Sunday, March 04, 2007

வின்செண்ட் வான் கோ

உடன் பயணம் செய்த ரஷ்ய நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க , வின்செண்ட் வான் கோ(Vincent van Gogh)வின் ஓவிய அருங்காட்சியத்திற்கு செல்ல நேரிட்டது. www.vangoghmuseum.nl.

ஓவியத்திற்கும் எனக்கும் ஏக தூரம். அதிலும் நவீன ஓவியம் என்றால் சொல்லவே வேண்டாம். என்றாலும் வழக்கம் போல் ஏதாவது ஒரு நகர சுற்றுலா ஊர்தியில் ஒரு நாளை செலவிட்டு ,சில புகைப்படங்களை எடுத்து அற்ப சந்தோஷம் அடையாமல் , ஏதாவது புதிதாய் முயன்று பார்ப்போம் என்று சென்றேன்.

19ஆம் நூற்றாண்டுகளின் இறுதியில் , நவீன ஓவியங்களிக்கு வித்திட்டவர் வான் கோ(வ்).அருங்காட்சியத்தில் வார நாளில் கூட ஏக கூட்டம் அவரின் படைப்புகளுக்கு இருந்த மதிப்பை உடன் புரிய வைத்தது.

ஓவியம் என்பது காட்சியை நகல் எடுக்கும் கலையாக மட்டும் இருந்த காலத்தில் , ஓவியரின் திறமை என்பது ஓவியத்தின் தத்ரூபத்தில் மட்டும் மதிப்பிடப்பட்ட காலத்தில் ஒவியரை ஒரு படைப்பாளியாக காட்ட வித்திட்ட முதல் முயற்சி இது.காட்சியின் நகலாக ஒரு பரிமாணத்தை மட்டும் ஓவியம் காட்டாமல் , காண்பவரின் கற்பனையில் ஆயிரம் கதைகள் சொல்லும் ஒரு படைப்பாக அதை மாற்ற , காட்சியின் வரைவை சிறிதே திரித்து , கருப் பொருளின் வீர்யத்தை உணர்வாக வெளிப்படுத்தும் அவரின் முயற்சிகள் ஓவியத்தை பற்றி சிறிதும் அறியாத என்னைப் போன்றோரை கூட பாதித்தது.

அறுவடை செய்யப்பட்ட வயல் வெளிகள், நகர காட்சிகள், சூரிய காந்தி பூக்கள், காட்டின் பசுமையில் ஊடுரும் ஒளிக்கதிர்கள், படுக்கை அறை, இரவு உணவருந்தும் காட்சி போன்றவை மிகச்சிறப்பாக இருந்தது.

சில படங்கள் விக்கிபீடியாவில் காண கிடைக்கிறது. http://en.wikipedia.org/wiki/Vincent_van_Gogh

அவரது சகோதரரின் ஆதவரவும் , நட்பும் அவர்களின் கடிதங்களும் கண் கலங்க செய்தது. இதன் பின் சில நாட்கள் , அலுவலகத்தில் மாட்டியிருந்த தற்கால நவீன ஓவியங்களை சற்றே முறைத்து பார்த்து , தலையை முட்டிக் கொண்டதுதான் மிச்சம்.

No comments: