Monday, May 14, 2007

மனக்காக்கை

கொல்லையில் கரையும் காக்கை
முற்றத்தில் சொல்லும் பல்லி
என பலன் பார்க்க கேட்டும் உனக்கு
என் குரல் மட்டும் கேட்க மறுப்பதேன்?


பழைய அனுபங்களின்
பிரதிபலிப்பு மட்டுமா நான்?
உண்மையில் உன்னில் இல்லையா?
இல்லை
உண்மையின் உளறல்களின் தொகுப்பா நான்?


மழைக்கால வானவில்லாய்
மௌனத்தில் மட்டும் தெரியாமல்
மனமே நான்
என ஒன்றாய் தெரிவது எப்பொழுது?

கானல் நீரின் ஆழம் அதிகமென
கருங்கற்களை போட்டுத் தவித்தது
தாகத்தில் மனக் காக்கை...

Wednesday, April 25, 2007

துணி துவைக்கும் கல்

கனவில் வந்தது
ஒரு துணி துவைக்கும் கல்
ஆற்றங்கரையோரம் அநாதரவாய்...

காதலையும் காமத்தையும்
காயங்களையும் காணாத பயங்களையும்
மட்டுமே வடித்து இதுவரை வந்திருந்த கனவுகளில்
இது மட்டும் என்ன புதுமையாய் ...

மஞ்சள் அரைத்து மணக்காமல்
மண்ணில் மிதிபடும் ஏக்கமா?
உழைக்கும் வர்க்கத்தின்
உடைகளை துவைக்கும் கர்வமா?

சலவைக்கு உதவுவது
'தான்' எனினும்
சலவைக்கல் என் பெயர் பெறுவது
பளபளக்கும் பளிங்கு என புழுக்கமா?

சலசலக்கும் ஆறும்
சுட்டெரிக்கும் சூரியனும்
துணை கொண்ட இடத்தில்
வந்த அமர்ந்தன் பயனேயன்றி
வேறொன்றுமில்லை என பயமா?..

கறைகளை ரகசியமாய்
காக்காமலும் கழிக்காமலும்
பொதுவில் அடித்து துவைக்க
ஒரு அறைகூவலா?

அடிபட்டாலும்
அடுத்தவருக்கு உதவ
ஒரு உந்துகோலா?

எதற்காக வந்தாய்
என் இனிய சலவைக்கல்லே?

Wednesday, March 14, 2007

வளையட்டும் வரையறை

கடல் அலை
கரை சேர்க்கும் தருணம்
கண நேரம் கவனம் தவறியதால்
கவிழ்ந்தது நண்டு..

நீரில் நீந்தவும்
நிலத்தில் ஊரவும்
அறிந்து என்ன பயன்
நிமிர்ந்து எழ முடியாமல்?

பற்றி எழ ஏதுமில்லை
எனினும் பரிதவிக்காமல்
காற்றையேனும் கைப்பற்றி
கவிழ்ந்த நிலை மாற
தொடர்ந்தது கடும் பிரயத்தனம் ...

வீசும் கால்கள் விசிறிய காற்று
தூக்கி நிறுத்த தூது போகாதா
துள்ளி வரும் அலைகளிடம் !

நீந்தியவை நிலத்தின்
வனம் கண்டு ஊர்ந்ததும்
ஊர்ந்தவை வானத்தின்
விரிவை கண்டு பறந்ததும்
பறந்தவை கடலின்
ஆழம் கண்டு நீந்தவும்
சாத்தியமானது
வரையறைகளை
வளைக்க முடிந்ததால் தானே !

Sunday, March 04, 2007

வின்செண்ட் வான் கோ

உடன் பயணம் செய்த ரஷ்ய நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க , வின்செண்ட் வான் கோ(Vincent van Gogh)வின் ஓவிய அருங்காட்சியத்திற்கு செல்ல நேரிட்டது. www.vangoghmuseum.nl.

ஓவியத்திற்கும் எனக்கும் ஏக தூரம். அதிலும் நவீன ஓவியம் என்றால் சொல்லவே வேண்டாம். என்றாலும் வழக்கம் போல் ஏதாவது ஒரு நகர சுற்றுலா ஊர்தியில் ஒரு நாளை செலவிட்டு ,சில புகைப்படங்களை எடுத்து அற்ப சந்தோஷம் அடையாமல் , ஏதாவது புதிதாய் முயன்று பார்ப்போம் என்று சென்றேன்.

19ஆம் நூற்றாண்டுகளின் இறுதியில் , நவீன ஓவியங்களிக்கு வித்திட்டவர் வான் கோ(வ்).அருங்காட்சியத்தில் வார நாளில் கூட ஏக கூட்டம் அவரின் படைப்புகளுக்கு இருந்த மதிப்பை உடன் புரிய வைத்தது.

ஓவியம் என்பது காட்சியை நகல் எடுக்கும் கலையாக மட்டும் இருந்த காலத்தில் , ஓவியரின் திறமை என்பது ஓவியத்தின் தத்ரூபத்தில் மட்டும் மதிப்பிடப்பட்ட காலத்தில் ஒவியரை ஒரு படைப்பாளியாக காட்ட வித்திட்ட முதல் முயற்சி இது.காட்சியின் நகலாக ஒரு பரிமாணத்தை மட்டும் ஓவியம் காட்டாமல் , காண்பவரின் கற்பனையில் ஆயிரம் கதைகள் சொல்லும் ஒரு படைப்பாக அதை மாற்ற , காட்சியின் வரைவை சிறிதே திரித்து , கருப் பொருளின் வீர்யத்தை உணர்வாக வெளிப்படுத்தும் அவரின் முயற்சிகள் ஓவியத்தை பற்றி சிறிதும் அறியாத என்னைப் போன்றோரை கூட பாதித்தது.

அறுவடை செய்யப்பட்ட வயல் வெளிகள், நகர காட்சிகள், சூரிய காந்தி பூக்கள், காட்டின் பசுமையில் ஊடுரும் ஒளிக்கதிர்கள், படுக்கை அறை, இரவு உணவருந்தும் காட்சி போன்றவை மிகச்சிறப்பாக இருந்தது.

சில படங்கள் விக்கிபீடியாவில் காண கிடைக்கிறது. http://en.wikipedia.org/wiki/Vincent_van_Gogh

அவரது சகோதரரின் ஆதவரவும் , நட்பும் அவர்களின் கடிதங்களும் கண் கலங்க செய்தது. இதன் பின் சில நாட்கள் , அலுவலகத்தில் மாட்டியிருந்த தற்கால நவீன ஓவியங்களை சற்றே முறைத்து பார்த்து , தலையை முட்டிக் கொண்டதுதான் மிச்சம்.

Saturday, February 17, 2007

ஒரு சங்கடமான உண்மை (An Inconvenient Truth)

சனிக்கிழமை கூட அலுவலகம் செல்ல வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்துடன் (பொய்) சாயங்காலம் வீடு திரும்பிய பின் கடைக்கு அழைத்துச் செல்லலாம் என்று அழைத்தால் யாரும் செவி சாய்ப்பதாக இல்லை.நூலகத்தில் இலவசமாக கிடைக்கக் கூடிய படத்தைக் கூட , பணம் செலுத்தி NetFlix-ல் பார்க்கும் என் சாமர்த்தியத்தை மெச்சிய என் மனைவியின் வஞ்சப் புகழ்ச்சி , செலவழித்த பணத்திற்கு வந்த படத்தையாவது பார்த்து விடலாம் என்று நினைவு படுத்தியது. அப்படி பார்த்த படம் தான் An Inconvenient Truth.

இணையத்தை கண்டுபிடித்ததாக பீற்றிக் கொண்டவர் அல் கோர் என்று பின்னிரவு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிம் கிண்டலடிக்கப் பட்டவர் என்ற வகையிலும், தேர்தல் நேரத்தில் தன் ஆளுமையை காண்பிக்க தன் மனைவியை மேடையில் ஆழ முத்தமிட்டவர் என்ற வகையில் தான் எனக்கு , அல் கோர் அறிமுகம்.

ஒரு இரண்டு மணி நேர படத்தை , ஒருவரை பேச வைத்து மட்டும் சுவாரஸ்யமாக எடுக்க முடியும் என்பது ஆச்சர்யமாக இருந்தது. சுஜாதாவின் திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்தின் விதிகளுக்கு அடங்காத படம்.

ஒரு விவாதத்திற்கு உரிய கருத்தைப் பற்றிய ஒருவரின் மேடை பேச்சை, அவரின் சொந்த வாழ்க்கையை கொஞ்சம் இடை சொருகி, இது கட்சியின் பிரசார படமோ அல்லது ஒரு தனிநபரின் அரசியல் பயன் பாட்டிற்கு அப்பாற் பட்டது என்ற நம்பகத் தன்மையை நாசுக்காக நிலை நிறுத்தியது.அல் கோரின் பேச்சுத் திறமையும், கடினமான விஷயங்களை கூட எளிதாக விளக்கிய முறையும் , நகைச்சுவை கலந்த பேச்சும் அருமை.

சில சமயங்களில் , பூதாகரமாக உலகின் எல்லா நிகழ்விற்கும் முடிச்சு போட பார்ப்பது போல இருந்தாலும், இந்த விஞ்ஞானிகளுக்கு வேறு வேலை இல்லை , இன்றைக்கு ஒன்று சொல்லுவார்கள் , நாளைக்கு அதற்கு மாற்று கருத்து தான் சரி என்பார்கள். எல்லாம் இயற்கை பார்த்துக் கொள்ளும்என்று அலட்சியமாக விடக் கூடிய விஷயம் அல்ல. நாம் இயற்கையின் மீது காட்டும் அலட்சியமான வன்முறை மாற வேண்டும் என்பது மட்டும் உண்மை.

படத்தை என் மனைவி இரண்டு முறை பார்த்து விட்டாள். ஒரு நல்ல தலைவரின் தலைமையை அரசியல் இழந்து விட்டது என்ற கருத்து அவளது கணிப்பு. படத்தை பார்த்த என் பத்து வயது மகள் , அடப் பாவிகளா நீங்கள் நல்லா என்ஜாய் பண்ணி விட்டு , எங்களுக்கு பூமியை விட்டு வைப்பீர்களா இல்லை மாட்டீர்களா என்று ஒரு பார்வை பார்த்தாள்.

Thursday, February 15, 2007

மரணம்

உன் உயிரணை உடைந்ததால்
உருவானது இந்த கண்ணீர் நதி
உலராது உறைந்து விடும்
உன் புகழ் தாங்கி

ஓர் நாள்
உப்பளமாய் உய்வு பெறும்
உனக்கு நன்றி நவிலச் சொல்லி

வார நட்சத்திரமாய்
வந்தது போதுமென
துருவ நட்சத்திரமாய்
சுடரச் சென்றாய்

மீண்டும்
துடிக்காதா உன்இதயம் என
துடிக்கிறது பார்
ஓராயிரம் உள்ளம்

வார்த்தையால்
வடிக்க முடியாத
வருத்தத்திற்கு
காரணப் பெயர் தான்
இந்த மரணமோ

நீ தந்த
இந்த அபாய அறிவிப்பொலி
நினைவுபடுத்துகிறது
வாழ்வாங்கு வாழச் சொல்லி

ஐம்புலன் அடங்கினாலும்
ஐம்பூதத்திலும் கலந்து
ஆட்கொள் இனி
நல்வழி நடக்க

Monday, December 18, 2006

காணாமல் போகும் தந்திரம்

காணவில்லை
ஆறாம் வகுப்பு பூதலிங்கத்தை
கலங்கியது நண்பர் கூட்டம்..

வறுமையால்
அத்தை வீட்டில்
படித்து வந்தவனை
பிச்சை எடுக்க
கடத்தியவன் எவனோ?

காணாமல் போகும் பயம்
காணத் தொடங்கியது அனைவரிடமும்

பிள்ளை பிடிப்பவன்
பூசிய விபூதி
வியர்வையில் வசியம் அழிய
தப்பிய பூதலிங்கம்
தாய் தந்தையோடு
இப்பொழுது என
கசிய தொடங்கியது சேதி..

பள்ளி நேரத்தில் கூட
பாத்திரம் விளக்கியவன்
பயத்தையும் விலக்கினான் !
சமூகத்தையும் விளக்கினான் !!
விபூதியில் அல்ல விஷயம் !!!

Tuesday, November 28, 2006

பனி

பூ வரம்
கேட்டதோ
இந்த புல்லினம்
புதிதாய் பூத்துவிட்டதே
இந்த வெண் மல்லி !

வெள்ளை சட்டை
கேட்டதோ
வெற்றுடம்பில் வாடிடும் சாலை
விரிந்து ஆடையானதே
இந்த வெண்பருத்தி!

சருக்கு மரம்
கேட்டதோ
சிறு குழந்தைகள்
வீதிக்கு வந்ததே
இந்த வெள்ளிப் பனி மலை


பரிதியை
வென்றதே
பனி இன்று
பாரியானதாலா
ஈகையில்...

  Posted by Picasa

Thursday, November 16, 2006

முயுனிக் - ஜெர்மனி
















நிப்ஹென்புர்க் அரண்மனை

Nymphenburg Palace

நிப்ஹென்புர்க் அரண்மனை

Marble Table and paintings inside Nymphenburg Palace

நிப்ஹென்புர்க் அரண்மனை

Inside Nymphenburg Palace

BMW பொருட்காட்சி நிலையம்

BMW Museum

ஒலிம்பிக் அரங்கு

Munich Olympic Stadium

புதிய நகர மண்டபம்

Neues Rathaus

Friday, November 10, 2006

ஆகாயம்

ஆகாய ஜன்னல்
காட்டிடும்
ஆயிரம் ஒளிச் சிதறல்கள்

நித்தம் நிறம் மாறும்
அரங்கத் திரையில்
விரிந்து மறையும்
நட்சத்திர நாடகம்

விழித்திரையை அடைய
எடுத்திடும்
ஒளிவருடம் பல

ரசிக்கத் தொடங்கிய
மனம் அதன்
ரகசியம் அறிய
துடித்திட

வியந்தது போதும் என்
விண்ணில் சற்றே
மிதந்து வருகிறேன்
புவியாளே உன்
அன்பு பிடியை சற்றே
தளர்த்தேன்!

வாண வில்லை
வளைத்து அம்பெய்தி
உன்னை கண்சிமிட்டி
ஏளனம் செய்யும் அந்த
நட்சத்திர கூட்டத்தய்
வென்று வருகிறேன்

கடமை தவறிய
கார்மேகங்களை
கண்டித்து வருகிறேன்

அழிவில் தொடங்கியு
உன் ஆரம்பத்தின்
அதிசயத்தை
அறிந்து வருகிறேன்

Sunday, October 22, 2006

தீபாவளி

அமுதா மற்றும் அவரது தோழியர்கள் ஒரு மாத காலமாக திட்டமிட்டு தீபாவளி கொண்டாட்டத்தை நேற்று இனிதே எங்கள் இல்லத்தில் நடத்தினர்.
அப்பொழுது எடுக்கப்பட்ட நிகழ்படத் துண்டுகள் இங்கே. நடந்த அனைத்துப் போட்டிகளிலும் , பெருவாரியான மதிப்பெண்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது , எங்கள் அணியே என்பது இரண்டாவது நிகழ்படத்தின் இரைச்சலில் இருந்து தெளிவாக தெரியும்.



