூனி குறுகும் உள்ளங்களுக்கு...
மனதை தேற்ற உதவுவது எல்லாருக்கும் தெரிந்த ஒரு குட்டிக் கதை.

படகில் ஒரு சாமியார் சென்றார். அப்பொழுது படகோட்டியை பார்த்து ,"நீ இராமாயணம் படித்திருக்கின்றாயா?" என்று கேட்டார்."இல்லை சாமி" என்றார் படகோட்டி.
"அடப் பாவி வாழ்க்கையில் பாதி நாளை தொலைத்து விட்டாயே" என்றார் சாமியார். மீதி கதை உங்களுக்கே தெரியும்....


கடைசியாக , கல்லூரியில் ஆங்கில ( மற்றும் இதர) அறிவை வளர்த்துக் கொள்ள , ஆங்கில நாவல்கள் படிக்க ஆரம்பித்ததில் அமெரிக்க சாண்டில்யன் "இர்விங் வாலஸ்" நூல்கள் தான் அதிகம்.
அதில் பிடித்தது "தெய்வீக ...."

Thursday, June 02, 2005

பெயர் தேடும் படலம்

பஸ் ஸ்டாப்பில்
பார்த்த முகம்
பழகியதாய் தோன்ற
நினைவிடுக்கில்
சிக்கித் தவித்த பெயரை
வெளிப்படுத்த
தொடங்கிய துலவல்
தொடர்ந்தது நாளெல்லாம் !

முதலெழுத்தில் ஆரம்பித்து
முத்தெடுப்பது போல்
மூழ்கி பார்த்தும்
முடியாமல் தொடர்ந்தது
முயற்சி!

இயந்திர கதியாய்
இயங்கிய பொழுதும்
இடையிடையே இடித்துப் பார்த்த
இளம் பருவத்து ஞாபகங்கள்
இடர்படுத்தியது
இழந்து விட்ட பல பெயர்களை!

வாய் குவித்து
சொல்லிப் பார்த்தும்
வர மறுத்து
அடம் பிடித்தது
தொலைத்து விட்ட
வாழ்க்கையின் தொடர்ச்சிகள்!!!

விடி வெள்ளி கீற்றாய்
வீச்சொளியாய்
விரைந்து வந்த சம்பவங்கள் பல
விடை காணுமுன்
விலகியே சென்றது !

மறந்தது எது
மறக்கச் செய்தது எது
என மருகி
மணி அடித்ததும்
வீடு திரும்பும்
எனை
கடந்து சென்ற வாகனத்தில்
சென்ற முகம்
திரும்பி பார்த்து
கண் சுருக்கி
சிந்திக்க தொடங்கியது
எதேச்சை தானா?

Tuesday, May 24, 2005

சியாட்டல் பொது நூலகம்

சென்ற வார இறுதியில் "மழைக்காக" சியாட்டல் பொது நூலகத்தில் ஒதுங்கினோம். கல்வியா , செல்வமா , வீரமா என்ற காலம் போய் ,கல்வியும் செல்வமும் கைகோர்த்து நிற்கும் இன்றைய கால சூழலுக்கு ஏற்ப 165.5 மில்லியன் டாலர் செலவில் கட்டப் பட்டுள்ள , இந்த நவீன நூலகம் , ஒரு வணிக மையம் போல உள்ளது.

படிப்பவர்களை விட , என்னைப் போல 'கிளிக்'கியவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகம். மின் விளக்குகளையும் , மின் படிக்கட்டுகளையும் , பரந்து விரிந்த பதினோரு அடுக்கு
மாடிகளையும் பார்த்த போது , வீண் ஆடம்பரமோ என்று தோன்றியது. விமான நிலையங்களையும், வணிக மையங்களையும் பார்க்கும் போது வராத இந்த குறுகுறுப்பு , இப்பொழுது மட்டும் ஏன் என்று உள்மனது அதட்டியது. படிக்க சென்ற காலங்களில் காலணா கூட செலவு செய்திடாமல்,"பார்க்க" சென்ற போது , வாகனம் நிறுத்த ஐந்து டாலர் அழுததன் காரணமாயிருக்கலாம்.

என் பார்வையில் புது உலகின் அலெக்சாண்ட்ரியா நூலகம் இது!!!!

www.spl.org இருந்து சில ஒளிப்படங்கள் (புகைப்படங்கள்) உங்கள் பார்வைக்கு






மேலும் ஒளிப்படங்களுக்கு
http://www.spl.org/images/slideshow/NewCentralSlideshow.asp?index=0

Saturday, May 07, 2005

பரிபாஷை

காலில்லா குதிரை
காதில் முளைத்த கம்பை பிடித்து
பறக்கும் ராட்டிணத்தில் பரவசம்!

மரக்குதிரை தான் எனினும்
மனம் விரும்பிய வெண்குதிரை
மாட்டாத வருத்தம் மனமெங்கும்...

பல நாள் கனவு
பாதியாய் கிட்டியதில்
சோகமா? சுகமா?

அடுத்த சுற்றிலாவது
அருகில் வருமா
ஆசை குதிரை
அல்லது...
அடுத்த சுற்றே அவ்வளவு தானா!

தவித்த மனத்திற்கு
தரை இறங்கிய தருணம்
சுற்றிய உலகம்
சுத்தமாய் புரிந்தது!!!

Sunday, May 01, 2005

உலகம் சமதளம்

Thomas L. Friedman எழுதிய "The World is Flat" என்ற உலகமயமாக்கல் பற்றிய புத்தகத்தை பற்றிய "Meet the Press" நிகழ்ச்சியை எதேச்சையாக தொலைக்காட்சியில் பார்த்தேன். அவர் "Pulitzer" பரிசு பெற்ற எழுத்தாளர். அவரது பல தொலைக்காட்சி பேட்டிகளை பார்த்திருக்கிறேன். கொஞ்சம் இந்திய ஆதரவு நிலை அவரது பேச்சுக்களில் தெரியும்.இந்திய நிறுவனங்களில் நடத்தப் படும் "accent neutralization" பாடங்களைப் பற்றிய அவரது சமீபத்திய பயணக்கட்டுரை மிகப் பிரபல்யம்.

பேட்டியின் போது , அவரது குழந்தைப் பருவத்தில் உணவு அருந்த மறுத்து அடம்பிடிக்கும் போது அவரது தாயார்
"இந்தியாவிலும் , சீனாவிலும் பட்டினியால் நிறைய குழந்தைகள் வாடுகிறார்கள்.நீ ஒழுங்காக சாப்பிடாவிட்டால், அவர்கள் வந்து உணவை பறித்து சென்று விடுவார்கள்"
என்று மிரட்டிய காலத்தை நினைவு படுத்தி , இன்றைய காலகட்டத்தில் வீட்டுப் பாடத்தை ஒழுங்காக செய்யாத அவரது குழந்தைகளைப் பார்த்து , அவர்
"இந்தியாவிலும் ,சீனாவிலும் ஒழுங்காக பாடம் படிக்கும் நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள்,நீ ஒழுங்காக பாடம் படிக்காவிட்டால் , அவர்கள் வந்து உனக்கும் கிடைக்க வேண்டிய வேலையை பறித்து சென்று விடுவார்கள்"
என்று மிரட்ட வேண்டிய சூழ்நிலையை அழகாக எடுத்துச் சொன்னார்.

ஐந்தாம் நிலையில் கணிதத்திலும் , அறிவியலிலும் முதல் நிலையில் இருக்கும் அமெரிக்க குழந்தைகள் , பனிரெண்டாம் நிலையில் கடை நிலைக்கு தள்ளப் படுவதை குறித்து
தேசிய அளவில் விவாதம் நடத்தப் பட வேண்டும்.மற்றும் அவர்களை அறிவியல் பாடம் படிக்க தூண்டும் வகையில் , நாட்டின் குறிக்கோளாக சக்தியில் தன்னிறைவு பெற்ற
நாடாக அமெரிக்காவை மாற்ற ஆராய்ட்சியை முன்னிறுத்த வேண்டும் என்று வலியுருத்தினார்.

பில் கேட்ஸ் கூட கவர்னர்களின் மாநாட்டில் பள்ளிப் பாட சீர்திருத்தத்தைப் பற்றி வலியுறுத்தி சிலவாரங்களுக்கு முன்பு பேசினார்.

Y2K should be a national holiday in India. Call it "Indian Interdependence Day" என்று Michael Mandelbaum குறிப்பிட்டதையும்
இந்த நிகழ்ச்சியில் நினைவு படுத்தினார்.

Thursday, April 21, 2005

சந்தரமுகி 'பஞ்ச் டயலாக்'

சந்தரமுகி விமர்சனம் எழுதியோ, திரைப்படம் பார்க்க சென்று வந்த அனுபவத்தையோ எழுதியோ பிறவி பயனை அடைய எனக்கும் ஆசை தான். இருந்தாலும் , நான் எழுதுவதை எப்பொழுதாவது படிக்கும் ஒன்றிரண்டு வாசக நெஞ்சங்கள் பல விமர்சங்களை படித்து குழம்பியிருக்கும் நிலையில் , மேலும் படுத்தாமல்நம்மால் ஆன உதவியாக அதை செய்யாமல் விட்டு விடிடுகிறேன்.

சியாட்டல் ( ரெட்மண்D) திரையரங்கில் , முதலில் சென்ற ஒரு சிலர் ,ஊரில் தெரிந்த அனைவருக்கும் சீட் பிடிக்கிறேன் பேர்வழி என்று , புறம்போக்கு நிலம் போல பல வரிசை இருக்கைகளை துண்டு போட்டு பிடித்து வைக்க , அடுத்த வந்த சிலர் , முன்னுரிமை கேட்டு போராட , கடைசியாகா டிக்கெட் வாங்கியும் , இருக்கை கிடைக்காமல் பலர் திரும்பி விட்டனர்.

அதனால் , அடுத்த நாள் அலுவலகத்தில் அதைப் பற்றி சூடான விவாதம் மின்னஞ்சல் குழுவில் இடம் பெற்றது. சந்தடி சாக்கில் , படம் பார்க்காத ஒருவர் படத்தில் 'பஞ்ச் டயலாக்'இல்லையாமே , படம் எப்படி இருந்தது என்று வினவ , அடுத்தவரின் பதில் இது

eppudu choodu.......I will give you one ....(Stepping in For RAJINI)
Munnadiye vanthu seetu pudicha 'family'um.......Avangaloda seetukku sandapodara 'family'um ozhunga padam pathatha saritharame illa.......


மின்அஞ்சல்கள் குவிவதை பார்த்த அடுத்தவர் , எப்பொழுதும் மின் அஞ்சலே வராத இந்த (தமிழ்) குழுவில் , இத்தனை ஈ-மெயில்களா என்று கடுப்படிக்கதிரையரங்கும் நிறைந்து வழிவதானாலும் , மெயில் பாக்ஸ் நிறைந்து வழிவதானாலும் , அதற்கு காரணம் தலைவர் தான் என்றார் மற்றொருவர்.

மொத்தத்தில் , எனக்கு ஒரே டிக்கெட்டில் 3 படம் பார்த்த திருப்தி.நீண்ட நாட்களுக்குப் பின் , அபரிமிதான வெற்றி பெற்ற ரஜினி படம் , அருமையான கதைப் பின்னணி கொண்ட ஒரு நல்ல சஸ்பென்ஸ் திரில்லர் படம் தமிழில் பார்த்த திருப்தி(ஒரிஜினல் கதை/படம் பண்ணியவர்களுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ..........), பக்கா மசாலா வாசு படம் ( அட்டகாசமான திரைக்கதை , இயக்கம் , இசை , நீண்ட நாட்கள் கழித்து SPBயின் குரலிசை)

படம் பார்த்து என் பெண்ணிற்கு காய்ச்சல். எனக்கும் ஜோவின் முட்டை கண் இரவில் வந்து பயமுறுத்தியது. லக்கலக்கலக்கல்க்கல்க...


பி.கு.: நான் விமர்சனம் எழுதும் பலரைப் போல நல்ல திரைப் பட ரசிகன் இல்லை. ரஜினி biased ரசிகன்.

Wednesday, April 06, 2005

மேடை பயம்

இன்று மேடை பேச்சு பற்றிய ஒரு பயிற்சிக்கு சென்ற இடத்தில் கேட்ட தகவல்.உலகில் அதிக மக்கள் பயப்படும் முதல் விஷயம் மேடை பேச்சு. அதற்கு அடுத்த இடம் தான் மரணத்திற்கு. செயின்ஃபெல்ட்(Seinfeld) ஒரு முறை நகைச்சுவையாக மரண அஞ்சலி செலுத்தி பேசுபவர்களில் , இப்படி மேடை ஏறி அஞ்சலி சொல்வதை விட மரண படுக்கையில் தானே இருந்திருக்கலாம் என்று எண்ணுபவர்கள் அதிகம் என்று கூறினாராம்.


கல்லூரி வரை மேடை பேச்சு என்றால் , கட்டை குரலில் எதுகை மோனையோடு பேசும் திராவிட சிகாமணிகள் , சுந்தர தமிழில் அடுக்கு மொழியில் மற்றவர்கள் படித்திடாத சங்க கவிதைகளை சுட்டிக் காட்டி பேசும் தமிழ் ஆர்வலர்கள் , இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசும் அரசியல் வாதிகள் , துணுக்கு தோரணம் கட்டும் பட்டிமன்ற சொற்பொழிவார்கள் , குட்டிக் கதைகள் சொல்லி அருள் மொழி வழங்கும் ஆன்மீகவாதிகள் , தத்து பித்தென்று பேசும் திரை நடிகர்கள் என்று தான் பார்த்திருந்தேனே தவிர , சொல்ல வந்த கருத்தை தெளிவாக , எளிமையாக புரியும்படி , மனதில் என்றும் இருக்கும் படி பேசியவர்களை பார்த்தது அரிது.

வேலை பார்க்க ஆரம்பித்த பின் தான் , நிறுவனங்களின் உயர் பதவியில் இருப்பவர்கள் (சிலர்) தான் , நான் பார்த்ததில் மிகச் சிறந்த பேச்சாளர்களாக இருந்திருக்கிறார்கள். மற்றவர்களைப் போல தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக இதை பயன் படுத்தாமல் , கேட்பவர்கள் தான் பேசும் கருத்தில் உடன் பட்டு , நம்பிக்கையோடு உழைப்பதில் தான் , நிறுவனத்தின் வெற்றி இருக்கிறது என்று எண்ணுவதால் இப்படி அமைகிறது போலும். மைக்கேல் பெய்னர் (Michael Feiner) கூட தான் திறமைசாலி என்று மற்றவர்கள் எண்ணும்படி பேசுபவனை விட , கேட்பவர்கள் திறமைசாலிகள் என்று எண்ணும்படி நடந்து கொள்பவனிற்கே வெற்றி அதிகம் என்று கருத்து வரும்படி தனது நூலில் எழுதியுள்ளார்.

Sunday, March 13, 2005

மொழி காக்கும்...

கடந்த வாரம் வெளி வந்த Forbes உலக பணக்காரர்களின் தர வரிசை பட்டியல் அனைவரும் அறிந்ததே!.நானும் உங்களைப் போல முதலில் Most Eligible வரிசையை தான் ஆவலுடன் பார்த்தேன்.இந்த வருடம் ,பெண்களில் ஓப்ரா மட்டும் தான் இந்த தகுதியுள்ளவராம். :(

இந்தியர்கள் வரிசையில் நம் பெயர் வரும் நாள் எந்நாளோ என்று அடுத்து அசாதாரண ( Quirky) உதவி செய்வர்கள் வரிசையை பார்த்தேன். குமாரமங்கலம் பிர்லா ஏழை விதவைகளின் மறுமணத்திற்கும், ஜெர்மனிய ஹெய்ன்ஸ் இந்தியாவில் தொழுநோய் ஒழிக்கவும் உதவுகிறார்களாம்.

அழியும் மொழிகளை ஆவணப் படுத்த முயலும் ஹான்ஸ்(Hans Rausing) பற்றி படித்தது என்னை கவர்ந்தது.அலாஸ்காவில் 70 முதல் 100 பேர் வரை பேசப்படும் அலுட்,கிழக்கு நேபாளத்தின் கோய் ராய்,பேசத் தெரிந்தவர்களில் ஓரே ஒருவர் மட்டுமே மிஞ்சியுள்ள வனவ்சு மொழி என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே சொல்கிறது.

