Wednesday, April 25, 2007

துணி துவைக்கும் கல்

கனவில் வந்தது
ஒரு துணி துவைக்கும் கல்
ஆற்றங்கரையோரம் அநாதரவாய்...

காதலையும் காமத்தையும்
காயங்களையும் காணாத பயங்களையும்
மட்டுமே வடித்து இதுவரை வந்திருந்த கனவுகளில்
இது மட்டும் என்ன புதுமையாய் ...

மஞ்சள் அரைத்து மணக்காமல்
மண்ணில் மிதிபடும் ஏக்கமா?
உழைக்கும் வர்க்கத்தின்
உடைகளை துவைக்கும் கர்வமா?

சலவைக்கு உதவுவது
'தான்' எனினும்
சலவைக்கல் என் பெயர் பெறுவது
பளபளக்கும் பளிங்கு என புழுக்கமா?

சலசலக்கும் ஆறும்
சுட்டெரிக்கும் சூரியனும்
துணை கொண்ட இடத்தில்
வந்த அமர்ந்தன் பயனேயன்றி
வேறொன்றுமில்லை என பயமா?..

கறைகளை ரகசியமாய்
காக்காமலும் கழிக்காமலும்
பொதுவில் அடித்து துவைக்க
ஒரு அறைகூவலா?

அடிபட்டாலும்
அடுத்தவருக்கு உதவ
ஒரு உந்துகோலா?

எதற்காக வந்தாய்
என் இனிய சலவைக்கல்லே?