Monday, July 31, 2006

ஓடை

மலையைக் குடைந்த
ஓடை
மௌனமாகும்
மண்ணின் மடியில்

கருங்குகை
கரைந்தெடுத்த
கனிமங்கள்
கரை சேர்க்கும்

நிலவியலை
நிதம் செதுக்கும்
பசுமையைப்
பண்படுத்தும்

எனினும்
நொடி நேரம்
சுவம் கொளாது
பிரிந்து செல்லும்


விதிகளுக்கு அடங்காத
வீர்யம் பிறழாது
மீண்டும்
விண் நோக்கும்

Thursday, July 20, 2006

காய்ந்த மரம்


தளும்பும் குளம்
தரை சேர்த்த மரம்
இருந்த இடம்
முகில் முகரும்
உயரம் எனினும்
மிதந்தது போதும் என
கரையில் காய்வது
கால்களுக்கு ஒய்வு தரவா?
இல்லை! எண்ணத்திற்கு ...?

Sunday, July 02, 2006

டென்மார்க் - சில புகைப்படங்கள்

டென்மார்க் - சில புகைப்படங்கள்













கடற்கன்னி



காவலர் மாற்ற அணிவகுப்பு



குளிர்கால அரண்மணை



மாலுமிகளின் பழைய உல்லாசபுரி



கன்னி முரசு



கிரிஸ்டியன்போர்க் அரண்மனை


Sunday, May 28, 2006

இரண்டு கால் பூச்சி

கடந்து வந்த பாதையின்
காலடி தடங்கள் கலைந்தது

விடிதலும் சாயலும்
விளக்கொளியில்
விரிந்து மறைந்தது

தேன் சிந்திய வானம்
திராவகமாய் எரிந்தது

கோழியின் கூவல்
வாகன இரைச்சலில் குறைந்தது

ஒப்பாரியும் ஓங்கார சிரிப்பும்
நாசூக்கில் நசுங்கியது

ஆட்டமும் பாட்டும்
தொலைக்காட்சி முன் அடங்கியது

பம்புசெட்டு குளியல்
பக்கெட்டில் படிந்தது

பாத்தி கட்டிய தோட்டம்
வரவேற்பறை காகித பூவானது

பூசி மெழுகிய ஒப்பனை
இழிக்கத் தொடங்கியதும்
இனம் புரியாத சோகம்
இதயம் முழுதும் வியாபித்தது

வழியக் காத்திருக்கும்
கண்ணீர் துளிகள் கனத்தது

மாறியது தெரிந்தே என்றாலும்
மருகுவது மட்டும் ஏன்?
வெருமையில் அசைபோடவா!


பட்டாம் பூச்சியானதா
இந்த இரண்டு கால் பூச்சி
இல்லை பச்சோந்தியானதா?

Thursday, May 25, 2006

இரும்புக்கை மாயாவி

காமிக்ஸ் படிக்கும் போது மாயாவி எல்லாருக்கும் பிடிக்கும் தானே!!!
மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாமல் இருப்பதில் எவ்வளவு வசதிகள் உள்ளன.
கண்ணிற்கு தெரியாமல் இருக்கும் போது தான் நம் உண்மை உருவம் தெரியும்.
அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கு தயார் செய்வது போல் லண்டனில் இந்த முயற்சி நிஜமாகவே நடக்கிறதாக இந்த செய்தி தெரிவிக்கிறது.

http://www.newscientisttech.com/article.ns?id=dn9227

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4968338.stm

Monday, May 22, 2006

யூரோவிஷன் பாட்டு போட்டி

யூரோவிஷன் ( Eurovision) பாட்டு போட்டியின் இறுதிப் போட்டியை தொலைக்காட்சியில் பார்க்க நேரிட்டது.பின்லேண்ட் மான்ஸ்டர்ஸ் வெற்றி பெற்றனர்.கெட்ட வேஷம் போட்டால் எல்லாருக்கும் பிடித்துப் போகிறது. ரஷ்யாவின் டிமா மிகவும் உற்சாகத்துடன் பாடியதாக எனக்கு பிடித்திருந்தது.அந்த குழு பாடும் போது அரங்கம் முழுதும் அந்த உற்சாகம் பரவியிருந்தது. யுக்ரைனின் டினாவின் புன்னகை கசிந்த முகபாவனையும்,ஆட்டமும் நன்றாக இருந்தது.