மேலும் விவரங்களுக்கு
http://www.forbes.com/billionaires/2005/03/07/cz_bill05_quirkyslide_4.html

நம்முடைய மொழிக் காவலர்களும் , கட்டளைகள் மற்றும் அடுத்தவர்களுக்கு செய்யும் அறிவுரைகளுடன் புரவலர்களாக மாறினால் நலம்.

பில்லியனர்களுக்கு தமிழில் என்ன?
மஹா கோடீஸ்வரர்கள் என்பது பொருத்தமா?( பண முதலைகள் , பண டைனோசர்கள்...?)

Thursday, March 03, 2005

கொடுத்து சிவந்த கரங்கள்

சிலேட் பத்திரிக்கை சென்ற வருட சிறந்த அமெரிக்க வள்ளல்களைப் பற்றி பட்டியலிட்டுள்ளது.
http://www.slate.com/id/2112691
முதலிடத்தில் இருப்பது... வேறு யாராக இருக்க முடியும்?. அடுத்த இடத்திலிருப்பதும் அவரின் தோழர் தான்.நான் எதிர்பார்த்த பல பெரும் தலைகள் இதில் இல்லை ( நான் உள்பட :) ).

இந்தியாவில் இப்படி வெளிப்படையாக பட்டியல் அறிவித்தால் நன்றாக இருக்கும்.
தமிழகத்தில் நம்ம தலைவர் தான் முதலிடம் பிடிப்பார் என்று நினைக்கிறேன்.


உபரி தகவல்( டெய்ல் பீஸ் ?)
உலகம் சுற்றிய வாலிபன் http://msnbc.msn.com/ID/7075972

Wednesday, February 23, 2005

சருகு

சருகு

காலம் மாறியதும்
கடந்தவை மறந்து
கண நேரத்தில்
உதிர்த்த உன்னை விடுத்து
காரணம் காற்றே என நினைத்து
உயிர் விட்டாலும்
உரமாகியாவது உனை
நலமாக்கலாம் என
மக்கி மடிய தவமிருக்கையில்...

காலனாய் வந்த காற்று
கர்ணனாய் தோள் கொடுத்து
எனை உயரத் தூக்கி
உன் அருகில் கொணர்ந்த போது
பாராதது போல்
பாசங்கு காட்டி
பறந்த எனை
கீழே தள்ளியது
ஏன் கிளையே?
புதிதாய் பூத்த
உறவுகளா!

Thursday, February 17, 2005

சாகாவரம்

ரே கர்டஸ்வெய்ல் (Ray Kurzweil) இன்னும் 20 வருடத்தில் சாகாவரம் சுலபமாக கிடைக்கும் என்கிறார்.
நம்ம ஊர் தினத்தந்தியில் வரும் சித்த வைத்தியர் இல்லை இவர். இது நாள் வரை புகழ்பெற்ற ஆராய்சியாளர்.நான் வேலை புரியும் நிறுவனத்திற்கு , 2 வருடங்கள் முன்பு ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு பேச்சாளராக தலைமையுரை ஆற்ற வந்திருந்தார்.மிகச் சிறப்பாக பேசி அனைவரையும் மெய்மறக்க செய்தார். திடீரென்று இப்படி 10 குவளை தேநீர் , அது இது என்று சாகாமல் இருக்க மருந்து கண்டுபிடிக்க இறங்கி விட்டார்.
பணம் பத்தும் செய்யும் என்பது போல பயம் பத்தும் செய்யும் போலும்.

இது வரை கட்டிய Life Insurance premium எல்லாம் வீணாக போய் விடுமோ?

Sunday, February 06, 2005

மற்றும் ஒரு ...

வரப் போகும்
வாரயிறுதியின்
கொண்டாட்ட நிகழ்ச்சி
வரவேற்ற அழைப்பிதழ்
வந்து நினைவில் ஆட

மறைத்து நின்ற
அலுவலக குப்பையை
அவசரமாக கொட்டி விட்டு
ஆனந்தமாக கிளம்பினேன்
வீடு நோக்கி.

அவசரம் புரியாமல்
ஆமையாய் நகர்ந்தது
அன்றைய போக்குவரத்து

அலை அலையாய்
மருத்துவ ஊர்திகள்
பறந்தன
அபாய மணியுடன்

வழிவிட்டு
விழிபார்த்து
ஒதுங்கி நின்றன
ஆமைக் கூட்டம்

வாரயிறுதி குதூகலம்
வடிந்து விட்ட
வருத்தத்தில்
சபித்தது மனம்
மோதிக் கொண்ட
வாகனங்களை


மிஞ்சியிருந்த
சந்தோஷத்தையும்
கிஞ்சித்தும்
விட்டு விட மனமில்லாமல்
சம்பவ இடத்தை
கடந்த போது
முகம் திருப்பி
முடுக்கினேன்

நாளைய நாளிதழில்
மற்றும் ஒரு செய்தி!
புள்ளி விவரத்தில்
மற்றும் ஒரு கூட்டல்!
அபாய வளைவு என்று
மற்றும் ஒரு அறிவிப்பு!
அவ்வளவு தான்
இது என்று
விரைந்தது வாகனம்
வீடு நோக்கி


வாசலில்
என் மற்றும் ஒரு வாகனத்தை
கண நேரம்
காணாத போதுதான்
பதறியது மனது
ஒரு கணம்.

சற்று தள்ளி
நிறுத்தி இருந்த
வாகனம்
தந்ததொரு பாடம்
இனி
ஒவ்வொரு முறையும்
சபிக்காது
சாந்தியடைய
பிரார்த்திக்கும்.

