Wednesday, April 06, 2005

மேடை பயம்

இன்று மேடை பேச்சு பற்றிய ஒரு பயிற்சிக்கு சென்ற இடத்தில் கேட்ட தகவல்.உலகில் அதிக மக்கள் பயப்படும் முதல் விஷயம் மேடை பேச்சு. அதற்கு அடுத்த இடம் தான் மரணத்திற்கு. செயின்ஃபெல்ட்(Seinfeld) ஒரு முறை நகைச்சுவையாக மரண அஞ்சலி செலுத்தி பேசுபவர்களில் , இப்படி மேடை ஏறி அஞ்சலி சொல்வதை விட மரண படுக்கையில் தானே இருந்திருக்கலாம் என்று எண்ணுபவர்கள் அதிகம் என்று கூறினாராம்.


கல்லூரி வரை மேடை பேச்சு என்றால் , கட்டை குரலில் எதுகை மோனையோடு பேசும் திராவிட சிகாமணிகள் , சுந்தர தமிழில் அடுக்கு மொழியில் மற்றவர்கள் படித்திடாத சங்க கவிதைகளை சுட்டிக் காட்டி பேசும் தமிழ் ஆர்வலர்கள் , இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசும் அரசியல் வாதிகள் , துணுக்கு தோரணம் கட்டும் பட்டிமன்ற சொற்பொழிவார்கள் , குட்டிக் கதைகள் சொல்லி அருள் மொழி வழங்கும் ஆன்மீகவாதிகள் , தத்து பித்தென்று பேசும் திரை நடிகர்கள் என்று தான் பார்த்திருந்தேனே தவிர , சொல்ல வந்த கருத்தை தெளிவாக , எளிமையாக புரியும்படி , மனதில் என்றும் இருக்கும் படி பேசியவர்களை பார்த்தது அரிது.

வேலை பார்க்க ஆரம்பித்த பின் தான் , நிறுவனங்களின் உயர் பதவியில் இருப்பவர்கள் (சிலர்) தான் , நான் பார்த்ததில் மிகச் சிறந்த பேச்சாளர்களாக இருந்திருக்கிறார்கள். மற்றவர்களைப் போல தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக இதை பயன் படுத்தாமல் , கேட்பவர்கள் தான் பேசும் கருத்தில் உடன் பட்டு , நம்பிக்கையோடு உழைப்பதில் தான் , நிறுவனத்தின் வெற்றி இருக்கிறது என்று எண்ணுவதால் இப்படி அமைகிறது போலும். மைக்கேல் பெய்னர் (Michael Feiner) கூட தான் திறமைசாலி என்று மற்றவர்கள் எண்ணும்படி பேசுபவனை விட , கேட்பவர்கள் திறமைசாலிகள் என்று எண்ணும்படி நடந்து கொள்பவனிற்கே வெற்றி அதிகம் என்று கருத்து வரும்படி தனது நூலில் எழுதியுள்ளார்.

1 comment:

பாலு மணிமாறன் said...

நல்ல பதிவு.

காமராஜர் இன்றும் பேசப்படுகிறார் என்றால் அதற்கு அவரது uncomplicated communication skillஸீம் ஒரு காரணம் என்று தோன்றும். உங்கள் பதிவு அதை உறுதி செய்வது போல் தோணுகிறது