நாடுகள் வாரியாக ஓட்டெடுப்பு முடிவு அறிவிக்கப் பட்ட போது , அண்டை நாடுகளின் மீதான பாசம் பாடல்களின் தரத்தை விட ஓட்டெடுப்பில் வெளிப்பட்டதாக தோன்றியது. ஐரோப்பாவின் அமைப்பு எளிதாக புரிந்தால் போலிருந்தது.

Sunday, May 21, 2006

கியவ்

லக்ஷ்மி மிட்டல் தவிர இந்திய பாஸ்போர்ட்டுடன் யுக்ரைனில் திரிந்த ஒரே ஆள் நான் தான் போலும். விமானம் ஏறியதிலிருந்து திரும்பி வரும் வரை வேறு இந்திய வம்சாவளியினரை காண முடியவில்லை( ஹிமாலயா காபி பார் தவிர). சந்தித்த யுக்ரைனியர்கள் எல்லாம் மிட்டல் ஸ்டீலைப் பற்றி என்னிடம் விவரிக்கவும் தவறவில்லை.

கிய்வ் யுக்ரைனின் மிக அழகிய தலைநகரம். 1600 வருட பழமையும், நவீன தொழிற்சாலைகளின் கலவையும் கொண்ட பசுமையான நகரம்.பல பழமையான கிறித்துவ தேவாலயங்கள் தங்க கோபுரத்துடன் ,கருணை ததும்பும் அற்புதமான ஓவியங்களுடன் வரலாற்றை விவரிக்கின்றன.

வெல்டிங் தொழில்நுட்பத்தில் கிய்வ்வின் பங்கை பறைசாற்றும் வகையில் , பல பாலங்கள் ரிவட் பயன்படுத்தப் படாமல் , வெல்டிங்கிலேயே இணைக்கப் பட்டிருக்கிறது.

சாலை , போக்குவரத்து வசதிகள் இந்தியாவை விட சிறப்பாக இருந்தாலும் , கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பல வகைகளில் இந்தியாவை ஒத்தே இருக்கின்றன. ஐரோப்பிய யூனியனில் சேரும் நாளை கனவுகளுடன் இங்கு மக்கள் காத்துக் கொண்டிருப்பது தெரிகிறது. ஆனால் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.

இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் அடித்தள , கிராமப் புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் படி செய்தால், நாமும் ஆசிய யூனியன் ஆரம்பிக்கலாம்.


இந்தியாவில் வரலாற்று நாயகனாக , மக்களின் பாதுகாவலனாக ஒப்பற்ற தலைவராக அறியப் பெற்ற ரஷ்ய தலைவர் ஸ்டாலினின் ,மறுபக்கத்தை யுக்ரைனின் ஒவ்வொரு அணுவும் கவலையுடன் காட்டுகின்றது.






 

 

 

  

 

 

 

  
Posted by Picasa

Monday, May 15, 2006

யுக்ரைனின் சிராங்கூன் சாலை

யுக்ரைனில் கிய்வ் நகரில் கோடை காலத்தில் வார இறுதியில் அனைவரும் Independence Square சாலையில் கூடி விடுவார்கள். சிங்கப்பூரில் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் சிராங்கூன் சாலையில் சந்திப்பது போல, எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் தான் . வயதான பாட்டிகள் , கடலை மற்றும் பூ விற்றுக் கொண்டும் , காலி பீர் பாட்டில்கள் பொருக்கிக் கொண்டும், இளவட்டங்கள் அனைவரும் பீர் பாட்டிலோடும் ,குழந்தைகள் சர்கஸ் பார்த்துக் கொண்டும் என்று அனைவரும் இந்த சாலையில் தான்.
இங்கு தான் ஆரஞ்சு புரட்சி நடந்ததாம்.

Posted by Picasa

Posted by Picasa

Thursday, May 04, 2006

இது என்ன?


இது என்ன?Posted by Picasa

இங்கே என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று தெரிகிறதா?
தெரியுது,ஆனால் புரியவில்லை என்று கடிக்க வேண்டாம்.ஐராவதம் மகாதேவன் அவர்களை தேடி போகவும் வேண்டாம்.