Wednesday, February 23, 2005

சருகு

சருகு

காலம் மாறியதும்
கடந்தவை மறந்து
கண நேரத்தில்
உதிர்த்த உன்னை விடுத்து
காரணம் காற்றே என நினைத்து
உயிர் விட்டாலும்
உரமாகியாவது உனை
நலமாக்கலாம் என
மக்கி மடிய தவமிருக்கையில்...

காலனாய் வந்த காற்று
கர்ணனாய் தோள் கொடுத்து
எனை உயரத் தூக்கி
உன் அருகில் கொணர்ந்த போது
பாராதது போல்
பாசங்கு காட்டி
பறந்த எனை
கீழே தள்ளியது
ஏன் கிளையே?
புதிதாய் பூத்த
உறவுகளா!

Thursday, February 17, 2005

சாகாவரம்

ரே கர்டஸ்வெய்ல் (Ray Kurzweil) இன்னும் 20 வருடத்தில் சாகாவரம் சுலபமாக கிடைக்கும் என்கிறார்.
நம்ம ஊர் தினத்தந்தியில் வரும் சித்த வைத்தியர் இல்லை இவர். இது நாள் வரை புகழ்பெற்ற ஆராய்சியாளர்.நான் வேலை புரியும் நிறுவனத்திற்கு , 2 வருடங்கள் முன்பு ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு பேச்சாளராக தலைமையுரை ஆற்ற வந்திருந்தார்.மிகச் சிறப்பாக பேசி அனைவரையும் மெய்மறக்க செய்தார். திடீரென்று இப்படி 10 குவளை தேநீர் , அது இது என்று சாகாமல் இருக்க மருந்து கண்டுபிடிக்க இறங்கி விட்டார்.
பணம் பத்தும் செய்யும் என்பது போல பயம் பத்தும் செய்யும் போலும்.

இது வரை கட்டிய Life Insurance premium எல்லாம் வீணாக போய் விடுமோ?

Sunday, February 06, 2005

மற்றும் ஒரு ...

வரப் போகும்
வாரயிறுதியின்
கொண்டாட்ட நிகழ்ச்சி
வரவேற்ற அழைப்பிதழ்
வந்து நினைவில் ஆட

மறைத்து நின்ற
அலுவலக குப்பையை
அவசரமாக கொட்டி விட்டு
ஆனந்தமாக கிளம்பினேன்
வீடு நோக்கி.

அவசரம் புரியாமல்
ஆமையாய் நகர்ந்தது
அன்றைய போக்குவரத்து

அலை அலையாய்
மருத்துவ ஊர்திகள்
பறந்தன
அபாய மணியுடன்

வழிவிட்டு
விழிபார்த்து
ஒதுங்கி நின்றன
ஆமைக் கூட்டம்

வாரயிறுதி குதூகலம்
வடிந்து விட்ட
வருத்தத்தில்
சபித்தது மனம்
மோதிக் கொண்ட
வாகனங்களை


மிஞ்சியிருந்த
சந்தோஷத்தையும்
கிஞ்சித்தும்
விட்டு விட மனமில்லாமல்
சம்பவ இடத்தை
கடந்த போது
முகம் திருப்பி
முடுக்கினேன்

நாளைய நாளிதழில்
மற்றும் ஒரு செய்தி!
புள்ளி விவரத்தில்
மற்றும் ஒரு கூட்டல்!
அபாய வளைவு என்று
மற்றும் ஒரு அறிவிப்பு!
அவ்வளவு தான்
இது என்று
விரைந்தது வாகனம்
வீடு நோக்கி


வாசலில்
என் மற்றும் ஒரு வாகனத்தை
கண நேரம்
காணாத போதுதான்
பதறியது மனது
ஒரு கணம்.

சற்று தள்ளி
நிறுத்தி இருந்த
வாகனம்
தந்ததொரு பாடம்
இனி
ஒவ்வொரு முறையும்
சபிக்காது
சாந்தியடைய
பிரார்த்திக்கும்.