Thursday, June 02, 2005

பெயர் தேடும் படலம்

பஸ் ஸ்டாப்பில்
பார்த்த முகம்
பழகியதாய் தோன்ற
நினைவிடுக்கில்
சிக்கித் தவித்த பெயரை
வெளிப்படுத்த
தொடங்கிய துலவல்
தொடர்ந்தது நாளெல்லாம் !

முதலெழுத்தில் ஆரம்பித்து
முத்தெடுப்பது போல்
மூழ்கி பார்த்தும்
முடியாமல் தொடர்ந்தது
முயற்சி!

இயந்திர கதியாய்
இயங்கிய பொழுதும்
இடையிடையே இடித்துப் பார்த்த
இளம் பருவத்து ஞாபகங்கள்
இடர்படுத்தியது
இழந்து விட்ட பல பெயர்களை!

வாய் குவித்து
சொல்லிப் பார்த்தும்
வர மறுத்து
அடம் பிடித்தது
தொலைத்து விட்ட
வாழ்க்கையின் தொடர்ச்சிகள்!!!

விடி வெள்ளி கீற்றாய்
வீச்சொளியாய்
விரைந்து வந்த சம்பவங்கள் பல
விடை காணுமுன்
விலகியே சென்றது !

மறந்தது எது
மறக்கச் செய்தது எது
என மருகி
மணி அடித்ததும்
வீடு திரும்பும்
எனை
கடந்து சென்ற வாகனத்தில்
சென்ற முகம்
திரும்பி பார்த்து
கண் சுருக்கி
சிந்திக்க தொடங்கியது
எதேச்சை தானா?

5 comments:

rajkumar said...

very good poem

anbudan

rajkumar

வீ. எம் said...

அடிக்கடி நிகழும் ஒரு சாதாரன நிகழ்வை அழகிய கவிதை யாக வடித்திருக்கின்றீர்.. ஆருமை !! வாழ்த்துக்கள்..

வீ .எம்

Indianstockpickr said...

good one!

Anonymous said...

அழகிய கவிதை. மறதியை மறக்க முடியாது போலும் :)

Vanthiyathevan said...

யாருப்பா அது வாகனத்துல?

நல்ல கவிதை!!!