Saturday, November 24, 2007

ஆயிரம் ஜன்னல்

தூக்கம் வராத
இரவு அது!
பழைய நினைவுகளை
அசைபோட ஆயாசம்!
எதிர்கால பேராசை
கனவுகளோ எதுக்களித்தன!
கற்பனையின்
துச்சாதன கைகள் களைத்திருக்க
தற்காலிக மரணம் போல்
மரத்துப் போனது மனம்
வேறு செய்வதறியாது!!!

இமைகளின் வேலை
நிறுத்த போராட்டத்தில்
சமாதானம் பேச விரும்பாமல்
தூக்க தொழிற்சாலையை
காலவரையற்று இழுத்து மூடி
வீம்பாய் எழுந்தேன்!

இருளையும் நிலவையும்
இணைத்து உருக்கிய
இரவின் சுகந்தம்
மூடிய ஜன்னலின் சல்லடையில்
சிக்காமல் வழிந்து உள் வந்தது!

எழுந்து அந்த
வெளிச்ச பெட்டகத்தை திறந்து
முகம் துளைத்து
உயிர்ப்பிக்க
இதழ் தேடினேன்

வீசிய காற்றில்
வேப்பங்கொழுந்து
ஒன்று முகத்தில் அடித்து
மனப்பேயை
விரட்டிச் சென்றது

முதிர்கன்னிகளின்
உருவக புகைப்படச் சட்டம்
அன்றோ அணிந்திருந்தது
புது ஓவியம்

அது
கீறிச்சிட்ட அணிலின்
வாலொன்று வரைந்து சென்ற
வான்வெளியின்
நட்சத்திர ஓவியம்

தூங்காத கண்களின்
கவலை போய்
இது வரை
காண்காத கண்களின்
கவலை வந்தது

தட்டினாலும் திறக்க
தயங்கும்
தாழ்ப்பாள் அணிந்த
வாயிற் கதவுகளில்
முட்டி மோதாமல்
இனி
எட்டாத உயரத்தில்
என்றென்றும் திறந்திருக்கும்
ஆயிரம் ஜன்னல் வழி காண
ஆயத்தமானேன்!!!

No comments: