Wednesday, March 14, 2007

வளையட்டும் வரையறை

கடல் அலை
கரை சேர்க்கும் தருணம்
கண நேரம் கவனம் தவறியதால்
கவிழ்ந்தது நண்டு..

நீரில் நீந்தவும்
நிலத்தில் ஊரவும்
அறிந்து என்ன பயன்
நிமிர்ந்து எழ முடியாமல்?

பற்றி எழ ஏதுமில்லை
எனினும் பரிதவிக்காமல்
காற்றையேனும் கைப்பற்றி
கவிழ்ந்த நிலை மாற
தொடர்ந்தது கடும் பிரயத்தனம் ...

வீசும் கால்கள் விசிறிய காற்று
தூக்கி நிறுத்த தூது போகாதா
துள்ளி வரும் அலைகளிடம் !

நீந்தியவை நிலத்தின்
வனம் கண்டு ஊர்ந்ததும்
ஊர்ந்தவை வானத்தின்
விரிவை கண்டு பறந்ததும்
பறந்தவை கடலின்
ஆழம் கண்டு நீந்தவும்
சாத்தியமானது
வரையறைகளை
வளைக்க முடிந்ததால் தானே !

1 comment:

rajkumar said...

Brilliant