Friday, January 21, 2005

அரைத் தூக்கம்

கனவிற்கும்
நினைவிற்கும்
இடையில் ஆடும்
ஊஞ்சல் ஆட்டம்!

கனவுலகில்
கனவு மாடு
செல்லும் வழி இல்லாமல்
கற்பனை குதிரை பூட்டிய
மனோரதத்தில்
விரும்பும் வழி ஊர்வலம்!!

விழிக்கும் முன்
அளிக்கும் உற்சாகம்..
விழித்தபின் தான்
விடாது சோர்வு!

இயந்திர வாழ்க்கையிலும்
என்றும் விடாது தொடரும்
ஆனந்த தவம்!


அலாரம் அடிப்பதற்கும்
அன்றாட கவலைகள்
எழுப்புவதற்கும்
இடைப்பட்ட
அரைமணி நேர
சொர்க்கம்!!

Tuesday, January 18, 2005

ஜகத் காரணம்

அரூபமே
ஆண்டவனென
தொழுகினோம்

ஆயுதம் பல
கொண்ட
ஆபத்பாண்டவனாய்
தரிசித்தோம்

ஆசைகள் நீக்கிய
ஆண்டியாய்
அருள் பாவினோம்

வரம் பல தந்திடும்
மாயாமாய்
மருகினோம்

ஆயிரம் கரம் கொண்டவனாய்
அச்சம் நீக்கிட
வேண்டினோம்

நீ பெரிது நான் பெரிதன
போட்டியிடும்
மானிட வடிவத்தில்
உனை வடித்து வணங்கினோம்

உயிரினம் பலவற்றின்
வடிவத்தில் உனை
போற்றினோம்

பஞ்ச பூதமாய் உன்
பதம் நாடினோம்

பாவம் நீக்கிட
வந்த பரிசுத்தனாய் உனை
பாவித்தோம்

நீ யாரோ எனினும்
அழிவு வந்த வேளையில்
அடைக்கும் தாழின்றி
வந்திட்ட அன்பிற்கு
காரணம் நீயே தானா?

ஜகத் காரணமே
நீ யாரென அறிய
ஏழாவது அறிவு
வேண்டுமோ?

Monday, January 17, 2005

கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு!!!

ஞாயிறன்று ஹாலிவுட் தங்க கோளம் பரிசளிப்பு விழாவின் சிகப்பு கம்பள நேர்காணலில் அறிந்த தகவல் இது.சிறந்த துணை நடிகை பரிசு பெற்ற நடாலி போர்ட்மேன் , ஹார்வ(ர்)டில் படித்தவராம். ஹாலிவுட்டில் ஆடை ஆபரணங்களையும், அலங்காரத்தையும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கல்வியைப் பற்றி குறிப்பிடும்படி செய்து விட்டார் வருங்கால ஜூலியா...


வீட்டில் சத்தம் குறைவாக டிவியில் வெறும் "படம்" மட்டுமாக இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்காக இந்த செய்தி...

Thursday, December 30, 2004

மன்னிப்பு ஏது?

நில மங்கையின்
கண நேர தடுமாற்றத்தில்
இத்தனை பெரிய
அழிவா!!!

கடவுளின்
கோபமென்றும்
பாவத்தின்
பலன் என்றும்
மரணமடைந்த
மாந்தரின்
மதம் பலவும்
ஆருடம் கூறினாலும்

இறந்ததில்
பெரும்பாலும்
"ஏழை" மதம் அன்றோ!

எளியவரிடம்
காட்டும்
கோபம்
ஏளனம் அன்றோ!

அன்னை
என எண்ணி
உன் மடியில்
உறங்கிய உயிர்களுக்கு
உணவளித்த ஒரே
காரணத்திற்காக
உயிரெடுக்க
என்ன உரிமை
உனக்கு?

பண்ணியது
பாவமென்று
காலம் காலமாய்
அலைகளாய்
எங்கள்
காலடியில் விழுந்து
மன்றாடினாலும்
கண்ணீரால்
எங்கள்
பாதங்களை
கழுவினாலும்
மன்னிப்பு ஏது
உனக்கு?

Thursday, December 23, 2004

Ocean's Twelve

மணிரத்தினமும் , இராமநாராயணனும் சேர்ந்து இயக்கிய படம் மாதிரியான ஒரு கலைக் கூத்து.ஆளாளுக்கு மாறி மாறி பேசுவதிலும்,தட தட வென மாறும் காட்சிகளிலும் , மிக கவனமாக கூர்ந்து கேட்டு / பார்த்து புரிந்து கொள்வதற்காக நுனி இருக்கையில் அமர்ந்து பார்க்க வைத்து விட்டது இந்த படம்.( திரையரங்கில் வேறு யாரும் சிரிக்கும் போது , நாம் மட்டும் சிரிக்காமல் இருத்து விடக் கூடாது பாருங்கள்!!!).கடைசியில் பிரபு தேவா மாதிரி உடம்பை வளைத்து நெளித்து திருடும்"இரவு நரி" வில்லனுடன் , எல்கேஜி தனமாக நீ பெரிய திருடனா , நான் பெரிய திருடனா என்று மோதி சப்பென்று முடிந்து விட்டது.எனினும் ஒரு வித்தியாசமான கமல்தனமான படம்.

ஜுலியா "ப்ரெட்டி ஓல்ட் உமன்" ஆகிவிட்டார்.

Monday, December 20, 2004

கருணை கொலை

கடவுள்
காட்ட தவறிய
கருணைக்கு
தவித்த ஜீவன்களுக்கு
உதவ நினைத்த
உள்ளத்தை
கொலை செய்யாமல்
காக்குமா
கருணை கொலை !!!

