Thursday, December 30, 2004

மன்னிப்பு ஏது?

நில மங்கையின்
கண நேர தடுமாற்றத்தில்
இத்தனை பெரிய
அழிவா!!!

கடவுளின்
கோபமென்றும்
பாவத்தின்
பலன் என்றும்
மரணமடைந்த
மாந்தரின்
மதம் பலவும்
ஆருடம் கூறினாலும்

இறந்ததில்
பெரும்பாலும்
"ஏழை" மதம் அன்றோ!

எளியவரிடம்
காட்டும்
கோபம்
ஏளனம் அன்றோ!

அன்னை
என எண்ணி
உன் மடியில்
உறங்கிய உயிர்களுக்கு
உணவளித்த ஒரே
காரணத்திற்காக
உயிரெடுக்க
என்ன உரிமை
உனக்கு?

பண்ணியது
பாவமென்று
காலம் காலமாய்
அலைகளாய்
எங்கள்
காலடியில் விழுந்து
மன்றாடினாலும்
கண்ணீரால்
எங்கள்
பாதங்களை
கழுவினாலும்
மன்னிப்பு ஏது
உனக்கு?

Thursday, December 23, 2004

Ocean's Twelve

மணிரத்தினமும் , இராமநாராயணனும் சேர்ந்து இயக்கிய படம் மாதிரியான ஒரு கலைக் கூத்து.ஆளாளுக்கு மாறி மாறி பேசுவதிலும்,தட தட வென மாறும் காட்சிகளிலும் , மிக கவனமாக கூர்ந்து கேட்டு / பார்த்து புரிந்து கொள்வதற்காக நுனி இருக்கையில் அமர்ந்து பார்க்க வைத்து விட்டது இந்த படம்.( திரையரங்கில் வேறு யாரும் சிரிக்கும் போது , நாம் மட்டும் சிரிக்காமல் இருத்து விடக் கூடாது பாருங்கள்!!!).கடைசியில் பிரபு தேவா மாதிரி உடம்பை வளைத்து நெளித்து திருடும்"இரவு நரி" வில்லனுடன் , எல்கேஜி தனமாக நீ பெரிய திருடனா , நான் பெரிய திருடனா என்று மோதி சப்பென்று முடிந்து விட்டது.எனினும் ஒரு வித்தியாசமான கமல்தனமான படம்.

ஜுலியா "ப்ரெட்டி ஓல்ட் உமன்" ஆகிவிட்டார்.

Monday, December 20, 2004

கருணை கொலை

கடவுள்
காட்ட தவறிய
கருணைக்கு
தவித்த ஜீவன்களுக்கு
உதவ நினைத்த
உள்ளத்தை
கொலை செய்யாமல்
காக்குமா
கருணை கொலை !!!

Saturday, December 04, 2004

முக்தி

காட்டாற்றிற்கு
கடலில் கலக்க
ஏனிந்த வேகம்!

கூவமும் கங்கையும்
ஒன்றாய் கலந்தாலும்
பாவமும் புண்ணியமும்
அங்கு
பிறப்பதோ அழிவதோ
இல்லை என்பதாலா?

வெய்யிலில் வற்றாமலும்
மழையில் வழிந்தோடாமலும்
பருவகாலத்தை நம்பியிருக்காமல்
என்றும் நிறைவென்றிருப்பதாலா?

ஒருசுவை முக்தியென்று
கலப்பதற்கு முன்
மற்றவர்கள் அறுசுவைக்கு வழிவகுக்க
சிறு ஓடை பலவாறாய்
நீ வேகம் தணிந்து செல்வதில்
கிடைப்பது தான்
உண்மையான முக்தி!!!