Saturday, December 04, 2004

முக்தி

காட்டாற்றிற்கு
கடலில் கலக்க
ஏனிந்த வேகம்!

கூவமும் கங்கையும்
ஒன்றாய் கலந்தாலும்
பாவமும் புண்ணியமும்
அங்கு
பிறப்பதோ அழிவதோ
இல்லை என்பதாலா?

வெய்யிலில் வற்றாமலும்
மழையில் வழிந்தோடாமலும்
பருவகாலத்தை நம்பியிருக்காமல்
என்றும் நிறைவென்றிருப்பதாலா?

ஒருசுவை முக்தியென்று
கலப்பதற்கு முன்
மற்றவர்கள் அறுசுவைக்கு வழிவகுக்க
சிறு ஓடை பலவாறாய்
நீ வேகம் தணிந்து செல்வதில்
கிடைப்பது தான்
உண்மையான முக்தி!!!

Saturday, November 27, 2004

(ஏ)மாற்றம்

கதிரொளியை மறைத்து
கருமேக கூட்டம் பரப்பிய
காரிருளைக் கண்டு
கவலை கொள்ளாமல்
கன மழை தருமென
களித்திருந்த மனம்...

காற்றில் கலைந்து போன
கார்மேகத்தை கண்டு
காத்திருந்ததில் ஏமாற்றம் தான்!

எனினும்
வெறும் வானமாய் இல்லாமல்
வெண்மேகமாய் விண் வீதியில் உலா வராமல்
கலைந்து போனாலும்
கார்மேகமாய் வந்ததில்
கொஞ்சம் மகிழ்ச்சிதான்!!!

இல்லாத வாய்ப்பைவிட
இழந்த வாய்ப்பில்
ஏமாற்றம் தான்
எனினும்
விதைத்து விட்டு சென்ற
நம்பிக்கையில்
நாளைய கார்மேகம்
நன்றே வருமென
கொஞ்சம் மகிழ்ச்சிதான்!!!

Tuesday, November 16, 2004

'ஹாட்மெயில்' சபீர் பாட்டியா

நீண்ட நாட்களுக்கு பிறகு 'ஹாட்மெயில்' சபீர் பாட்டியாவின் (Sabeer Bhatia ) பெயர் செய்திகளில் அடிபட்டது. அர்சூ (Arzoo.com ) அடிபட்டபின், அடுத்த என்ன செய்யப் போகிறார் என்று தெரியாமல் இருந்தது. இப்பொழுது ஆஸ்திரேலியாவில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்ட போது TeliXO.Com மற்றும் மின்னஞ்சல் குப்பைகளை தடுக்க உதவும் உபகரணம் என்று தன் புது முயற்சிகளைப் பற்றி தெரிவித்திருக்கிறார். முதல் வெற்றியை விட , தொடர்ந்த வெற்றி மிக கடினமான விஷயம் தான். பல தமிழ் திரை இயக்குனர்கள் கூட முதல் படத்தை வெற்றிகரமாக கொடுத்து விட்டு , பின் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள திண்டாடுவது போல் தான் இதுவும்.
ஆனால் முயன்றால் முடியாதது இல்லை தானே!!!

Wednesday, October 13, 2004

சிரஞ்சீவி தோசை

சிவாஜி கணேசன் மாதிரி பல அவதாரங்கள் எடுக்கக் கூடிய ஒரே உணவு வகை தோசை தான்.வீட்டில் பெரும்பாலும் சாதா தோசை தான். அவ்வப் பொழுது குழந்தைகளை குஷிப் படுத்த , சின்ன தோசை , வெவ்வேறு வடிவங்களில் செய்து அசத்துவதுண்டு. முறுகல் தோசை மேல் எனக்கு
தனி காதலே உண்டு.

உணவகங்களில் பெரும்பாலும் மாசாலா தோசை மற்றும் ரவா தோசை பொதுவாக காணப்படும். விஜிபி தங்க கடற்கரை மூலம் "குடும்ப தோசை" ரொம்ப பிரபல்யம்.உணவு மேசை கொள்ளாத "குடும்ப தோசை" செய்வதை பார்க்க வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசை. நகைச்சுவை துணுக்குகளில் அடிக்கடி பேப்பர் ரோஸ்ட் வந்து செல்லும்.கொஞ்சம் கனமானவர்களுக்கு நெய் தோசை , அசைவ பிரியர்களுக்கு முட்டை தோசை என்று சகலமானவர்களின் ருசிக்கேற்ப பலவகைகளில் கிடைக்கும் தோசை "ஆசை தோசை" என்ற சொற்தொடரில் இடம்பெற்றதில் ஆச்சர்யமில்லை. :)

வழக்கமான உணவு வகைகளில் அலுப்படைந்தவர்கள் வெங்காய தோசை , தக்காளி தோசை என்று எதை வைத்து வேண்டுமானலும் தோசை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். பெங்களூரில் இருந்த போது மைசூர் மசாலா தோசை என்று கார சட்னி உள்ளே வைத்து கூம்பு வடிவத்தில் தோசை செய்து , உச்சியில் வெண்ணெய் ( கொக்கு பிடிப்பது போல) வைத்து கிடைக்கும். அதே போல ஆந்திரா தோசை உப்புமாவை உள்ளே வைத்து 2-இன் - 1 ஆக கிடைக்கும்.

அலுவலக நிமித்தம் பயணம் செய்யும் போது , பணத்தைப் பற்றி கவலைப்படாமல் , பயணப்படியின் மேல் பாரத்தை போட்டு விட்டு , நல்ல உணவகம் சென்று ஒரு வெட்டு வெட்டுவதில் அலாதியான சுகம் உண்டு. கடந்த மாதம் ஹைதராபாத் சென்றிருந்த போது , ஒரு மாலை நேரம் , "சட்னி" உணவகம் சென்றிருந்தேன்.புதிதாக என்ன சாப்பிடலாம் என்று உணவு பட்டியலை பக்கம் பக்கமாக தேடிக் கொண்டிருந்த போது , ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு பிடித்தமான தோசை என்று குறிப்பிடப் பட்டிருந்த தோசை கண்ணில் பட்டது. உடனே நானும் சூப்பர் ஸ்டாராக ஆசைப்பட்டு , அதை வாங்கி சாப்பிட்டேன். எண்ணெய் இல்லாமல் , இட்லி போல ஆவியில் சமைக்கப்பட்டு , ஊத்தப்பம் போல உப்பலாக , ஆப்பம் போல மெத்து மெத்தென்று , இடியாப்பம் போல சுவையாக இருந்தது சிரஞ்சீவி தோசை. வாய்ப்பு கிடைக்கும் போது தவற விட்டு விடாமல் ருசி பாருங்கள் நண்பர்களே !!!

இதன் புகழ் பற்றி இன்னும் தெரிய வேண்டுமானல் கூகிளில் "chiranjeevi dosa" என்று தேடிப் பாருங்கள் அல்லது http://timesofindia.indiatimes.com/articleshow/22857624.cms படித்துப் பாருங்கள்.

Friday, October 01, 2004

எரிமலை எப்படி பொறுக்கும்

எங்க ஊர் எரிமலை ஹெலன்( அந்த கால ஆட்ட நாயகி பேர் மாதிரி இருக்கா?)ஸ் கொஞ்சம் குமுற ஆரம்பித்திருக்கிறது.சிவப்பு மல்லி படத்தில் , சந்திர சேகர் தொண்டை நரம்புகள் தெரிக்க உணர்ச்சி பூர்வமாக "எரிமலை எப்படி பொறுக்கும்" என்று எரிமலைகள் எல்லாம் கம்யூனிஸ்ட் சொந்தகாரர்கள் மாதிரி வாயசைத்து செல்வார்.நேரில் பார்த்த போதுதான் , இயற்கையின் உக்கிரம் தெரிந்தது. இப்பொழுதெல்லாம் சீஸ்மோகிராப் வைத்து கிட்டத்தட்ட எப்பொழுது எரிமலை வெடிக்கும் என்று அபாய அறிவிப்பு முன்னெச்சரிக்கை கொடுத்து விடுகிறார்கள்.
இப்பொழுதெல்லாம் பல மனிதர்கள் எரிமலை மாதிரி அவ்வப்பொழுது வெடித்து விடுகிறார்கள். அதெற்கெல்லாம் முன்னெச்சரிக்கை கிடைத்தால் நன்றாக இருக்கும்.
http://www.fs.fed.us/gpnf/mshnvm

Monday, September 13, 2004

கோல்கொண்டா

ஹைதராபாத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு தொலைபேசியில் மனைவியிடம் நாளை கோல்கொண்டா போகப் போகிறேன் என்று சொன்னேன். அப்படியா , அங்கேயும் கோல்கொண்டா நல்ல புகழ்பெற்ற ஹோட்டலா என்று கேட்டாள். எனக்கும் சென்ற வாரயிறுதி வரை , கோல்கொண்டா ஒரு ஹோட்டலாக தான் அறிமுகம். சரித்திரத்தில் எப்பொழுதோ படித்த ஞாபகம் , பெயர் பரிட்சயத்தை தந்ததை தவிர , வேறொன்றும் தெரியாது.

இந்தியாவில் சுற்றுலா செல்லும் இந்தியர்களை விட , வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்று நாளிதழில் படித்தேன். நம்ம ஊரில் , சுற்றுலா பள்ளி/கல்லூரி காலங்களில் செல்லும் சடங்காகவும் , அலுவலகத்தில் தரப்படும் பயணப்படியை பெற உதவும் ஒரு விஷயமாகவும் மட்டுமே உள்ளது. அதனால் வாரயிறுதியில் சென்னைக்கு சென்று உற்றார் உறவினர்களை பார்ப்பதை விட , ஹைதராபாத் அருகிலுள்ள கோல்கொண்டாவிற்கு சென்று வரலாம் என்று முடிவு செய்தேன்.

கோல்கொண்டா ஒரு அற்புதமான அனுபவம். கதைகளில் படித்த கோட்டைகளின் பிரமாண்டம் நேரில் இன்னும் பிரமிப்பூட்டியது. இப்பொழுதெல்லாம் , நம்ம வீடுகளில் ஹாலில் இருந்து கூப்பிடுவது , அடுப்பறையில் உள்ளவர்களுக்கு கேட்பதில்லை. ( கேட்பதில்லையா இல்லை கேட்காதது போல் இருந்து விடுகிறார்களா என்று தெரிவதில்லை). ஆனால் 500 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டுள்ள இந்த கோட்டையின் வாயிலில் இருந்து கை தட்டினால் 400 அடி உயரத்தில் கிட்டத்தட்ட 3 கி.மீ தூரத்தில் உள்ள தர்பாரில் கேட்கிறது. தொலைபேசி இல்லாத அந்த காலத்தில் , ஒரு சுவரின் கடைசியில் பேசுவது , மற்றொரு கடைசியில் கேட்கிறது , இங்கே கைதட்டினால் , அங்கே கேட்கிறது என்று ஓரே acoustics மாயா ஜாலம். தண்ணீர் கொண்டு செல்லும் அதி நவீன அமைப்புகள் மற்றொரு ஆச்சர்யம். காகடியா மன்னர்கள் கட்டிய காளி கோவிலை , பின்னர் வந்த முஸ்லிம் மன்னர்கள் இந்த கோட்டையில் விட்டு வைத்தது , மத நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறது.

இரவில் ஒலி ஒளி காட்சியாக , இந்த கோட்டையின் கதையை சுற்றுலா துறை 1 மணி நேரம் விளக்குகிறது. நேரத்தை குறைத்து , இன்னும் சுவை பட நன்றாக இந்த நிகழ்ச்சியை செய்யலாம்.கல்லூரியிலிருந்து சுற்றுலாவில் வந்திருந்த நூற்றுக்கணக்கான இளசுகள் , கத்தி ஆர்ப்பட்டம் பண்ணி ஒன்றுமே கேட்காமல் செய்து விட்டார்கள். இவர்களின் சந்தோஷங்களையும் , யாரையும் கண்டுகொள்ளாத அவர்களின் தனி உலகமும், கத்தலும் , கேலியும் , கிண்டலும் மற்றொரு உலக அனுபவம். கல்லூரி நாட்களில் , பிரிவு உபசார விழாவில் கூட்டமா திரையரங்கிற்கு சென்று கத்தி ஆட்டம் போட்டு , மற்றவர்களை படம் பார்க்க விடாமல் செய்தது ஞாபகம் வந்தது.

கோஹினூர் வைரம் இருந்த இடம் ,மார்க்கபோலோ புகழ்ந்து எழுதிய இடம் என்று , இதன் சரித்திர புகழ் நீண்டு கொண்டே போகிறது.

http://7wondersofhyderabad.com/golkonda-fort/golconda-fort.html

Friday, September 10, 2004

வானம் எனக்கொரு போதி மரம்

விமானத்தில் பறக்கும் போதும் , ஓய்வறையிலும் ( அமெரிக்க ஆங்கிலப்படி) மட்டும் தான் அதிகம் சிந்திப்பதாக நண்பர் ஒருவர் சொன்னாது , விமானத்தில் செல்லும் போதெல்லாம் எனக்கு ஞாபகம் வந்து விடும். பல வருடங்கள் கழித்து , அலுவல் நிமித்தமாக பயணம். பக்கத்து இருக்கையில் ஹாலந்து நாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர். குசலம் விசரித்து முடித்த பின் , இந்திய ஹாக்கி அணியை பாரட்டியபடி , அவர் கேட்ட முதல் கேள்வியே பதக்கப் பட்டியலில் குட்டி நாடான ஹாலந்து முன்னனியில் இருக்கும் போது , இந்தியா எங்கோ கீழே இருப்பதன் காரணம் என்ன என்பது தான். அரசியல் , விளையாட்டு கட்டமைப்புகளின் நிலைமை , இந்தியர்களின் மன நிலை , கிரிக்கெட்டின் ஆதிக்கம் என்று அலசல் விரிந்தது.நான சில வாரங்களாக குமுறிக் கொண்டிருந்ததை கொட்டித் தீர்த்தேன். என்னுடைய அர்ஜூன்தனமான பதில்களை பார்த்தபின் , உன்னை மாதிரி இளைஞர்கள் ( சத்தியமா , அப்படித்தான் சொன்னார் தம்பிகளா!) ஏன் தாய்நாட்டிற்கு திரும்பி தாய்நாட்டின் வளர்ச்சியில் ஈடுபட்டால் என்ன என்று பொட்டில் அறைந்தால் போல் கேட்டார். நான் வழக்கம் போல எனது நீண்ட கால திட்டத்தை சொல்லி , இன்னும் ஒரு 5 வருடங்களுக்கு வாய்தா வாங்கினேன்.

அடுத்து பள்ளியில் படித்த ஹாலந்து நாட்டு கதை பற்றி பேச்சு சென்றது. கடல் மட்டத்தை விட தாழ்வாக இருக்கும் அந்நாட்டில் , கடல் நீரை தடுத்து நிறுத்தும் சுவரில் ஏற்பட்ட ஓட்டையை பார்த்த சிறுவன் தன் கை விரலால் அடைத்து இரவு முழுவதும் நின்று நாட்டை பேரழிவில் இருந்து காப்பற்றிய கதையைப் பற்றி சொல்லி , என் ஹாலந்து அறிவை அவருக்கு காண்பித்தேன். இரண்டாயிரம் வருடங்களாக , இப்படி கடல் நீர் உள்ளே வந்து விடாமலும் , உள்ளே உள்ள நீரை கடலுக்கு கொண்டு செல்ல அவர்கள் செய்திருக்கும் ஏற்பாடுகளையும் சொல்லி, இத்தகைய இயற்கை சூழலிலும் , இங்கிலாந்து, பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகிய மூன்று பெரிய நாடுகளுக்கு நடுவில் குட்டி நாடாய் இருந்து கொண்டு , பல மொழிகளைக் கற்றுக் கொண்டு வியாபாரம் மூலம் செழிப்பாக இருப்பதாகவும் ஹாலந்து நாட்டுக் கதையை அவர் அளந்தார்.

அடுத்த முறை இந்தியா ஹாக்கியில் ஹாலந்து நாட்டை வெல்லும் போது , கண்டிப்பாக என்னை பற்றி அவர் நினைப்பார் என்று நான் எண்ணுகிறேன்.